தமிழக ஆளுநராகும் மாஜி ஆந்திர முதல்வர்?

tamilnadu-new-governor-nallari-kiran-kumar-reddy
தமிழக ஆளுநராகும் மாஜி ஆந்திர முதல்வர்?

கேரளா ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தான் தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் தான் தமிழகத்தின் புதிய ஆளுநராக நல்லாரி கிரண் குமார் ரெட்டியை நியமனம் செய்ய மத்திய அரசு தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆந்திராவின் முன்னாள் முதல்வரான இவர் யார்? பின்னணி என்ன? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.

தமிழகத்தின் ஆளுநராக ஆர்என் ரவி செயல்பட்டு வந்தார். 2021 செப்டம்பர் மாதம் முதல் 2026 மார்ச் மாதம் வரை ஆர்என் ரவி ஆளுநராக இருந்தார். அதன்பிறகு அவர் மேற்கு வங்க மாநிலத்துக்கு மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து தமிழகத்துக்கு புதிய ஆளுநர் நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், புதிய ஆளுநர் நியமனம் செய்யப்படவில்லை. கேரள ஆளுநராக இருக்கும் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக நியமனம் செய்யப்பட்டார். முதல்வர் விஜய், அமைச்சர்களுக்கு இவர் தான் பதவி பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார்.

இதற்கிடையே தான் தற்போது 6 மாதங்கள் கழித்து தமிழகத்துக்கு புதிய ஆளுநரை நியமனம் செய்வதற்கான பணியை மத்திய அரசு தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி தமிழகத்தின் ஆளுநராக ஆந்திராவின் முன்னாள் முதல்வரான நல்லாரி கிரண் குமார் ரெட்டியை நியமனம் செய்ய வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

நல்லாரி கிரண் குமார் ரெட்டி ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தின் முதல்வராக செயல்பட்டார். இவர் 4 முறை ஆந்திராவில் எம்எல்ஏவாக இருந்துள்ளார். 2004 முதல் 2009ம் ஆண்டு வரை ஆந்திர சட்டசபையின் சபாநாயகராக இருந்தார். அதன்பிறகு ஆந்திராவின் முதல்வரானார். 2010 நவம்பர் 25ம் தேதிமுதல் 2014 மார்ச் 1ம் தேதி வரை ஆந்திர முதல்வராக செயல்பட்டார்.

பின்னர் ஆந்திரா இரண்டாக உடைக்கப்பட்டு தெலுங்கானா மாநிலம் உருவானது. தெலுங்கானா மாநிலத்தை உருவாக்க லோக்சபாவில் தனி மசோதா நிறைவேறியதற்கு அப்போது முதல்வராக இருந்த நல்லாரி கிரண் குமார் ரெட்டி கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து ஜனாதிபதி ஆட்சி கொண்டு வரப்பட்டது. அதுமட்டுமின்றி நல்லாரி கிரண் குமார் ரெட்டி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியதோடு 2014 மார்ச் 10ம் தேதி ஜெய் சாமைக்கியாந்திரா கட்சி என்ற கட்சியை தொடங்கினார்.

''தெலுங்கானா என்ற மாநிலம் வேண்டாம்’’.. ஒருங்கிணைந்த ஆந்திரா தான் வேண்டும்'' என்பதை அடிப்படையாக வைத்து இந்த கட்சி தொடங்கப்பட்டது. ஆனால் இந்த கட்சி எந்த தேர்தலிலும் வெற்றி பெறவில்லை. இதனால் நல்லாரி கிரண் குமார் ரெட்டி தனது கட்சியை 2018 ஜூலை 13ம் தேதி கலைத்தார்.

அதன்பிறகு மீண்டும் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து பயணித்தார். பிறகு 2023ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய நல்லாரி கிரண் குமார் ரெட்டி பாஜகவில் இணைந்தார். மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி முன்னிலையில் அவர் பாஜகவில் ஐக்கியமானார்.