விஜய், சங்கீதா விவாகரத்து வாபஸ்.. பின்னணி என்ன?

sangeetha-vijay-divorce-court-case
விஜய், சங்கீதா விவாகரத்து வாபஸ்.. பின்னணி என்ன?

முதல்வர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து விவகாரத்தில், செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் காலை முதல் பிற்பகல் வரை அடுத்தடுத்து நிகழ்ந்த மாற்றங்கள் ஒட்டுமொத்த தமிழகத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளன.

காலை 11 மணி அளவில் தொடங்கிய வழக்கின் விசாரணையில் இருதரப்புக்கும் இடையே காரசாரமான வாதங்கள் எழுந்த நிலையில், பிற்பகல் விசாரணையின் போது வழக்கு முற்றிலும் முடித்துவைக்கப்பட்டுள்ளது.

காலை 11 மணி: லண்டனில் இருந்து ஆஜரான சங்கீதா

இன்று காலை சுமார் 11 மணியளவில், செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் நீதிபதி முன்பாக இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரரான சங்கீதா லண்டனில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜரானார்.

விசாரணை தொடங்கியதும் முதல்வர் விஜய் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. சங்கீதா தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர்கள், "வழக்கில் எதிர்மனுதாரராக இருக்கும் விஜய்யும் நேரில் அல்லது காணொலி வாயிலாக ஆஜராக வேண்டும்" என்று மிக உறுதியாகக் கோரிக்கை வைத்தனர். நீதிமன்றமும் இது தொடர்பாக கேள்வி எழுப்பியது.

விஜய் தரப்பு விளக்கம் & ஒத்திவைப்பு கோரிக்கை

இதற்கு பதிலளித்த விஜய் தரப்பு மூத்த வழக்கறிஞர், "தற்போது தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் மிக முக்கியமான கட்டத்தில் நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் என்ற பொறுப்பில் அவர் பேரவை நிகழ்வுகளில் பங்கேற்க வேண்டிய சூழல் இருப்பதால், அவரால் தற்போது ஆஜராக இயலவில்லை" என்று விளக்கமளித்தார். மேலும், வழக்கினை வேறொரு தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைத்தார்.

ஆனால், சங்கீதா தரப்போ, "தொடர்ச்சியாக காரணங்கள் கூறி வழக்கு தள்ளிப்போகிறது.. இன்றே இந்த விசாரணையை நடத்த வேண்டும். விஜய்யையும் காணொலி வாயிலாக உடனடியாக ஆஜராக உத்தரவிட வேண்டும்" என்று பிடிவாதமாக வலியுறுத்தியது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை பிற்பகல் நேரத்திற்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

பேரவையில் இருந்து கிளம்பிய விஜய்: எழுந்த கேள்விகள்

நீதிமன்றம் பிற்பகலுக்கு விசாரணையை ஒத்திவைத்ததைத் தொடர்ந்து, தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவை நிகழ்வுகளில் பங்கேற்றிருந்த முதல்வர் விஜய், பேரவை வளாகத்தை விட்டுப் புறப்பட்டுச் சென்றதாகத் தகவல்கள் வெளியாகின.

அவர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி காணொலி வாயிலாக இணைவதற்காகச் சென்றாரா அல்லது வழக்கறிஞர்களுடன் அவசர ஆலோசனை நடத்துவதற்காகச் சென்றாரா அல்லது அரசு பணி நிமித்தமாக சென்றாரா என்ற தெளிவான விவரங்கள் உடனடியாக வெளிவரவில்லை. இதனால் பிற்பகல் 2 மணிக்கு நீதிமன்றத்தில் என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு உச்சக்கட்டத்தை அடைந்தது.

பிற்பகல் 2 மணி: 15 நிமிட வாதமும் வழக்கில் திருப்பமும்!

பிற்பகல் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மீண்டும் காணொலி வாயிலாக லண்டனில் இருந்து சங்கீதா இணைந்தார். நீதிபதி சுஜாதா முன்னிலையில், சங்கீதா சுமார் 15 நிமிடங்கள் இடைவிடாது தனது தரப்பு கருத்துகளையும், நிலைப்பாடுகளையும் தெளிவாகவும் விரிவாகவும் முன்வைத்தார்.

தொடர்ந்து பேசிய அவர், தான் தாக்கல் செய்திருந்த விவாகரத்து மனுவை முழுமையாகத் திரும்பப் பெற்றுக்கொள்வதாக அதிரடியாக அறிவித்தார்.

எதிர்ப்பு தெரிவிக்காத விஜய் தரப்பு : வழக்கு முடித்துவைப்பு

சங்கீதாவின் இந்த திடீர் முடிவைத் தொடர்ந்து, விஜய் தரப்பு வழக்கறிஞர்களிடம் நீதிபதி கருத்து கேட்டார். மனுவை வாபஸ் பெறுவதில் தங்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை என்று விஜய் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பு வாக்குமூலங்களையும் முறைப்படி பதிவு செய்துகொண்ட நீதிபதி, சங்கீதா தாக்கல் செய்திருந்த விவாகரத்து வழக்கினை அதிகாரப்பூர்வமாக முடித்து வைத்து உத்தரவிட்டார்

காலை 11 மணிக்கு விஜய்யின் ஆஜர் குறித்து காரசாரமாகத் தொடங்கி, பேரவை நிகழ்வுகள் வரை எதிரொலித்த இந்த விவாகரத்து வழக்கு, பிற்பகலில் சங்கீதாவின் 15 நிமிட வாக்குமூலத்திற்குப் பின் சுமுகமாக முடிவுக்கு வந்துள்ளது.