Breaking News :

Sunday, October 27
.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் தேரோட்டம் -ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு


சென்னையில் உள்ள திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் தேரோட்டம் நேற்று சிறப்பாக நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். 

சென்னையில் உள்ள திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில்  ஒவ்வொரு ஆண்டும் பிரமோற்சவம் விழா வெகுவிமர்சையாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், இந்த ஆண்டிற்கான பிரமோற்சவம், 20ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இவ்விழாவானது, முதல்நாளில் 21ம் தேதி சேஷவாகனம்,  சிம்மவாகனத்தில் புறப்பாடும், 22-ம் தேதி கருட சேவை உற்சவமும், 23ம் தேதி சூரிய பிரபை, சந்திர பிரபை புறப்பாடும், 24ம் தேதி பல்லக்கு நாச்சியார் கோலத்தில், சுவாமி புறப்பாடும், ஆறாம் நாளான நேற்று, காலை 5:15 மணிக்கு சூர்ணாபிஷேகமும் நடைபெற்றது. இந்த வகையில், ஆனந்த விமானத்தில் பார்த்தசாரதி பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதனைத்தொடர்ந்து, யானை வாகன புறப்பாடு நடைபெற்றது.

இவ்விழாவின் முக்கிய திருவிழாவான தேரோட்டம் நேற்று காலை நடந்தது. முன்னதாக, அதிகாலை 2.15 மணிக்கு திருத்தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடந்தது. இதில், உற்சவர் தேவியருடன் சிறப்பு அலங்காரங்களுடன் அதிகாலையில் திருத்தேரில் எழுந்தருளினார். இதில்,ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். அப்போது தேர் அசைந்தாடி வருவதை பார்த்த பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என விண்ணை பிளக்க முழக்கமிட்டனர். 

திருத்தேர் கோயிலை சுற்றியுள்ள தென்மாட வீதி, துளசிங்க பெருமாள் கோயில் தெரு, சிங்கராச்சாரி தெரு, தேரடி தெரு உள்ளிட்ட தெருக்களில் அசைந்தாடியபடி வலம் வந்தது. இதை காண பக்தர்கள் ஏராளமானோர் கூடினர். அவர்கள்  வெயிலையும் பொருட்படுத்தாமல் திருத்தேர் அசைந்து வந்ததை மாட வீதிகளிலும், மாடிகளிலும் நின்ற படி கண்டுகளித்தனர். தொடர்ந்து, சரியாக காலை 8.30 மணியளவில் தேர் நிலைக்கு வந்தது. தொடர்ந்து மாலை 4.30 மணியளவில் கோயிலுக்குள் பெருமாள் சென்றார். மேலும், பாதுகாப்பு பணிக்காக  நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.