Breaking News :

Wednesday, May 08
.

திருவாரூர் தியாகராஜர் கோவில்


திருவாரூர் தியாகராஜ
சுவாமி கோவிலை 
சுற்றிப் பார்க்க
முழுமையாக ஒருநாள் ஆகும் அவ்வளவு பெரிய கோவில் இக்கோவில். 

திருவாரூர் கோயிலின் உள்ளே இருக்கும் சன்னதிகள், கிட்டத்தட்ட தெருவோர கோயில்களின் அளவுக்கு பெரிய அளவில் இருக்கும்.
திருவாரூரில் கமலாம்பிகை, அல்லியங் கோதை, நீலோத்பலாம்பாள் என முப்பெருந் தேவியர்கள் திருவருள் புரிகிறார்கள்.

மூலவர் வன்மீகநாதர் தலையில் பிறைச்சந்திரனை சூடியுள்ளதைப் போல, இத்தலத்து நாயகி கமலாம்பிகையும் சந்திரனை நெற்றியில் சூடியிருக்கிறாள். கலை மகள், மலைமகள், அலைமகள்  ஆகிய முப்பெரும் தேவியரின் அம்சமாக அம்பிகை விளங்குகிறாள். 

இத்தலத்துக்கு சென்று தியாகேசரை வணங்கினால் திருமண வரம், குழந்தை வரம், கல்விமேன்மை, வேலை  வாய்ப்பு, தொழில் விருத்தி, உத்தியோக உயர்வு ஆகியன நிறைவேறும். அம்மன் சந்நதியில் உள்ள அட்சர பீடத்தை வணங்கினால் கல்வியறிவு பெருகும்.

இத்தலத்தில் உள்ள பக்தர்கள் ராகு கால துர்க்கையை வழிபட்டு பதவி உயர்வு பணிமாற்றம் உள்ளிட்ட பல காரியங்கள் வெற்றியடையப் பெறுகிறார்கள் என்பது நம்பிக்கை..

இத்தலத்து சண்முகரை வழிபட்டால் பகை விலகும் நீலோத்பலாம்பாளை வழிபட்டால் அர்த்தஜாமத்தில் நைவேத்தியம் செய்து பால் சாப்பிட்டால் குழந்தை வரம் கிடைக்கிறது.

ருண விமோசனப் பெருமானை வழிபட்டால் கடன் தொல்லை, உடற்பிணிகள் ஆகியன
விட்டு விலகும். மூலவர் வன்மீகி நாதரை வழிபட்டால் எண்ணற்ற வரங்களும், செல்வ செழிப்பும் கிடைக்கும், பாவங்கள் நீங்கும், ஆணவம் மறையும். 

அம்மன் சன்னதியில் உள்ள அட்சர பீடத்தை வணங்கினால் கல்வியறிவு பெருகும். ஆடிப் பூரம், ஆடி வெள்ளி, தை வெள்ளி ஆகிய தினங்களில் இங்குள்ள அம்பாளை வழிபட்டால் அருள்பெறலாம். 

பங்குனி உத்திரத்தில் இங்கு நீராடினால், கும்பகோணத்தில் 12 மகாமகம் நீராடிய பலன் உண்டு என்பது ஐதீகம்.

நாகதோஷம் உள்ளவர்கள் குளத்தின் நடுவே நாகநாதர் சன்னதியில் வழிபடுகின்றனர்.
கமலாம்பிகை திருக்கோயில் மூன்றாவது பிரகாரத்தில் எழுந்துள்ள அம்பிகை சிரசில் சர்வேஸ்வரனைப் போன்று கங்கையையும், பிறையையும் சூடிக்கொண்டு யோக வடிவில்
அமர்ந்திருக்கின்றாள். 

அம்பாள் கோயிலின்
மேற்கு மூலையில் அக்ஷர பீடமுள்ளது. இதில் பீடமும் ஐம்பத்தோரு எழுத்துக்கள் எழுதப்பெற்ற திருவாசியுமே உள்ளன. 
நின்று தியானித்துச் செல்லவேண்டும்.

தேர்களிலேயே திருவாரூர் தேர் தான் மிக பெரியது என்பது அனைரும் அறிந்த ஒன்றே. 
சிவபெருமான் இத்தலத்தில் மட்டும் 364
திருவிளையாடல்கள் நிகழ்த்தியுள்ளார்.

திருவாரூரில் பிறந்தால் முக்தி என்பதால்,எமனுக்கு வேலை இல்லாமல் போனது.
எனவே இங்கு எமனே, சண்டிகேஸ்வரராக
இருந்து இறைவனை வேண்டி தன் வேலையை காப்பாற்றிக் கொண்டார். எமபயம் உள்ளவர்கள் இங்கு வழிபடுவது சிறப்பு.

திருவாரூரில் தியாகராஜரின் முக தரிசனம்
காண்பவர்கள், 3 கி.மீ. தொலைவிலுள்ள விளமல் சிவாலயத்தில் பாத தரிசனம் காண்பது சிறப்பு.

சிதம்பர ரகசியம் போல தியாகராஜருக்கு பின்னுள்ள மூலஸ்தானத்தில் ரகசியம் உள்ளதாக கூறப்படுகிறது.

பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை தான்
சிவாலயங்களில் பிரதோஷ பூஜை நடத்தப் படும். ஆனால், திருவாரூர் தியாகராஜர் கோயிலில் தினமும் மாலை 
6 மணிக்கு பிரதோஷபூஜை நடத்தப்படுவது இக்கோவிலின் தனிச்சிறப்பு. இதை ‘நித்தியபிரதோஷம்` என்பார்கள். 

இந்த நேரத்தில் தியாகராஜரை முப்பத்து முக்கோடி தேவர்களும் தரிசிப்பதாக ஐதீகம். எனவே, இந்தக்கோயிலுக்கு மாலை வேளையில் சென்றால், எல்லா தேவர்களின் அருளையும் பெற்ற புண்ணியம் கிடைக்கும். நீங்களும்  ஒருமுறை திருவாரூர் வந்து தியாகராஜரை தரிசித்து விட்டு செல்லலாமே!

ஓம் நமசிவாய 

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.