ஜோதிடத்தில் ஒரு பலன், மாறுபாடான அமைப்பில் நடக்கப் போகிறது என்பது நமக்கு தெரிந்தால், அதை மாற்ற ,உடனே குருவின் பார்வை ,அந்த அமைப்பிற்கு கிடைக்கிறதா? என்று தான் முதலில் கண்கள் தேடும்.
சில நேரங்களில் குருவின் பார்வையில் இருந்தாலும், பலன்கள் மாறுபட்டு நடந்திருக்கும் .ஏன் என்று ஆராயும் பொழுது, குரு சில நிலைகளில் தன்னுடைய பார்வை பலத்தில் ,பங்கப்பட்டு பார்த்திருக்கும்.
பொதுவாக ஜோதிடத்தில் குரு பகவான் சுப கிரகம்.
அதே நேரத்தில் குருவும் ஒரு கிரகம் தான்.
வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்பதை போல ,ஜோதிடத்தில் நைசர்க்கிய பலத்தின் அடிப்படையில் குருவை விட, வலுவான கிரகங்கள் இருக்கத்தான் செய்கின்றன.
கைக்கு எட்டிய லட்டு, வாய்க்குள் சென்றால் தான் , இனிப்பை அனுபவித்து உணர முடியும்.
கைக்கு மட்டும் எட்டி என்ன பிரயோஜனம்?
அதுபோல் குரு பார்வை ஒரு இடத்திற்கு கிடைக்கிறது என்றால், பங்கப்படாமல், நேர் புள்ளியில் பார்த்தால் மட்டுமே அதன் பலன் சுபமாக இருக்கும்.
சரி
குரு பங்கப்படும் அமைப்புகள்.
1.ராகுவுடன் 3 டிகிரிக்குள் கிரகணம் ஆகி இருக்கும் குரு ,தன்னுடைய சுய பலத்தை இழந்து ,அதன் பார்வைத் திறனில் பொலிவு இருக்காது.ராகு சுபத்துவம் ஆனாலும், குருவின் பார்வையும் ,குருவும் பலமிழந்தே இருக்கும்.
2. சூரியனுடன் அஸ்தமனமான அமைப்பிலும், குருவின் பார்வைக்கு முழு பலம் இருக்காது.
3. பாவக அமைப்பின்படி, அதாவது ஒரு ராசி கட்டத்தில் கடைசி
5 டிகிரியில் குரு இருந்து, ஒரு பாவகத்தை பார்க்கும் ,குருவின் பார்வை , அந்த பாவகத்துக்கு முழு பலத்துடன் இருக்காது.
4.செவ்வாயின் நான்காம் பார்வையிலும் ,சனியின் மூன்றாம் பார்வையிலும் இருக்கும் குரு, சனி செவ்வாய் ,சேர்ந்து,பார்க்கும் இடம் பாழ்படும் என்ற விதியின் கீழ், பலவீனமான அமைப்பிலேயே குரு இருக்கும்.இங்கு குரு எந்த அமைப்பிலும் சனி செவ்வாயை பார்க்க முடியாது. இந்த அமைப்பிலும் குருவின் பார்வைக்கு பலம் குறைந்தே இருக்கும்.
5. குரு முற்றிலும் நீசம் இழந்த நிலையிலோ ,முற்றிலும் நீசம் பெற்ற நட்சத்திரத்தின் சாரத்தில் அமர்ந்து, பார்க்கும் பொழுது ,அதன் பார்வை பலம் குறைவாகவே இருக்கும்.
மேற்சொன்ன 5 நிலைகளில், குரு இருக்கும் பொழுது, அதனுடைய இயல்பு மாறுபட்டே இருக்கும்.
ஜாதகத்தில் குரு எந்த அமைப்பில் வலுவாக உள்ளது என்பதைப் பொறுத்தே, குருவின் பார்வைக்கும் பலம் இருக்கும்.
பொத்தாம் பொதுவாக குருவின் பார்வையில் இருக்கிறது என்பதை மட்டும் வைத்து பலனை கணக்கிட்டால் பலன் மாறுபாடானதாக அமையும்.
குரு கருணையோடு பார்த்தால் கற்பூரம் எரியும்.
பாழ்பட்டு,பங்கப்பட்டு நிற்கும் குரு, பார்வை பலம் குறைந்து பாஸ்பரஸை பார்த்தால், பாஸ்பரஸ் தானாக பற்றிக்கொண்டு, இருக்குமிடத்தை கெடுக்கத்தானே செய்யும்.
பவராக இருந்து பார்த்தால்தான் பலன் கிடைக்கும்.தவறாக தடுக்கி விழுந்து பார்த்தால், தர்ம அடிதான் விழும்.
ஓம் நமசிவாய