வைப்பூர் சிவன்கோயில், அரியலூர் மாவட்டம்

vaippur-sivan-temple

திருமானூரின் கிழக்கில் கொள்ளிடத்தினை ஒட்டி செல்லும் சாலையில் 20கிமி தூரம் சென்றால் தூத்தூர் அடையலாம். பழமையான சிவாலயம், பெருமாள் கோயில், கணபதி கோயில் செல்லியம்மன் கோயில் நாச்சியாரம்மன் கோயில் ஆகியவற்றினை உள்ளடக்கிய பெரிய கிராமம்.

இந்த ஊரின் தெற்கில் பிரம்மாண்ட கொள்ளிடம், ஊரின் கிழக்கில் செல்லும் மருதையாறு அதில் கலக்கிறது. இந்த தூத்தூரை ஒட்டி மனித முயற்சியால் உருவான பொன்னாறு எனும் வெட்டு வாய்க்கால் மருதையாற்றை சுரங்க வழி மூலம் கடந்து செல்கிறது. இதனை மூன்று ஆறுகள் சங்கமிக்கும் இடம் என கூறுவர். இது வைப்பூர் எனும் சிற்றூர் ஆகும். வைப்பு' என்பது நிலம் அல்லது ஊரைக் குறிக்கும். இந்த இடத்தில் பொன்னாற்றின் கரையில் தான் இந்த சிறிய சிவாலயம் அமைந்துள்ளது.

பெரிய அரச மரம் ஒன்று வளர்ந்து நிற்கிறது. அதனடியில் சிறிய விநாயகர் திருக்கோயில் அமைந்து உள்ளது. அந்த விநாயகர் கோயிலை ஒட்டி ஒரு பெரிய லிங்கமூர்த்தி ஒருவர் பிரதிஷ்டை செய்யப்பட்டு தேனுபுரீஸ்வரர் என பெயரிடப்பட்டு உள்ளார். விநாயகர் கோயில் வாயிலில் ஒரு சிற்பம் கை கூப்பிய நிலையில் உள்ளது யாரென தெரியவில்லை.

கொள்ளிட வெள்ளமோ கால வெள்ளமோ கொண்டு செல்ல இயலாத இறைவன் நமக்காக ஒரு அமைதியான திட்டு பகுதியில் கோயில் கொண்டுள்ளார்.