Breaking News :

Friday, May 17
.

உலகிலேயே மிகப்பழமையான திருவண்ணாமலை


260 கோடி வயது: திருவண்ணாமலையை ஆர்க்கேயன் காலத்தியது என்கிறார்கள். அதாவது, இந்த காலம் 200 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டது. இந்த காலத்திலேயே திருவண்ணாமலை தோன்றி விட்டது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். திருவண்ணாமலையின் வயதை இவர்கள் 260 கோடி ஆண்டுகள் என்று மதிப்பிட்டுள்ளார்கள். இது உலகிலேயே மிகப்பழமையான மலை என்று, டாக்டர் பீர்பால் சகானி என்ற விஞ்ஞானி தெரிவித்துள்ளார். முதல் கணக்கெடுப்பின் படி மலையின் உயரம் 2665 அடி.

ரொம்ப ரொம்ப சிறந்த மாதங்கள்: திருவண்ணாமலையில் ஒவ்வொரு மாதம் பவுர்ணமியன்றும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வருகிறார்கள். ஆனால், ஐப்பசி, கார்த்திகை, மார்கழியில் எல்லா நாட்களும் வலம் வரலாம். இவை மிகச்சிறந்த மாதங்கள் என்கிறார்கள் பெரியவர்கள். இப்போ இருக்கிற கூட்டத்துக்கு இதையெல்லாம் பார்த்தால் முடியுமா! எந்த மாசம் வந்தால் என்ன! மனசு அண்ணாமலையார் கிட்டே இருக் கணும், என்கிறார்கள் மூத்த பக்தர்கள்.

தீபதரிசன மண்டபம்: அண்ணாமலையார் கோயிலிலுள்ள கிளிக்கோபுரம் அருகில் தீபதரிசன மண்டபம் உள்ளது. மங்கையர்க்கரசி அம்மையார் என்பவர் இந்த மண்டபத்தை 1202ல் எழுப்பினார். இதை மங்கையர்க்கரசி மண்டபம் என்றும் சொல்வர். இங்கு தான் தீபம் ஏற்றும் முன்பு,பஞ்சமூர்த்திகள் எழுந்தருளுவர்.

கரும்புத்தொட்டில்: அண்ணாமலையின் முக்கிய நேர்த்திக்கடன்களில் ஒன்று கரும்புத் தொட்டில். குழந்தை பாக்கியமில்லாதவர்கள் இங்கு கிரிவலம் வருவர். தங்களுக்கு மகப்பேறு வாய்த்தால், அந்தக் குழந்தையை கரும்புத்தொட் டிலில் இட்டு, கிரிவலம் வந்து அண்ணாமலையாரைத் தரிசிக்க வருவதாக வேண்டிக்கொள்வார்கள். இவ்வாறு செய்தால், இன்னும் பல இனிய குழந்தைகளை அந்த தம்பதிகள் பெறுவார்கள் என்பது ஐதீகம்.

ஆறுவிரல் ஆறுமுகம்: திருவண்ணாமலை திருப்புகழ் புலவர் அருணகிரியாருக்கு கைகளில் ஆறுவிரல் இருந்தது. அவர் ஆறுமுக பக்தர் என்பதால், அந்த முருகனே அவருக்கு அப்படி கொடுத்தான் போலும்! அவர் கால்களை சற்று உயர்த்தி எக்கி நடப்பார். அந்த நடை மயில்போல இருக்குமாம்! முருகனின் வாகனத்தை இது நினைவுபடுத்தியது.

கண்ணொளி கீரையும் உண்ணாமுலையாளும்: பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவது கண்ணுக்கு நல்லது என்பார்கள் சித்த வைத்தியத்தில்! இதை அழுத்தம் திருத்தமாக இந்தப் பகுதி மக்கள் இளசுகளுக்கு எடுத்துச் சொல்வதற்காக, பொன்னாங்கண்ணியை புளிபோட்டு கடைஞ்சா உண்ணாமுலை தாயே ஓடி வந்து சாப்பிடுவா! என்கிறார்கள். இப்படி சொன்னால் தான், இளசுகள் அம்பாளே விரும்பும் கீரையாயிற்றே என்று விரும்பிச் சாப்பிடுவார்களாம்.

மீனின் பெயர் செல்லாக்காசு: திருவண்ணாமலையிலுள்ள ரமணர் ஆஸ்ரமம் அருகேயுள்ள தீர்த்தத்தை அகத்தியர் தீர்த்தம் என்பர். இது இருக்கும் இடத்தின் பெயர் பலாக்கொத்து. இதில் வசிக்கும் மீனின் பெயர் செல்லாக்காசு. அடேங்கப்பா! இப்படி ஒரு பெயர் வைக்க என்ன காரணம் என்று கேட்டால், இது அந்தக்காலத்து மீன் சாமி! அபூர்வ இனம் சாமி, என்ற பதில் மட்டும் தான் கிடைக்கிறது.

தங்கமலை ரகசியம்: அண்ணாமலை தங்கமலையாக இருந்த ரகசியம் உங்களுக்கு தெரியுமா? கைலாயத்தில் லிங்கம் இருப்பதால் கயிலாயம் சிறப்பு. ஆனால், லிங்கமே மலையாக இருப்பதால் திருவண்ணாமலைக்கு சிறப்பு. இந்த மலை மிகப்பெரும் புனிதமாக கருதப்படுகிறது. இதை சிவலிங்கமாக கருதி சித்தர்கள், முனிவர்கள், ஞானி களெல்லாம் வழிபட்டுள்ளனர். உலகம் தோன்றிய காலத்தில் இருந்தே இம்மலை உள்ளதாக தல வரலாறு கூறுகிறது. கிருத யுகத்தில் நெருப்பு மலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபரயுகத்தில் தங்க மலையாகவும், இன்றைய கலியுகத்தில் கல்மலையாகவும் விளங்குகிறது.

கிரிவலம் செய்யும் முறை: திருவண்ணாமலைக்கு காந்த சக்தி இருப்பதாக புவியியல் வல்லுனர்கள் கூறுகின்றனர். கிரிவலம் செல்லும்போது எங்காவது துவங்கி, எங்காவது முடிக்கக்கூடாது. மலையைச் சுற்றி 14 கி.மீ. பக்தர்கள் நடந்தே செல்ல வேண்டும். வாகனங்களில் செல்லக் கூடாது. கிரிவலப்பாதையில் எட்டு திசையிலும் ஒவ்வொரு லிங்கம் உள்ளது. இந்திர லிங்கம், அக்னி லிங்கம், எமலிங்கம், நிருதி லிங்கம், வருண லிங்கம், வாயுலிங்கம், குபேர லிங்கம், ஈசான லிங்கம் ஆகிய இவற்றை வணங்கி செல்ல வேண்டும். மலையை ஒட்டிய பக்கம் செல்லாது இடது பக்கமாகவே செல்ல வேண்டும். இறைவனை தியானித்தபடியே அண்ணாமலைக்கு அரோகரா என்று மனதில் சொல்லியபடி நடக்க வேண்டும். மலையைப் பார்த்து கைகூப்பி வணங்க வேண்டும். தினமும் கிரிவலம் வரலாம் என்றாலும் பவுர்ணமியன்று கிரிவலம் வந்தால் மனோசக்தி அதிகரிக்கும்.

நந்திக்கு பெருமை: மாட்டுப்பொங்கலன்று திருவண்ணாமலை கோயிலில் உள்ள நந்திக்கு விசேஷ பூஜை நடக்கும். அனைத்து காய்கறிகள், பழங்கள், இனிப்பு வகைகள், பலகாரங்கள் நைவேத்யம் செய்து, கதம்பமாலை அணிவித்து பூஜை செய்வர்.அவ்வேளையில் அண்ணாமலையார், நந்தியின் முன் எழுந்தருளி அவருக்கு காட்சி தருவார். தனது வாகனமான நந்தியைப் பெருமைப்படுத்தும் விதத்தில் சிவன் இவர் முன் எழுந்தருள்கிறார்.

அண்ணாமலை பொருள்: அண்ணுதல் என்றால் நெருங்குதல் என்று பொருள். அண்ணா என்றால் நெருங்கவே முடியாதது என்பதாகும். பிரம்மனாலும் விஷ்ணுவாலும் அடியையும் முடியையும் நெருங்க முடியாத நெருப்பு மலை என்பதால் அண்ணாமலை என பெயர் வந்தது.

செந்தூர விநாயகர்: ஆஞ்சநேயருக்கு செந்தூரம் பூசி அலங்கரிப்பது வழக்கம். ஆனால், திருவண்ணாமலையில் விநாயகருக்கு செந்தூரம்பூசுகின்றனர். சம்பந்தாசுரன் என்னும் அசுரனை, விநாயகர் வதம் செய்த போது, அவனது ரத்தத்தில் இருந்து அசுரர்கள் உருவாகினர். எனவே, விநாயகர் அவனது ரத்தத்தை உடலில் பூசிக்கொண்டார். இதன் அடிப்படையில் சித்திரைப் பிறப்பு, விநாயகர் சதுர்த்தி, திருக்கார்த்திகை மற்றும் தை மாதத்தில்ஓர் நாள் என ஆண்டில் நான்கு நாட்கள் மட்டும் இவருக்கு செந்தூரம் சாத்துகின்றனர்.

Tags

    .

    Sign up for the Newsletter

    Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.