தீராத பிரச்சனை, குழப்பங்கள் தீர வியாழக்கிழமை குருபகவான் பூஜை!
சிக்கல்களும், குழப்பங்களும் நமது வாழ்க்கையில் நிறைந்திருக்கின்றது. சில நேரங்களில் வாழ்க்கையில் தடுமாற்றம் ஏற்படும்போது, சரிவுகள் ஏற்படும்போது நம்முடைய வாழ்க்கை, சரியான பாதையில் தான் செல்கிறதா என்ற குழப்பம் நம்மில் பல பேருக்கு இருக்கும்.
பிரச்சனை என்பது நம்மோடு முடிந்துவிடுவது அல்ல. நம்முடைய குடும்பத்தையும் பாதிக்கக்கூடியது. வாழ்க்கையில் தீராத சிக்கல்கள் இருந்தாலும், முடிவெடுப்பதில் குழப்பம் இருந்தாலும், குழப்பத்திலிருந்து தெளிவு பெற, குருபகவானை வழிபடலாம்.
வியாழக்கிழமை குருபகவானை வழிபடுவதற்கு மிக உகந்த நாளாகும். இதனாலேயே வியாழக்கிழமையை குருவாரம் என சொல்வதுண்டு. குருபகவானின் அருளை பெறுவதற்குரிய சிறந்த விரதம் 'வியாழக்கிழமை விரதம்'. இந்த விரதத்தை 3 ஆண்டுகள் சரியான படி அனுஷ்டிப்பவர்களுக்கு குருபகவானின் பூரண அருள் வாழ்நாள் முழுவதும் கிடைக்கும். அதுமட்டுமல்லாமல் திருமணத்தடை நீங்கும் என்பது ஐதீகம்.
நவகிரகங்களில் பூரண சுப பலம் பெற்றவர் குருபகவான்.
தேவர்களுக்கு குருவான இவரை பிரகஸ்பதி என்றும், வியாழ பகவான் என்றும் அழைப்பர்.
ஞானம், கல்வி, செல்வம், திருமணம், குழந்தை பாக்கியம் போன்றவற்றை அருளும் குருபகவானை வியாழக்கிழமைகளில் வழிபடுவது கூடுதல் பலன்களைத் தரும்.
இவர் மனித வாழ்விற்கு தேவையான அனைத்து விதமான செல்வங்களையும் தருபவர் என்பதால், எந்த கிரகத்திற்கும் இல்லாத தனிச் சிறப்பு குருவிற்கும், குருவின் பார்வைக்கும் உண்டு.
குரு பார்க்க கோடி நன்மை என்ற பழமொழிக்கேற்ப நம் வாழ்வில் முன்னேற்றம் பெற குருபகவான் முக்கிய பங்கு வகிக்கிறார்.
குருபகவானுக்கு உகந்த வியாழக்கிழமை விரதத்தை 'சுக்கிலபட்சம்' என சொல்லப்படும் வளர்பிறையில் வரக்கூடிய வியாழக்கிழமைகளில் மேற்கொள்ளலாம். இந்த வியாழக்கிழமைகளில் விரதம் இருப்பது மிகுந்த நன்மை அளிக்கும்.
குருவின் நற்பார்வை ஒருவருக்கு இருக்கும்பட்சத்தில் கல்வி, ஞானம், பதவி உயர்வு போன்றவை கிடைக்கும்.
விரதமுறை :
அன்றைய தினத்தில் காலையில் குளித்து விட்டு, மஞ்சள் நிற ஆடையை அணிந்து, எதையும் அருந்தாமல் அருகே உள்ள நவகிரக கோவிலுக்கு சென்று குருபகவானை வழிபட வேண்டும்.
குருபகவானுக்கு உகந்த நிறம் மஞ்சள் என்பதால், மஞ்சள் நிறப்பூக்கள் சாற்றி, மஞ்சள் நிற இனிப்புகளை வைத்து நைவேத்தியம் செய்து, சந்தனம் மற்றும் மஞ்சள் ஆகியவற்றை கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும்.
அதன்பின்னர் குங்குமப்பூ கலந்த பசும்பாலை கொண்டு குருபகவானுக்கு அபிஷேகம் செய்து வழிபடுவது மிகவும் சிறந்தது.
முக்கியமாக இந்த விரதம் மேற்கொள்பவர்கள் அன்றைய தினத்தில் உணவு எதுவும் உண்ணக்கூடாது. மேலும் அன்றைய நாள் முழுவதும் குருபகவானுக்குரிய மந்திரங்கள், ஸ்தோத்திரங்கள் போன்றவற்றை பாராயணம் செய்து வழிபடுவது நல்லது.
அதேபோன்று அன்றைய தினத்தில் மாலை நேரத்தில் ஆடைகள், இனிப்புகள் போன்றவற்றை ஏழை, எளியோர்க்கு தானமளிப்பது நல்லது. இரவில் உப்பு சேர்க்காத உணவை சாப்பிட்டு வியாழக்கிழமை விரதத்தை நிறைவு செய்யலாம்.
எந்தவொரு தெய்வத்தையும் வணங்கும்போது விளக்கேற்றுவது அவசியம். அதிலும் குருஓரையில் செய்யும் பூஜைகளும், விளக்கிடுவதும் மிகவும் நல்லது.
இவ்வாறு மூன்று வருடங்கள் வளர்பிறை வியாழக்கிழமைகளில் விரதம் இருந்து வந்தால் வாழ்வில் குருபகவானின் அருள் என்றென்றும் இருக்கும். பல யோகங்கள் வந்து சேரும் என்பது ஐதீகம்.
குருபகவான் காயத்ரி மந்திரம்:
ஓம் விருஷபத் வஜாய வித்மஹே
க்ருணி ஹஸ்தாய தீமஹி
தந்நோ குருஹ் ப்ரசோதயாத்..
குருபகவானை வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள்..
திருமண தடை நீங்கி உங்களுக்கு ஏற்ற வாழ்க்கைத்துணை அமையும்.
கிரகதோஷம் எதுவாக இருந்தாலும் விலகிவிடும்.
தொழில், வியாபாரங்களில் செல்வ வளம் பெருகும்.
குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
உயர் பதவி கிடைக்கும்.
வியாழக்கிழமை அன்று குருபகவானை வழிபடுவதன் மூலம் ✨வாழ்வில் சகல நன்மைகளையும் பெறலாம்.