“அனைத்து ஆதாரங்களும் எனது மேஜையில் உள்ளது” - முதல்வர் விஜய் அதிரடி பேச்சு

tn-cm-vijay-tn-assembly-speech
“அனைத்து ஆதாரங்களும் எனது மேஜையில் உள்ளது” - முதல்வர் விஜய் அதிரடி பேச்சு

"முந்தைய ஆட்சியில் 3 துறைகளை ஆய்வு செய்த அறிக்கை என் மேஜையில் உள்ளது. ஆதாரங்கள் அனைத்தும் என் மேஜையில் தான் உள்ளது. அந்த கோப்புகளை ஓபன் செய்ய வைத்துவிடாதீர்கள்.. எப்போது திறக்க வேண்டுமோ அப்போது திறப்போம்." என தமிழக முதல்வர் விஜய் இன்று சட்டசபையில் பேசியுள்ளார்.

தமிழ்நாடு சட்டசபையில் இன்று நீர்வளம், ஊரக வளர்ச்சி மற்றும் சுற்றுலா ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது திமுக முன்னாள் அமைச்சர் ஐ. பெரியசாமி பேசிக் கொண்டிருக்கும்போது, தவெக, திமுக உறுப்பினர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அமைச்சர் ஆனந்த், வீடு கட்டும் திட்டத்தில் பல தவறுகள் நடந்துள்ளது என திட்டவட்டமாக நான் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். அப்போது திமுக ஆட்சியில் ஊழல் செய்ததாக கூறுவதற்கு ஆதாரம் இருக்கிறதா என திமுக எம்.எல்.ஏ.க்கள் கேள்வி எழுப்பினர்.

அப்போது எழுந்து பேசிய அமைச்சர் ராஜ்மோகன், "என்ன பேசினாலும் ஆதாரம் காட்டுங்கள் ஆதாரம் காட்டுங்கள் என்று எதிர் தரப்பினர் சொல்கிறார்கள். ஆதாரங்களை நாங்கள் காண்பித்தால் தவறு நடந்திருப்பதாக எதிர் தரப்பினர் ஒப்புக்கொள்கிறார்கள். முதலமைச்சர் வைத்திருக்கும் ஆதாரத்தை காட்டினால் அவர்கள் நிலைமையை நினைத்துப் பார்த்தால் கொஞ்சம் கவலையாக தான் இருக்கிறது" என்றார்.

அப்போது குறுக்கிட்ட முதலமைச்சர் விஜய், "ஆதாரம் கேட்கிறார்கள். கடந்த வாரம் நிதி அமைச்சர் பேசுகையில், மூன்று துறைகளில் நடைபெற்ற ஊழல் தொடர்பான கோப்புகள் எனது மேஜையில் இருக்கிறது என்றார். அது போகிற போக்கில் சொன்னது இல்லை. அனைத்து ஊழல்களும் ஆதாரங்களுடன் இருக்கின்றன. அதனை திறக்க வைத்துவிடாதீர்கள். எதை எப்போது திறக்க வேண்டுமோ, அதை அப்போது சரியாகத் திறப்போம்.

மக்களிடம் எப்போது, என்ன பேச வேண்டும் எப்படி பேச வேண்டும் என தெரியும். அதனால்தான் அன்பாக ஆசையாக இங்கே உட்கார வைத்துள்ளார்கள். நான் பேசக்கூடாது என்றெல்லாம் இல்லை. இடைத்தேர்தலிலாவது சிலருக்கு நல்லது நடக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து பேசிய ஐ. பெரியசாமி, "அன்பு, ஆசையாக பேசித்தான் ஒரே தொகுதியில் 7 முறை வெற்றி பெற்றுள்ளேன். இரு முறை தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளேன்" எனத் தெரிவித்தார்.