தீட்சை ஏன்? எதற்கு? எப்படி?

theetchai
தீட்சை ஏன்? எதற்கு? எப்படி?

தீட்சை என்றால் உயிரைப்பற்றிய ஆணவ மலத்தைக் கெடுத்து  சிவஞானத்தை கொடுப்பது என்று பொருள் தமிழில் தீக்கை. உடலுக்கு பலசடங்குகள் செய்யப் படுகின்றன  அது போல உயிராகிய ஆன்மாவிற்கு செய்யக்கூடிய சடங்கே தீட்சை. 

 

எப்படி வாகனம் ஓட்ட ஓட்டுனர் உரிமம் தேவையோ, நிலம் வாங்க நிலப்பதிவு அவசியமோ, தொழில் துவங்க தொழில் உரிமம் தேவையோ அது போல சிவ சம்பந்தம் எனும் ஆரம்பப்படி நிலையை உறுதிபடுத்திக்  கொள்ள இம்மை மறுமை நலன்கள் பெற  சிவபெருமான் திருவருள் பெற உரிமம் எனும் (தீட்சை) தேவை.

 

எந்த வயதினரும் ( 7வயது முதல் ) எந்த வயதிலும் ஆண் பெண் இரு பாலரும் தீட்சை பெறலாம். தீட்சை  பெறாதவர் பொதுச்சைவர் எனப்படுவர். அவர்கள் திருநீற்றை நீரில் குழைத்து  முப்பரிமாணமாக (திரிபுண்டரமாக)  பூச முடியாது.

 

நமசிவாய எனும் மிக உயர்ந்த மந்திரமான ஐந்தெழுத்தை உச்சரிக்க முடியாது. மாதா பிதா குரு தெய்வம் என்பது தான் சைவம் காட்டும் நெறி. எனவே குரு மூலம் தீட்சை பெற வேண்டும்.

 

நமது சமய குரவர்களும் சந்தான குரவர்களும் நமக்கு அருளியது அதுவே அவர்கள் அருளியதே நமக்கு பிரமாணம் .ஸ்ரீ இராமனுக்கு அகத்தியரும் ஸ்ரீகிருஷ்ணனுக்கு உபமன்யு  முனிவரும் சிவ தீட்சை  செய்து வைத்துள்ளார்கள்.  

 

ஏன் தீட்சை  பெற வேண்டும்.

 

 1.சிவ பெருமானை ஆகமங்களில்  விதித்தபடி  வழிபாடு செய்வதற்கு உரிய  அதிகாரம் பெற்று ஐந்தெழுத்து ஓதி முப்புரிமாணமாக  திருநீறு அணிந்து பூசை செய்யலாம்.

 

2.தீட்சை பெற்றால் ஞானம் பெறலாம் ஞானத்தின் வாயிலாக வீடுபேறு எனும் முக்தி பெறலாம்.

 

3.சமய தீட்சை பெற்றாலே அவர்களை  எமன் அணுக மாட்டான் அதனால் நரகம் இல்லை அவ்வுயிரை வாங்க ஸ்ரீகண்ட பரமேஸ்வரன் தான் அதிகாரம் பெற்றவர்.

 

4.விசேட தீட்சை பெற்றால் அவ்வுயிரை அனந்த தேவர் வாங்குவார்.

 

5.நிர்வாண தீட்சை பெற்றால் சதாசிவ மூர்த்தி  வாங்குவார் .

 

6.எமன் வாங்காததால் நரக துன்பம்  ஆவி உலக துன்பங்கள் நம்மை அணுகாது.

 

7.நமது வாரிசுகள் நமக்கு பிதுர் கடன் ஆற்றா விட்டாலும் கூட ஆவியுலக இன்னல் இல்லை.

 

8.இறைவன் தீட்சா கிரியையின் மூலம் மட்டுமே பாவ மன்னிப்பு அருளுகிறார்.

 

9.பில்லி சூன்யம் ஏவல் கண்திருஷ்டி இவை நெருங்காது.

 

10.பிராணயாமம் செய்யும் போது இருதய நோய் வராது . மாரடைப்பு நெருங்காது.

 

11.சிவோகம பாவனைகள்  மூலம் மனம் அடங்கும் நிம்மதி கிட்டும் ஐம்பொறிகளும் நமக்கு குற்றேவல் புரியும் .

அப்பர் பெருமான் அதை  பாவிப்பார் பாவம் அறுப்பாய் போற்றி என்றதன் மூலம் அறியலாம்.பாவனை உயிரை தூய்மைப்படுத்தும்.

 

12.நியாசம் எனும் அங்கசுத்தி செய்வதன் மூலம் வியாதி நீங்கும் அது தான் இன்றைய ரெய்கி

 

13.முத்திரைகள் பிடிப்பதால் பிசியோதெரபி  செய்யும் பலன் கிடைப்பதால் நரம்பு சம்பந்தமான வியாதிகள் நெருங்காது.

 

14.தீட்சை பெற்று  ஆன்மார்த்த பூசை  செய்வதன் மூலம் நமது வினைகள் குறையும்  (முற்பிறவி பாவங்கள் சஞ்சிதம்  ). ஆகாமியம் ஏறாது.

 

15.ஆதீனங்கள் மடாதிபதிகளிடம் மட்டும்தீட்சை பெற வேண்டும் மற்றவர்களிடம் பெறுவது தீட்சையாகாது

 

திருச்சிற்றம்பலம்.