கருணை பொழிவாள் கனகதுர்கை!
1995 இல் விஜயவாடாவில் உள்ள "மாருதி டாக்கீஸ்" இல் அன்றைய சூப்பர் ஹிட் படமான "ரோஜூலு மாராயி" இரவுக் காட்சி முடிந்திருந்தது. வெங்கண்ணா வேக வேகமாக திரையரங்கை நோக்கி ரிக்ஷாவை ஓட்டிக் கொண்டிருந்தார்.
இரவுக் காட்சி முடிந்து வெளியே வரும் மக்கள் யாராவது தன் ரிக்ஷாவில் ஏறினால் அன்றைய இரவுப் பொழுதில் ஏதாவது வருமானம் வருமே!! வெங்கண்ணா மாருதி டாக்கீஸை அடைந்த சமயம் கூட்டம் பெரிதாக இல்லை. ஓரிருவரைத் தவிர அனைவரும் சென்றுவிட்டிருந்தனர்.
திரையரங்கின் வெளியில் ஸர்வமங்களகரமான ஒரு பெண்மணி நிறைந்த நகைகளும், பட்டுப்புடவையும், நெற்றியில் பெரிய பொட்டுடனும் நின்றிருந்தாள்
"நானா(அப்பா!!) இந்த்ரகீலாத்ரி போகனும்!! ரிக்ஷா வருமா!?" என்று கேட்டாள் வெங்கண்ணாவைப் பார்த்து.
"வாங்கம்மா!! இந்த்ரகீலாத்ரி பக்கத்துல போனதுக்கப்புறம் எந்த வீடுன்னு சொல்லுங்க!!" என்றபடி அந்த பெண்மணியை ரிக்ஷாவில் ஏற்றினார்.
இந்த்ரகீலாத்ரி போகும் வழியில் சாலை ஆள் நடமாட்டமில்லாமல் அமானுஷ்யமாக இருந்தது.
"நானா(அப்பா!!) ஆள் அரவமில்லாத இந்த ரோட்டிலே, அர்த்தஜாமத்திலே தினமும் ரிக்ஷா வண்டி ஓட்டுறீங்களே!! உங்களுக்கு பயமாயில்லையா!! நள்ளிரவு தாண்டி கனகதுர்கம்மா கோவிலிலிருந்து க்ராம வலம் வருவதா சொல்லுவாங்களே!!"
"தல்லி!! நானோ ஏழை!! குடும்பத்தை காப்பதறதுக்காக நான் இரவும் பகலும் ரிக்ஷா வண்டி ஓட்டி சம்பாதிக்கறேன். நான் ஒன்னும் அடுத்தவங்களை ஏமாத்தி பிழைக்கலையே. மேலும், கனகதுர்கம்மா என்னுடைய தாய்!! அம்மா கிட்ட எதுக்கு பயம்!! தப்பு பண்ணாத பிள்ளையை தாய் எதுக்கு தண்டிக்க போறா!?" என்றார் வெங்கண்ணா!!
"நீங்க சொல்றது சரி தான்!! தல்லி கனகதுர்கம்மா உலகத்துக்கே அன்னையாச்சே!!" என்று சிரித்தாள் அந்த பெண்.
இந்த்ரகீலாத்ரி கனகதுர்காம்பாள் கோவில் அருகே ரிக்ஷா வண்டி வந்தது "அம்மா!! நீங்க எங்கே இறங்கனும் சொல்லுங்க!!" என்றபடி வெங்கண்ணா திரும்பிப் பார்த்தார்.
பின்னால் ரிக்ஷாவில் பெண்மணி இல்லை. அதிர்ச்சி அடைந்த வெங்கண்ணா முன்னே பார்த்தால், அந்த பெண் கனகதுர்கம்மா ஆலயப்படிகளில் ஏறிக்கொண்டிருந்தாள்.
"அம்மா!! என்னம்மா இது!? பணம் கொடுக்காம் நீங்க போறீங்களே!!" என்றார் வெங்கண்ணா "இந்த பெண் எப்படி திடீரென்று அவ்வளவு தூரம் சென்றாள்!?" என்ற குழப்பத்துடன்.
"நானா!! உங்கள் தலைப்பாகையில் உங்களுக்கு சேர வேண்டிய பணம் உள்ளது பாருங்கள்!!" என்றபடி கோவில் படிகளில் இருந்து திரும்பி பார்த்தாள் அந்த பெண்.
தலைப்பாகையினை கழட்டி பார்த்த வெங்கண்ணா அதனுள் ரிக்ஷா கூலியான பத்து ரூபாயும், கண்ணைப் பறிக்கும் தங்கத்தினால் ஆன அழகிய கங்கணமும் இருப்பதைக் கண்டு அதிர்ந்தார்.
நிமிர்ந்து கனகதுர்கம்மா ஆலய படிக்கட்டைப் பார்த்த போது அவர் பார்க்கும் போதே அந்த பெண் சிரித்துக்கொண்டே மறைந்து போனாள்.
விக்கித்துப் போன அவர் "தல்லி!! கனகதுர்காம்மா!!" என்று கண்களில் கண்ணீர் பொங்க கதற அக்கம்பக்கமிருப்பவர்கள் விழித்துக்கொண்டு என்னாயிற்று என்று விசாரித்தனர்.
நடந்த நிகழ்வுகளைக் கூறி பத்து ரூபாயையும் கங்கணத்தையும் அங்கிருப்போரிடம் காண்பிக்க, அனைவரும் மெய் சிலிர்த்து கனகதுர்கம்மாவின் பாதங்களை தண்டாகாரமாய் விழுந்து வணங்கினர்.
இந்த விஷயம் ஊரெங்கும் பரவி "ஆந்த்ர கேசரி" பத்திரிக்கையிலும் செய்தியாக வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த காலத்திலும் அம்பிகை நேரில் வருவாள் என்பதற்கு வேறென்ன சான்று வேண்டும்.
கருணை மிகுந்த தெய்வம், இவ்வுலகில் அம்பாளைத் தவிர வேறு ஏது!?
சிந்தாமணிக் காளி எனும் அம்பிகையின் பரம ரௌத்ர ஸ்வரூபத்தை, ஶ்ரீசக்ரம் ஸ்தாபித்து ஶ்ரீமத் பகவத்பாதாள் ஶ்ரீகனகதுர்கா பரமேஶ்வரியாக ஸ்தாபித்தார் என்பதும், பின்னர் ஶ்ரீவித்யாரண்யர் ஶ்ரீகனகதுர்கா பகவதிக்கு நடுவில் ஏற்பட்ட வாமாசார பத்ததியை மாற்றி தக்ஷிணாசாரத்தில் ஶ்ரீபகவதியை உபாஸிக்கும் வழியைச் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சித்திரத்தில் : ஸதாசிவ பலகை மீதமர்ந்த ஶ்ரீலலிதா மஹாத்ரிபுரஸுந்தரியாக விஜயவாடா ஶ்ரீகனகதுர்காம்பாள்
கனகதுர்கா பகவதி சரணம்
ஸர்வம் லலிதார்ப்பணம்
காமாக்ஷி சரணம்
-- மயிலாடுதுறை ராகவன்