Breaking News :

Sunday, April 28
.

காரடையான் நோன்பு ஏன்?


14,03.2024 வியாழக்கிழமை அன்று காரடையான் நோன்பு.

புகுந்த வீட்டுக்கும் பிறந்த வீட்டுக்கும் செல்வவளம் சேர்க்கும் தீர்க்கசுமங்கலியாக வாழவைக்கும் கணவரின் ஆயுள் அதிகரிக்கும்
பார்வதி தேவி செய்த சிவலிங்க பூஜை;

பிரிந்து இருக்கும் கணவன்– மனைவியை ஒன்று சேர்த்து வைக்கும் வல்லமை, காரடையான் நோன்பிற்கு உண்டு. இது மனிதர்களுக்கு மட்டுமல்ல. தெய்வங்களுக்கும் கூட பொருந்தும்.

ஒருமுறை கயிலாயத்தில் அம்பாள், சிவபெருமானின் கண்களை விளையாட்டாக மூட, ஆதியும்,  உலகம் முழுவதும் இருள் சூழ்ந்தது. இந்த பாவம் உமாதேவியை அடைய, அவள் உருவம் மாறியது. பாவ விமோசனத்துக்காக அன்னை காஞ்சிபுரம் வந்து, ஆற்றங்கரையில் மண்ணினால் சிவலிங்கம் செய்து பூஜை செய்தார். அப்போது சிவபெருமான் திருவிளையாடலால், ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து வந்தது. அருந்துணைவரான சிவலிங்கம் கரைந்து போகாமல் காக்க, காமாட்சி அம்மன் காரடையான் விரதத்தை மேற்கொண்டாள். இந்த விரதத்தை கண்டு மனம் மகிழ்ந்த சிவபெருமான், அன்னைக்கு தரிசனம் கொடுத்து காமாட்சியை மணந்து கொண்டார். ஸ்ரீகாஞ்சி காமாட்சி அம்மன் இந்த விரதத்தை அனுஷ்டித்ததால், இந்த நோன்பிற்கு காமாட்சி அம்மன் விரதம்ன்னும் பெயர் உண்டு.

மாலையிட்ட மங்கை நல்லாள் மன்னவன்
காலமெல்லாம் வழிகாட்டும் ‘கண் அவன்’

‘நல்லறம்’ என்பது கணவன் மனைவி இருவரும் விட்டுக் கொடுத்து வாழ்தலில் உள்ளது. எதையும் எதிர்பாராமல், அன்பினைப் பரிமாறி அன்றில் பறவைகளாய் இருப்பதில் உள்ளது. இன்பத்தில் திளைத்து துன்பத்தில் பங்கெடுத்து ஒருவர்க்கொருவர் அனுசரணையாய் இருப்பதில் உள்ளது.

பொதுவாக ஆண்களுக்கு உடற்திடமும், பெண்களுக்கு உள்ளத்திடமும் உண்டு என்பதை அறிவோம். தேவையான சமயத்தில் கணவனுக்குத் தகுந்த ஆலோசனைகள் அளித்து, அவனின் பின்னிருந்து முன்னோக்கிக் கூட்டிச் செல்பவள் மனைவி. தனது அன்பான, வலிமையூட்டும் சொற்களால் துன்பத்தை நீக்குபவளும் பெண். அதே போலத் தம் உள்ளத்தோடு ஒன்றிக் கலந்த மனைவியைக் காலம் முழுதும் கருத்தோடும், காதலோடும் பாதுகாப்பது கணவனின் கடமையாகும்.

கணவனின் நீண்ட ஆயுளுக்காக, மாங்கல்ய பலத்திற்காகப் பெண்களால் மேற்கொள்ளப்படும் விரதமே, ‘காரடையான் நோன்பு’. இதை ‘சாவித்திரி நோன்பு’ என்றும் கூறுவர். இவ்விரதத்தை மாசி மாதம் முடிந்த, பங்குனி மாதம் துவங்கும்போது மேற்கொள்ள வேண்டும்.
கற்புக்கரசியாம் சாவித்திரியானவள் குறைந்த ஆயுளைக் கொண்ட சத்யவானை மணந்தாள். ஆயுள் முடிந்து இறந்த சத்யவானின் உயிரினை எமன் இழுத்துச் செல்லும்போது, சாவித்திரி தனது உறுதியான வாக்கு சாதுரியத்தால் எமனுடனேயே சென்று தன் கணவனின் உயிரை மீட்டாள். பங்குனித் துவக்கத்தில் நோன்பிலிருந்து ‘மாசிக்கயிறு பாசி படியும்’ என்று புதுச்சரடு மாற்றிக் கட்டிக் கொள்ள வேண்டும்.

மாங்கல்ய பலம் சேர்க்கும் காரடையான் நோன்பு எனும் பண்டிகை 15.3. 2023 அன்று வருகிறது. மறக்காமல் நோன்பு இருங்கள். மங்கல வாழ்வு வாழ்வீர்கள். தீர்க்கசுமங்கலியாகத் திகழ்வீர்கள்
இந்த பூஜையின் போது கணவர் ஆயுள் நீடித்திருக்க பெண்கள் மஞ்சள் சரடுகளை காமாட்சி அம்பாள் அருள்வேண்டி பூஜையை மேற்கொள்வதின் மூலம் தம்பதி இடையே ஒற்றுமை நீடிக்கும். அவ்வளவு ஏன்... பிரிந்த தம்பதி கூட ஒன்று சேருவார்கள் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

காரடையான் நோன்பு என்பது கணவனின் நீடித்த ஆயுளை வேண்டிப்பெறும் நோன்பாகவே பெரும்பாலும் சொல்லப்பட்டுவருகிறது. ஆனால், அதுமட்டுமே அதன் பயனன்று. ஒரு பெண்ணுக்குப் புகுந்த வீடும் பிறந்த வீடும் இரு கண்கள் என்பர். அந்த இரு வீடுகளும் சகல செல்வங்களையும் பெற்றுச் செழிக்கச் செய்யும் ஒரு நோன்பாகவே காரடையான் நோன்பு அமைகிறது.

சுமங்கலிப் பெண்கள் தங்கள் கணவரின் ஆயுள் விருத்திக்காக காரடையான் நோன்பு அனுஷ்டிக்க வேண்டும். கார்காலத்தில் விளையும் நெல்லைக் குத்தி, பச்சரிசி மாவுடன் இனிப்பு கலந்து தயாரிப்பதே காரடை ஆகும். மாசிக் கயிறு பாசி படியும் என்பார்கள். அதாவது, காரடையான் நோன்பு இருந்து அணிந்துகொள்கிற மஞ்சள் கயிறானது, பாசி படிகிற அளவுக்கு பழையதானாலும் கூட, கழுத்திலேயே நிலைத்திருக்கும் என்பது ஐதீகம். இந்த நோன்பால் பிரிந்த தம்பதியர் ஒன்று கூடுவர். மாங்கல்ய பாக்கியத்திற்காக பெண்கள் அனுஷ்டிக்கும் விரதம் காரடையான் நோன்பாகும். மாசி மாதம் முடிந்து, பங்குனி மாதம் துவங்கும் வேளையில் இந்த விரதம் அனுஷ்டிக்கப்படும். மாசி மாத கடைசி நாள் இரவு ஆரம்பித்து பங்குனி முதல் நாள் காலையில் முடிப்பர். இந்த நோன்பை காமாட்சி நோன்பு, கவுரி நோன்பு, சாவித்திரி விரதம் என்றும் சொல்வார்கள்.

சாவித்திரியின் கதையை உற்று நோக்கினால் இதை அறியலாம்.
மந்திர தேசத்தின் மன்னன் அஸ்வபதி நீண்ட காலமாக புத்திரப்பேறு இன்றி இறைவனை வேண்டி பல யாகங்கள், பூஜைகள், தவங்களை நிகழ்த்தினான். அதன் பலனாக இறைவன் அருளால் அழகிய பெண் குழந்தை பிறக்க, மகிழ்ந்த அரசன் அந்த குழந்தைக்கு சாவித்திரி என்று பெயரிட்டான். அக்குழந்தைக்கு சகல வித்தைகளையும் கற்றுத்தந்து சகலகலாவல்லி ஆக்கியதுடன், அவளை பண்புள்ள பெண்ணாகவும், கடவுளின் மீது அளவற்ற பக்தி கொண்டவளாகவும் வளர்த்தான்.
சாவித்திரி திருமண வயதை எட்டினாள். தன் ஆசை மகளின் மணாளனை அறிந்து கொள்ளும் ஆவலில், ஒரு நாள் அரண்மனைக்கு வந்த நாரத முனிவரிடம், தன் மகளின் மணவாழ்க்கை பற்றி கேட்டான் மன்னன்.
அதற்கு நாதரர், ‘கண் பார்வையை இழந்த பெற்றோரை பேணிக் காத்து, அவர்களையே தெய்வமாக எண்ணி சேவை செய்து வரும் குணவானான சத்தியவான் என்பவனைத் தான் சாவித்திரி விரும்பி மணப்பாள். ஆனால் சத்தியவான் அற்ப ஆயுளில் மரணிப்பது விதி’ என்றார்.

நாதரர் சொன்னபடியே நடந்தது. ஒரு நாள் காட்டுப் பகுதிக்குள் பூப்பறிக்கச் சென்ற சாவித்திரி, சத்திய வானைக் கண்டு அவனை விரும்பினாள். மன்னனும் விதியை மாற்ற இயலாது என்பதை உணர்ந்து, சத்தியவானையே தன் மகளுக்கு மணம் முடித்து வைத்தான்.
பகைவர்களால் கண்கள் பிடுங்கப்பட்டு, நாட்டினின்று காட்டுக்கு விரட்டப்பட்ட சாலுவ தேசத்து அரசன் துயுமுத்சேனனின் மகன் தான் சத்தியவான். காட்டில் குடிசை அமைத்து பெற்றோருடனும், காதல் மனைவி சாவித்திரியுடனும் மகிழ்வுடன் வாழத் தொடங்கினான். காட்டில் உள்ள மரங்களை வெட்டி ஜீவனம் நடத்தி வந்தான், சத்தியவான்.
நாரத மகரிஷி சாவித்திரியிடம், ``சாவித்திரி, நான் சில நோன்பு முறைகளை உனக்கு உபதேசிக்கிறேன். நீ அதை பக்திபூர்வமாகக் கடைப்பிடித்தால், அம்பாள் மனம் மகிழ்ந்து உனக்கு நிகழ இருக்கும் தீமைகளை அழித்து நன்மைகளையே அருள்வாள்" என்று கூறினார்.
 சாவித்திரியும் நாரதர் உபதேசித்த நோன்பைக் கடைப்பிடித்தாள்.
வருடம் சென்றது. நாரதர் கூறிய ரகசியமான சத்தியவானின் ஆயுள் முடியும் காலம் வந்தது.

நோன்பு முறைகளை கடைப்பிடித்ததால் தன் பதிவிரதத் தன்மையால் கணவனின் ஆபத்தை உணர்ந்த சாவித்திரி, அவனுடனே இருக்கப் பிரியப்பட்டாள். அது ஒரு மாசி மாதத்தின் கடைசி நாள். கணவனே கண் கண்ட தெய்வமாகவும், அவனைப் பெற்றவர்களுக்கு செய்யும் தொண்டையே கடவுளுக்கு செய்யும் சேவையாகவும் எண்ணி வாழ்ந்து வந்த குணவதியான சாவித்திரி, காட்டிற்கு மரம் வெட்டப் புறப்பட்ட கணவனுடன் தானும் வருவதாகக் கூறி புறப்பட்டுச் சென்றாள்.
சத்தியவான் மரத்தை வெட்டி விறகுகளாக்க, அருகில் சாவித்திரியோ வரும் ஆபத்தை எதிர்நோக்கி முழுமையான இறை தியானத்தில் ஆழ்ந்திருந்தாள். மதிய வேளை வந்தது. உணவு உண்ட சத்தியவான் களைப்பில் மனைவியின் மடியில் தலை வைத்து உறங்க, உறக்கத்திலேயே அவனின் உயிரைக் கவர்ந்து, தன் கையில் இருந்த கயிற்றில் ஐக்கியமாக்கினான் எமன்.

தியானத்திலிருந்த சாவித்திரி கணவனின் உடலினின்று வெளிப்பட்ட ஒளி, எமனின் கைகளில் இருந்த கயிற்றில் ஐக்கியமானதை அறிந்து கண் விழித்தாள். தவ வலிமையால் எதிரில் நின்ற எமனைக் காணும் சக்தியைப் பெற்றிருந்தாள், அவள். எமனை வணங்கினாள். தன்னை வணங்கும் அந்தப் பெண்ணை வாழ்த்தும் நோக்கில், ‘தீர்க்க சுமங்கலி பவ’ என்று வாழ்த்திய எமதர்மன், சத்தியவானின் உயிரோடு எமலோகம் நோக்கிச் சென்றான்.

கணவனின் உடலை பத்திரப்படுத்திய சாவித்திரியும், இறைவனை வேண்டியபடி எமனைப் பின் தொடர்ந்தாள். கற்புக்கரசிகளின் தவ வலிமை எதையும் சாதிக்கும் வல்லமை கொண்டது என்பதை தன் பூத உடலுடன் எமனைப் பின் தொடர்ந்த சாவித்திரி நிரூபித்தாள்.
‘தீர்க்க சுமங்கலி பவ’ என்று வாழ்த்தியது
உண்மையானால், தன் கணவரின் உயிரைத் திரும்பித் தரும்படி அவள் எமதர்மனிடம் வேண்டினாள். அவளது பதியின் மேல் கொண்ட பக்தியையும், விடா முயற்சியையும், புத்தி சாதுர்யத்தையும் கண்டு வியந்த எமதர்மன், ‘மங்கையே! உன் பதிபக்தியைக் கண்டு மெச்சுகிறேன். ஆனாலும் நான் என் கடமையில் இருந்து தவற முடியாது. ஆகவே உன் கணவனின் உயிரைத் தவிர வேறு வரங்களைக் கேள் தருகிறேன்’ என்றார்.

யமனுக்கு சாவித்திரியின் பொறுமை கண்டு மனம் இளகியது. அவன் சாவித்திரியுடன், `இன்னும் என்ன வரம் வேண்டும்?' என்றான். அதற்கு சாவித்திரி, `ஏற்கெனவே நீங்கள் தந்த வரமாகிய சாவித்திரி மிகுந்த சாதுர்யத்துடன் ‘தீர்க்கசுமங்கலி பவ என்று என்னை வாழ்த்தி அருளிய எமதர்மனே, நான் என் கற்புநிலை பிறழாமல் நூறு பிள்ளைகளைப் பெற்று மகிழவேண்டும். என் மாமனார், மாமியார் இருவரும் அதனைக் கண்டு மகிழ வேண்டும்’ என்று வேண்ட, அவளின் கோரிக்கையில் மறைந்து இருந்த அர்த்தம் புரிந்த எமன் அவளைப் பாராட்டியபடி அவளின் வேண்டுதலுக்கிணங்கி கற்புநிலை பிறழாமல் பிள்ளைகள் பெற ஏதுவாக யமதர்மராஜன் இதற்குமேலும் அவள் பொறுமையை சோதிக்க விரும்பாமல், `தந்தேன்' என்று சொல்லி மறைந்தார். சத்தியவான் உறக்கத்தில் இருந்து எழுபவன் போல எழுந்தான். அவள் பெற்ற வரத்தின்படி அங்கு தன் மாமனார், மாமியாரின் கண்கள் பார்வை பெற்று பலசாலியானார். இழந்த ராஜ்யத்தை மீட்டார். சாவித்திரியின் தந்தைக்கும் ஆண் வாரிசு ஏற்பட்டது. சத்தியவானும் சாவித்திரியும் வீரமிக்க புத்திரர்களைப் பெற்று பல்லாண்டு காலம் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்.

காரடையான் நோன்பு விரதமுறை
விரதம் இருக்கும் நாளில் பெண்கள் அதிகாலையில் நீராடி, பூஜையறையை சுத்தம் செய்ய வேண்டும். மாக்கோலமிட வேண்டும். வாசல் நிலை, சுவாமி அறை நிலைகளில் மாவிலை தோரணம் கட்ட வேண்டும். ஒரு கலசத்தின் மேல் தேங்காய், மாவிலை வைக்க வேண்டும். கலசத்திற்கு சந்தனம், குங்குமம், மஞ்சள் பூசி, அதன் மேல் மஞ்சள் கயிறை கட்ட வேண்டும். அருகில் இஷ்ட அம்பாள் படம் வைத்து, அவளை காமாட்சியாக அல்லது சாவித்திரியாகக் கருதி வழிபட வேண்டும். சுவாமி படங்களுக்கு பூமாலை அளிக்க வேண்டும்.

ஒரு கலசத்தின் மேல் தேங்காய் மாவிலை வைக்க வேண்டும். கலசத்தில் குங்குமம், மஞ்சள் பூசி, அதன்மேல் மஞ்சள் கயிறை கட்ட வேண்டும். அருகில் காமாட்சி அம்மன் படம் வைத்து அதனை சாவித்திரியாக கருதி வழிபட வேண்டும். சாவித்திரி, காட்டில் தன் கணவர் சத்தியவானுடன் வாழ்ந்த போது அங்கு கிடைத்த கார் அரிசியையும், காராமணியையும் கொண்டு அடை தயார் செய்து வெண்ணெய்யுடன் இறைவன், இறைவிக்கு சமர்ப்பித்து வழிபட்டாள்.

அதனால் சிறிது வெண்ணெய்யுடன், விளைந்த நெல்லைக்குத்தி கிடைத்த அரிசி மாவில் அடை தயாரித்து நைவேத்தியமாக படைக்க வேண்டும். நுனி வாழை இலையில் வெற்றிலைப் பாக்கு, மஞ்சள், வாழைப்பழம், தேங்காய் உள்ளிட்ட பொருட்களை ஒரு தட்டில் வைக்க வேண்டும். மஞ்சள் சரடு (மஞ்சள், பூ இதழும் நடுவில் கட்டி) இவைகளை வைத்து இலை நடுவில் வெல்ல அடையும், வெண்ணெய்யும் வைக்க வேண்டும். நோன்பு சரடை அம்மனுக்கு சாற்றி, பின் அதில் துளசி இலையை சுற்றி தங்கள் கழுத்தில் கட்டிக் கொள்ள வேண்டும்.

உருகாத வெண்ணெய்யும், ஓரடையும்
வைத்து நோன்பு நோற்றேன்
ஒரு நாளும் என் கணவன் என்னைப்
பிரியாமல் இருக்க வேண்டும்’

பூஜை முடிந்ததும், நோன்புக் கயிற்றை எடுத்து ‘நீடித்த மாங்கல்ய பலம் தா தாயே!’ என்று அம்பாளை நினைத்து வணங்கி, கணவரின் கையாலேயே, கழுத்திலோ அல்லது கையிலோ அந்த கயிற்றைக் கட்டிக் கொள்வார்கள்.இந்த நாளில்... நல்ல நேரம் பார்த்து, பெண்கள் மாங்கல்யக் கயிறு மாற்றிக்கொள்வர்.

என்று ஒவ்வொரு சுமங்கலி பெண்ணும் அம்மனிடம் விண்ணப்பித்து வேண்டி கொள்ள வேண்டும். மூத்த பெண்கள் இளைய பெண்களுக்கு சரடு கட்ட வேண்டும். பிறகு தானும் புதிய மங்கலச் சரடை கட்டிக் கொண்டு கொள்வது விசேஷமானதாகக் கருதப்படுகிறது. அம்மனை வணங்கிய பின்னர் நோன்பு அடை அல்லது கொழுக்கட்டை வழக்கம் இல்லாத குடும்பத்தார் வெற்றிலை பாக்குடன் கேசரி போன்ற ஏதேனும் ஒரு இனிப்பை செய்தும், நைவேத்தியம் செய்து அடையை சாப்பிடலாம். நோன்பு தொடங்கியது முதல் முடிக்கும் வரை தீபம் எரிய வேண்டியது முக்கியமானது. அன்று பாலும், பழமும் சாப்பிடுவது மாங்கல்ய பலத்தை பெருக்கும். நிவேதனப் பொருட்களை உண்டு விரதத்தை முடிக்க வேண்டும். மறுநாள் சூரிய உதயத்திற்கு முன்பு பசுவிற்கு இரண்டு வெல்ல அடைகள் கொடுக்க வேண்டும்.

வைக்கோலுக்கு மரியாதை

காரடையான் நோன்பில் காரரசி மாவும், காராமணி அல்லது துவரையும் கலந்த அடை செய்து நைவேத்தியமாக படைக்கப்படும். அடை தயாரிக்கப்படும்போது வாணலியின் அடியில் வைக்கோல் போட்டு மேலே தட்டில் அடையை வேக வைப்பார்கள். நெல் கதிரில் இருந்து பிரியும் வரை வைக்கோல் நெல்மணியை காத்து இருக்கும்.

அதைப்போல் சத்தியவான் உடலில் இருந்து உயிர் பிரிந்தவுடன், உயிரை மீட்டுக் கொண்டு வரும் வரை உடலை காத்திரு என்று சாவித்திரி சொல்லி விட்டு வைக்கோலால் சத்தியவான் உடலை மூடி விட்டு சென்றாள். அதன் நினைவாக தான் வைக்கோல் போடுகிறோம். இந்த விரதத்தால் பிரிந்த தம்பதியர் கூடுவர். கணவரின் ஆயுளும் ஆரோக்கியமும் அதிகரிக்கும்.

பூஜை முடிந்த பின்னர் எருமை மாட்டிற்கு தீவனம் அளிக்க வேண்டும்.யம பயம் நீங்கும்

நைவேத்திய செய்முறை:

கார அடை (இனிப்பு)  செய்முறை

தேவையான பொருட்கள்: பச்சரிசி மாவு - 2 டம்ளர் (நனைத்து உலர்ந்த அரிசியைப் பொடி செய்து கொள்ளவும்), தேங்காய் (துருவியது) - 1 கப், வெல்லம் (பொடித்தது) - 2 டம்ளர், காராமணி - 50 கிராம், நெய் - 1 மேசைக் கரண்டி, ஏலக்காய் - 4 பொடித்தது.

செய்முறை: அரிசி மாவை நெய்விட்டு வறுக்கவும் காராமணியை உப்புப் போடாமல் வேகவைத்து மசித்துக் கொள்ளவும்.

வெல்லத்தைச் சிறிதளவு நீர்விட்டுக் கொதிக்க விட்டு இறக்கவும், வெல்லப் பாகில் அரிசி மாவு தேங்காய் துருவல் மசித்த காராமணி, நெய் பொடித்த ஏலக்காய் ஆகியவற்றைக் கலந்து கெட்டியாகக் கிளறிப் பிசையவும். பிறகு வடை போல் தட்டி ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.

கார அடை (உப்பு)  செய்முறை

வெல்லத்திற்கு பதிலாகப் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, கருவேப்பிலை, கொத்தமல்லி (தேவையெனில் வெங்காயம்) சேர்த்து தாளித்து மாவுடன் கலந்து பிசையவும் காராமணி வேகவைக்கும் போது உப்பு சேர்க்கவும்.

நோன்பின்போது சொல்ல வேண்டிய ஸ்லோகம்...
மம தீர்க்க சௌமாங்கல்ய அவாப்த்யர்த்தம்
 மம பர்த்துச்ச அன்யோன்யப்ரீதி
அபிவ்ருத்தியர்த்தம் அவியோகார்த்தம்
ஸ்ரீ காமாக்ஷி பூஜாம் கரிஷ்யே
த்யானம்
ஏகாம்பர நாத தயிதாம் காமாக்ஷீம் புவனேஸ்வரீம்
த்யாயாமி ஹ்ருதயே தேவீம் வாஞ்சிதார்த்த ப்ரதாயிநீம்
காமாக்ஷீம் ஆவாஹயாமி.
காரடையான் நோன்பு இனிப்பு அடை

தமிழ்நாட்டில் சுமங்கலிப் பெண்கள் தங்கள் கணவரின் ஆயுள் நீடிக்க மாசி மாதத்தின் இறுதியும், பங்குனி மாதத்தின் முதல் தேதியிலும் சாவித்திரி நோன்பு என்னும் காரடையான் நோன்பு கடைப்பிடிப்பார்கள்.
இந்த நோன்பின் போது பெண்கள் நெய்வேத்தியத்திற்காக காரம் அல்லது இனிப்பு அடையை செய்வது வழக்கம். இந்த வருட காரடையான் நோன்பு மார்ச் மாதம் 14 ஆம் தேதி வருகிறது.

நீங்கள் காரடையான் நோன்பு மேற்கொள்பவராக இருந்தால், அந்நாளில் விஷேசமாக செய்யப்படும் அடையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள விரும்பினால், கீழே காரடையான் நோன்பு இனிப்பு அடை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:
* பச்சரிசி மாவு - 1 கப்
* வெல்லம் - 1 கப்
* தண்ணீர் - 2 கப்
* பொடியாக நறுக்கிய தேங்காய் துண்டுகள் - 4 டேபிள் ஸ்பூன்
* காராமணி - 1 /4 கப்
* ஏலக்காய் - 1 (பொடித்து கொள்ளவும்)

செய்முறை:
முதலில் காராமணியை குக்கரில் போட்டு, நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, விசில் விட்டு வேக வைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் 2 கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, அதில் ஏலக்காய் மற்றும் வெல்லத்தைப் போட்டு, வெல்லத்தைக் கரைய வைக்க வேண்டும்.
வெல்லம் நன்கு கரைந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி, வடிகட்டிக் கொள்ள வேண்டும்.

பின்பு வெல்லப் பாகை மீண்டும் அடுப்பில் வைத்து, அதில் வேக வைத்துள்ள காராமணியை சேர்த்து கொதிக்க வைக்கவும்.
பிறகு தீயை குறைத்துவிட்டு, அதில் அரிசி மாவை மெதுவாக கட்டிகள் சேராதவாறு தூவி நன்கு கிளறி விட வேண்டும்.
பின் அதில் தேங்காய் துண்டுகளை சேர்த்து நன்கு கிளறி விட்டு இறக்க வேண்டும்.

 கலவையானது ஓரளவு குளிர்ந்ததும் கெட்டியாக ஆரம்பிக்கும். அப்போது அந்த கலவையை சிறு உருண்டைகளாக்கி தட்டையாக தட்டி, நடுவே ஒரு ஓட்டை போட்டால், சுவையான காரடையான் நோன்பு இனிப்பு அடை தயார்.


.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.