அன்புமணியுடன் பிரச்னை தீர்ந்தது - வழக்கை வாபஸ் பெற்றார் ராமதாஸ்!.
5 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம் - தமிழக அரசு
தமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் இன்று அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தூத்துக்குடி, சிவகங்கை மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை தமிழக அரசின் உள்துறை செயலர் மணிவாசன் பிறப்பித்துள்ளார்.
தவெக அரசு ஆட்சியமைத்த பின் தமிழகத்தில் பல்வேறு முக்கிய துறைகளிலும் அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டு வருகின்றனர். தமிழ்நாடு காவல்துறையிலும் மிகப்பெரிய அளவில் மாற்றங்கள் நடைபெற்றுள்ளன. இந்நிலையில், தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ள புதிய உத்தரவின்படி, மாநிலத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த இடமாற்றம் உடனடியாக அமலுக்கு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி ஆயுதப்படை டிஐஜியாக இருந்த எம்.விஜயலட்சுமி ஐபிஎஸ், சென்னை ஊர்க்காவல் படை டிஐஜியாக மாற்றப்பட்டுள்ளார். சிவகங்கை மாவட்ட எஸ்பியாக இருந்த ஆர்.சிவபிரசாத் ஐபிஎஸ், தூத்துக்குடி மாவட்ட எஸ்பியாகப் பணியமர்த்தப்பட்டுள்ளார். அதேபோல தூத்துக்குடி மாவட்ட எஸ்பியாக இருந்த அபிஷேக் குப்தா ஐபிஎஸ், சிவகங்கை மாவட்ட எஸ்பியாக மாற்றப்பட்டு உள்ளார்.
சென்னை குற்றப்பிரிவு சிஐடி எஸ்.பியாக இருந்த டி.சண்முகப்பிரியா ஐபிஎஸ், சென்னை லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத்துறை (மேற்கு மண்டலம்) எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் உதவி எஸ்.பியாக இருந்த பி.ஆர்.மீரா ஐபிஎஸ், சென்னை டிஜிபி அலுவலகத்தின் அலுவலக ஆட்டோமேஷன் மற்றும் கணினிமயமாக்கல் பிரிவின் உதவி எஸ்.பியாகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதி திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி அபிஷேக் குப்தா சிவகங்கை மாவட்ட போலீஸ் எஸ்.பியாக மாற்றப்பட்டுள்ளது கவனம் பெற்றுள்ளது.