தமிழக அமைச்சரவை விரிவாக்கத்தில் வி.சி.க மற்றும் இ.யூ.மு லீக் கட்சிகள்!.
கர்ணன் பூர்வ ஜென்மத்தில் அசுரனாக இருந்த கதை!
மகாபாரதத்தில் வரும் மாவீரன் கர்ணன் ஒரு பாண்டவ புத்திரன் என்ற இரகசியம் அவன் இறந்த பிறகே உலகம் அறிந்தது. கொடைக்குப் பெயர் பெற்ற கர்ணனோ தான் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்புதான் இதை அறிந்திருந்தான்.
அதுவும் கிருஷ்ண பகவானின் லீலையால்..! மிகவும் நல்லவனான கர்ணனுக்கு ஏன் இப்படிப்பட்ட வாழ்வு?
இதற்கு விடை கர்ணனுடைய பூர்வ ஜென்ம இரகசியத்தில் உள்ளது. பூர்வ ஜென்மத்தில் கர்ணன் சஹஸ்ர கவசன் என்ற அசுரனாக இருந்தான்.
தேவர்களை நிர்தாட்சண்யமின்றி தாக்கி வந்தான். பிரம்ம தேவனிடம் அவன் பெற்ற வரத்தின்படி அவனுடைய உடல் ஆயிரம் கவசங்களால் போர்த்தப்பட்டிருந்தது.
எவரும் அந்த ஆயிரம் சட்டைகளை நீக்காமல் அவனைக் கொல்ல முடியாது. அவனைத் தாக்க விரும்பும் வீரன் 12வருடங்கள் தவமிருந்து விட்டு, அதன் பின்னர் 12 வருடங்கள் அவனுடன் தொடர்ந்து போர் புரிந்தால் ஆயிரம் கவசங்களுள் ஒன்றை அறுக்க முடியும்.
இவ்வாறு 24 வருடங்கள் வீதம் தவமும் போரும் யாகமும் செய்து ஆயிரம் கவசங்களை ஒன்றன்பின் ஒன்றாக அறுத்தெறிந்தால் சஹஸ்ர கவசன் மடிவான். இதை யாரால் செய்து சாதிக்க முடியும்? எனவே, அவனிடமிருந்து தேவர்கள் தாங்கொணாத் துயரத்திற்கு ஆளாயினர்.
அமரர்கள் மகாவிஷ்ணுவை நாடி அசுர உபாதையை ஒழித்து உதவுமாறு வேண்டினர். விண்ணவர் மீது இரக்கம் கொண்ட மகாவிஷ்ணு, அசுரர் கொடுமையை ஒழித்து அமரவாசிகளுக்கு ஆறுதல் உண்டு பண்ணத் திருவுள்ளம் கொண்டு நர நாராயணர்களாக அவதரித்தார்.
சஹஸ்ர கவசனை அடக்குவதற்கு அவர்கள் கூட்டு முயற்சி செய்தனர். நரன் 12 வருடங்கள் தவம் புரிய, நாராயணர் அசுரனுடன் போர் புரிந்து கவசமொன்றை அறுத்துத் தள்ளினார். இப்படிப் பல வருடங்கள் விடா முயற்சி செய்து 999 கவசங்களை அறுத்து எறிந்தனர்.
இதற்குள் பிரம்ம பிரளயமே வந்து விட்டது. எஞ்சி நின்ற ஒரு கவசத்துடன் சஹஸ்ர கவசன் சூரிய லோகம் போய்ச் சேர்ந்தான். இந்த சஹஸ்ர கவசனே அடுத்த ஜன்மத்தில் சூர்ய புத்திரனாக கர்ணன் என்ற பெயரில் மீதமுள்ள (பூர்வ ஜென்ம கவசம்) ஒரு கவசத்தோடு பிறப்பெடுத்தான்.
இந்தக் கவசமும் அறுக்கப்பட வேண்டியதே! இந்தக் காரியத்திற்காகவே பகவான் மகாவிஷ்ணு நர ரூபத்தில் அர்ஜுனனாகவும், நாராயண அம்சத்தில் கிருஷ்ணனாகவும் அவதரித்தனர்.
12 ஆண்டுகள் பாண்டவர்கள் வனவாசம் செய்தது அந்த நரனுடைய 12 வருடத் தவமேயாகும். ஒரு கவசத்தை இந்திரன் மூலம் நீக்கிய விஷயம் நாம் எல்லோரும் அறிந்ததே.
கவசம் நீங்கியதால் தான் அர்ஜுனன் கர்ணனை கொல்ல முடிந்தது. நம்முடைய இந்த ஜென்ம வாழ்க்கை நிகழ்வுகளுக்குக் காரணம் தெரியாமல் திகைக்கிறோம். இவற்றுக்குக் காரணம் பூர்வ ஜென்மக் கர்மாக்கள் ஆகும்.
கர்ணனின் வாழ்க்கை அமைந்த விதம் இந்த உண்மையை நிரூபிக்கிறது.
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்