கிறிஸ்துவ மாணவர்களுக்கு விபூதி - காஞ்சி பெரியவா

kanchi-maha-periyava
கிறிஸ்துவ மாணவர்களுக்கு விபூதி - காஞ்சி பெரியவா

கிறிஸ்துவ பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு, விபூதிக்குப் பதில் வாழைப்பழங்கள் பிரசாதமாக கொடுத்த சம்பவம்.

எவர் மனத்தையும் புண்படுத்தக்கூடாது என்பது பெரியவா கொள்கை.

நிதரிசனத்தில் என்றைக்குமே பெரியவாளுக்குக் கண் உண்டு.-கிட்டத்துப் பார்வை.

பிக்ஷாவந்தனம் செய்ய வந்தார் ஓர் அன்பர். கும்பகோணம் பக்கம், அவருடைய கிராமம். சொந்தமாக வாழைத் தோட்டம் உண்டு. ஏராளமான கறிகாய்களுடன், நான்கு தார் வாழைப்பழங்களையும் கொண்டு வந்தார். பெரிய பெரிய சீப்புகள். ஏராளமான பழங்கள்.

பெரியவா, தாரிலிருந்த பழங்களை ஒவ்வொன்றாகப் பிய்த்துத் தட்டுகளில் வைக்கச் சொன்னர்கள்  தொண்டர்களுக்கு ஆச்சரியமாக இருந்தாலும், சொன்னததைச் செய்துதானே ஆகவேண்டும்.

ஐந்தாறு தட்டுகளில் தனித்தனிப் பழங்களாக வைக்கப்பட்டன. சுமாராக முந்நூறு பழங்கள்  இருக்கும்.
பத்து நிமிஷங்கள் ஆகியிருக்கும். ஏதோ ஒரு பள்ளிக்கூட  குழந்தைகள், நாலு பஸ்களில் வந்திறங்கி தரிசனத்துக்கு வந்தார்கள்.

அவர்கள் ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு வாழைப்பழம், பெரியவா தன் கையாலேயே கொடுத்தார்கள்.

கடைசிப் பையன் வந்தபோது, தட்டில் ஒரு வாழைப்பழம் மட்டுமே இருந்தது!

எத்தனை மாணவர்கள் வந்தார்களோ,  அத்தனை வாழைப்பழங்கள் மட்டுமே இருந்தன.

மாணவர்கள் போனபிறகு, பெரியவாள் சொன்னார்கள்;
"குழந்தைகள், கிறிஸ்தவப் பள்ளியிலிருந்து வருகிறார்கள். மெஜாரிட்டி கிறிஸ்தவக் குழந்தைகள். இவர்களுக்கு விபூதி, குங்குமம் கொடுப்பது சரியாக இருக்காது. அவர்களுக்கு மனத்திருப்தி ஏற்படாது. பழம் என்றால் யாரும் மறுப்பதற்கில்லை. அதனால்தான், எல்லோருக்கும் பழத்தைக் கொடுத்தேன்"-பெரியவா.

எவர் மனத்தையும் புண்படுத்தக்கூடாது என்பது பெரியவா கொள்கை.

"சங்கரமடம் என்பதால், நான் விபூதி கொடுத்திருந்தால், எல்லோரும் கைநீட்டி வாங்கிக் கொள்வார்கள். கொஞ்ச தூரம் சென்றதும், சுவரோரமாக உதறிவிட்டுப் போயிருப்பார்கள்!"--பெரியவா.

நிதரிசனத்தில் என்றைக்குமே பெரியவாளுக்குக் கண் உண்டு. கிட்டத்துப் பார்வை.

கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.