"எப்போதும் ஒரே சண்டை.நிம்மதியே இல்லை" - காஞ்சி பெரியவா
(விமோசனம் தேடிய பையனுக்கு பெரியவாளின் அறிவுரை)
ஒரு பையனுக்கு மிகவும் மனக் கஷ்டம். ஸ்ரீ பெரியவாளிடம் வந்தான்.
"வீட்டில் தன் தகப்பனாருக்கும் தாயாருக்கும் எப்போதும் ஒரே சண்டை.நிம்மதியே இல்லை" என்றான் பையன்.
ஸ்ரீ பெரியவாள் அவனைத் திருப்பி கேட்ட கேள்விகள் எங்களுக்கு ஆச்சர்யத்தைத் தந்தது.
"உன் அப்பாவுக்கு இரண்டு சம்சாரமா? அக்கா - தங்கை இருவரும் அவருக்கு வாழ்க்கைப்பட்டார்காளா?"-பெரியவா
"ஆமாம்.....ஆமாம்" என்றான் அவன்.
ஸ்ரீ பெரியவாள் சொன்னார்கள்;
"மூத்தவளுக்குக் குழந்தை பிறக்கவில்லை என்று இரண்டாவதாக அவளுடைய தங்கையையும் கல்யாணம் செய்து கொள்வது அந்த காலப் பழக்கம். அதன் பிறகு மூத்தவளுக்குக் குழந்தை பிறந்து விடும்.
அப்போது வீட்டில் ஒரே ரகளைதான்.அப்படித்தானே?"
"ஆமாம்..ஆமாம்..பெரியவா சொன்னது நூற்றுக்கு நூறு.. அவ்வளவும் உண்மை." என்று அவன் ஆச்சர்யப்பட்டான்.
பிறகு, "இதற்கு விமோசனம் என்ன?" என்று கேட்டான்.
பெரியவாளின் விமோசன அறிவுரை;
"நீ, சிறு தாயார் வீட்டிற்குப் போய் அவளுக்கு சுசுருஷை (உதவி) செய்து கொண்டு அவளிடம் பிரியமாக இருந்து விட்டால் அப்புறம் சண்டை, சச்சரவு ஒன்றும் இருக்காது" என்றார்கள். பெரியவாள்.
இளையவளுக்குக் குழந்தையில்லை. அதனால் இவனே அவளுக்குக் குழந்தையாகப் பிரியமாக இருந்துவிட்டால் அப்புறம் சண்டை எப்படி வரும்?
கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-41
தட்டச்சு-வரகூரான் நாராயணன்
புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்.