ஓட்டு போடும் போது சின்ன பிள்ளைங்க புகுந்து.. ரகுபதி பேச்சுக்கு சிரிக்க முடியாமல் தவித்த விஜய்!.
3 மாதத்தில் ரூ.22000 கோடி கடன்.. தவெக ஆட்சி முடியும்போது..?- தங்கம் தென்னரசு கேள்வி
"தவெக அரசு 5 ஆண்டுகளை நிறைவு செய்யும்போது அரசின் கடன் ரூ.20 லட்சம் கோடியாக உயரும் என நான் அப்போது கூறியிருந்தேன். இன்று பேட்டியளித்த நிதித்துறை செயலாளர், கடன் சுமை குறையாது என ஒப்புதல் வாக்குமூலமாக கொடுத்துள்ளார்" என திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நிதி அமைச்சர் மரிய வில்சன் சட்டப்பேரவையில் 2026-27 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார்.
பட்ஜெட் குறித்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், "தமிழ்நாடு முன் எப்போதும் இல்லாத வகையில் கடன் வாங்கியுள்ளது. இதற்கு முன்பு இருந்த ஆட்சியை விட திமுக ஆட்சியில் கடன் அதிகமாக வாங்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் மரிய வில்சன் கூறினார்.
கடன் சுமைக்கு திமுகவே காரணம் என தவெக கூறுகிறது. ஆனால் கடன் வாங்கக்கூடிய விகிதம் உயர்ந்துகொண்டு செல்லக்கூடிய நிலையே வரும். மத்திய அரசின் விதிகளுக்குட்பட்டு மாநிலங்கள் கடன் வாங்குகின்றன.
கடன் வாங்குவதை குறைக்க முடியாது. மத்திய அரசின் அனுமதியுடன் தான் கடன் வாங்குகிறோம் என நிதித்துறை செயலாளரே இன்று கூறியுள்ளார்.
தமிழக அரசு இந்த 3 மாதங்களில் ரூ.,22,000 கோடி கடன் வாங்கியுள்ளது. ரூ.3000 கோடி மூலதனச் செலவை குறைத்துக் காட்டியுள்ளனர். இதே நிலை நீடித்தால் அடுத்த 5 ஆண்டுகளில் 10 லட்சம் கோடி கடன் வாங்கவேண்டிய சூழல் தவெகவுக்கு ஏற்படும்.
நிதிநிலை அறிக்கை மக்களின் எதிர்பார்ப்புகளை பொய்த்துப்போகச் செய்துள்ளது. வெள்ளை அறிக்கையில் திமுக அரசை குறை கூறிவிட்டு அதையேதான் இப்போது தவெக அரசு செய்துள்ளது. வருவாயை கூட்டுவதற்கான வழிகள் பட்ஜெட்டில் இல்லை. தமிழக அரசு வெளியிட்டுள்ள பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது.
லீக்கேஜ் எல்லாம் அடைத்து மாநிலத்தின் சொந்த வருவாயை கூட்டுவோம் என்றெல்லாம் கூறினார்கள். ஆனால், பட்ஜெட்டில் அப்படியெல்லாம் எதுவும் இல்லை. திமுக அரசு மீது அவர்கள் கூறிய குற்றச்சாட்டுகளை விட, இந்த அரசு மோசமாக செயல்படுகிறது.
பள்ளிக் கல்வித் துறைக்கான நிதி குறைக்கப்பட்டுள்ளது. தொல்லியல் துறைக்கு வெறும் ரூ. 1 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது போதாது. தேர்தல் வாக்குறுதிகள் பட்ஜெட்டில் இல்லை. மகளிருக்கு மாதம் ரூ.2,500 வழங்குவது குறித்து பட்ஜெட்டில் குறிப்பிடவே இல்லை" எனத் தெரிவித்துள்ளார்.