விஜயபாஸ்கரின் இணைப்பு விழாவிலும் பங்கேற்காத விஜய்? பின்னணி?

admk-former-minister-vijayabaskar-tvk-joined-cm-vijay
விஜயபாஸ்கரின் இணைப்பு விழாவிலும் பங்கேற்காத விஜய்? பின்னணி?

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், ஆனந்தன் மற்றும் வளர்மதி உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் தவெகவில் இணைந்துள்ள நிலையில், இந்த இணைப்பு விழாவிலும் கூட முதல்வர் விஜய் பங்கேற்கவில்லை. அதுமட்டுமல்லாமல் விஜயபாஸ்கரை வரவேற்க தவெகவினர் முன் வரவில்லை. அங்குள்ள அதிமுக நிர்வாகிகளையும் விஜயபாஸ்கர் தான் வரவேற்று வருகிறார். இதனால் அதிமுகவினருக்கு விஜய் உரிய மரியாதை கொடுக்கவில்லை என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.

அதிமுக முன்னாள் அமைச்சர்களான சி விஜயபாஸ்கர், எம்ஆர் விஜயபாஸ்கர், எம்எஸ்எம் ஆனந்தன் மற்றும் வளர்மதி உள்ளிட்டோர் தலைமையில் புதுக்கோட்டை, திருச்சி மற்றும் கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான அதிமுகவினர் இன்று தவெகவில் இணைந்துள்ளனர். கடந்த சில நாட்களாகவே தவெகவில் இணைவது தொடர்பாக விஜயபாஸ்கர் தீவிர பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வந்தார்.

அதற்கேற்ப புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து தனது ஆதரவாளர்களை 200 பேருந்துகள், 500 கார்களில் சென்னைக்கு அழைத்து வந்து பிரம்மாண்டமாக விஜயபாஸ்கர் தவெகவில் இணைந்துள்ளார். இந்த இணைப்பு விழாவில் அமைச்சர்கள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன், அருண்ராஜ், ஸ்ரீநாத் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

விஜயபாஸ்கரின் இந்த செயல்பாடுகள் அதிமுகவின் அடிமட்டத்தையே ஆட்டிப் பார்த்துள்ளதாக பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த விழாவில் முதல்வர் விஜய் பங்கேற்கவில்லை. ஆட்சிக்கு வருவதற்கு முன் தவெகவில் எந்த மாற்றுக் கட்சி நிர்வாகிகள் இணைந்தாலும், விஜய்யை நேரில் சந்தித்துதான் இணைவார்கள். நாஞ்சில் சம்பத், ஜேசிடி பிரபாகர் உள்ளிட்டோர் விஜய்யை அவரின் வீட்டில் சந்தித்து தவெகவில் இணைந்தனர்.

ஆனால் ஆட்சிக்கு வந்த பின் அதிமுகவினர் சாரை சாரையாக தவெகவில் ஐக்கியமாகி வருகின்றனர். முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, உடுமலை ராதாகிருஷ்ணன், வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோர் பனையூர் அலுவலகத்தில் இணைந்த போதும் கூட முதல்வர் விஜய் அங்கு வரவில்லை. அவர்கள் கட்சியில் இணைந்து சுமார் ஒரு மாதமாகியும், இதுவரை அவர்கள் யாரும் விஜய்யை சந்திக்கவில்லை.

தற்போது விஜயபாஸ்கர் ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் தவெகவில் இணைந்த போதும் கூட விஜய் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. இன்னும் சொல்லப் போனால், கட்சியில் இணையும் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் முன்கூட்டியே வந்துவிட்டனர். ஆனால் அமைச்சர்கள் புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் தாமதமாகவே வந்தனர்.

இதனால் விஜயபாஸ்கரே ஒவ்வொரு அதிமுக நிர்வாகியையும் தவெகவுக்கு வரவேற்க வேண்டிய நிலை உருவாகியது. வேறு வழியின்றி பேப்பரில் எழுதி வைத்த ஒவ்வொரு பெயரையும் வாசித்து விஜயபாஸ்கர் அவர்களை தவெகவுக்கு வரவேற்றார். இதனால் தவெகவில் இணையும் அதிமுகவினருக்கு விஜய் உரிய மரியாதையை கொடுக்கவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.