Breaking News :

Thursday, May 02
.

மறக்க முடியுமா?: இன்றும் நடிகர்களுக்கு ரோல் மாடல் ரகுவரன்தான்!


1990 ஆம் ஆண்டு கடலூர் ரமேஷ் தியேட்டரில் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான,  புரியாத புதிர் திரைப்படம்  ரகுவரன் என்ற நடிகரை எனக்கு அறிமுகப்படுத்தியது.
 
ஐ நோ ஐ நோ ஐ நோ ஐ நோ ஐ நோ ஐ நோ ஐ நோ ஐ நோ ஐ நோ…. ஒரு சைக்கோ கேரக்டர் எப்படி இருக்கும் என்பதை கண்முன்  நிறுத்தினார் ரகுவரன்.. அதற்கு முன் தமிழ் சினிமாவில்  வில்லன் என்றால் அவன் மேல்  சிவப்பு கலர்  லைட் லோ  ஆங்கிளில் இருந்து அடிக்க அவன் கண்களை உருட்டி பார்ப்பான்.

ஆனால் இங்கே கதையே  வேறு… கோட் சூட் எல்லாம்  போட்டு  சைக்கோவாக கலக்கி இருப்பார்.. அது மட்டுமல்ல… அனந்தபாபுவை ரேகா பார்த்து விட்டு  வந்தவுடன்  அவர் அடிக்கும் டயலாக்குளை பார்த்து ஆண்கள் விசில் அடித்து கைதட்டியும் கொண்டாடினார்கள்… பெண்கள் தங்களுடைய கணவனோடு  சைக்கோ கேரக்டர் ரகுவரனை ஒப்பீடு செய்துக்கொண்டார்கள்.. அந்த அளவுக்கு சைக்கோ கேரக்டரில் ரகளை  செய்து இருப்பார் ரகுவரன்.

ஆனால் ரகுவரன் 1989 ஆம் ஆண்டு சிவா திரைப்படத்தில் ரஜினியின் நண்பனாக நடித்த போது.. அல்லது அதே வருடத்தில்  ராம் கோபால் வர்மா இயக்கத்தில் வெளியான சிவாவில் தமிழல் உதயம் திரைப்படத்தில் நடித்த போதே   பெரிய அளவு ரசிகர் கூட்டத்தை பெற்றுதரவில்லை ... ஆனால் கவனிக்கத்தக்க நபராக இருந்தார் என்பேன்.

ரகுவரன் கேரளாவில் பிறந்தவர் … கோவை கல்லூரியில்  படித்துக்கொண்டு இருக்கும் போதே டிஸ்கண்டிநியூ செய்து விட்டு சினிமா ஆசையில் சென்னை வந்தவர்…   சின்ன சின்ன கன்னட  மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் தலைகாட்டிக்கொண்டு இருந்தார்… சென்னைபிலிம் இண்ஸ்டியூட்டில்  படித்தார்….  நடிகர் நாசரோடு இருந்த பழக்கத்தின் காரணமாக   நாடகங்களில் நடித்தும் வந்தார்.

சிவசங்கரி எழுதிய  ஒரு மனிதனின் கதையின்  நாவலின் தொலைகாட்சி வடிவத்தில் நடித்தாலும் ,  தமிழில் ஏழாம் மனிதன் (அறிமுகம்)  கூட்டுப்புழுக்கள் ,ஒரு ஓடம் நதியாகின்றது, .மந்திரபுன்னகை, கவிதை பாட நேரமில்லை போன்ற திரைப்படங்களில் நடித்தாலும்,  

1986 ஆம் ஆண்டு தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கும் பதம் பார்த்த  சம்சாரம் அது  மின்சாரம் திரைப்படம் அவருக்கு நல்ல  பெயரை பெற்றுக்கொடுத்த திரைப்படம் என்றாலும்... ஆனாலும் அவரை கவனிக்கத்தக்க அளவில்  தமிழகம் எங்கும்  கலக்கிய  திரைப்படம்  என்று பார்த்தால்  1990க்கு பிறகு அதாவது புரியாத புதிர் திரைப்படத்துக்கு பிறகு என்று தாராளமாக சொல்லலாம்.

பூவிழி வாசலிலே திரைப்படத்தில் கால் உணமுற்றவராக  நடித்ததோடு கொலைகாரனாக நடித்து இருப்பார்… அதே போல பொம்முக்குட்டி அம்மாவுக்கு திரைப்படத்தில் அண்டர்பிளேயில் சிறந்த குணச்சித்திர நடிகரா அசத்தி இருப்பார்…சத்யராஜூக்காக காத்திருப்பு காட்சிகளில் டயலாக் பேசாமலேயே பார்வைகளிலேயே அசத்தியிருப்பார்.

புரியாத புதிர் வந்த போதே  அஞ்சலி திரைப்படத்தில் தன் குழந்தைகளுக்கு கதை சொல்லும் காட்சியிலும் அஞ்சலி பாப்பா ஏன்  இறந்து விட்டது என்பதை பிள்ளைகளுக்கு  கதையாக நெகிழ்ச்சியாக சொல்லும் காட்சிகளில் மனிதர் பின்னி இருப்பார்.

1994 இல் வந்த காதலன் எனக்கு மிகவும் பிடித்த திரைப்படம்…
சிதம்பரம் கோவிலில் பாம் வைத்து விடுவார்… காக்கர்லா கேரக்டர்  வைத்த பாமை எடுக்க சொல்லும்…
வைன்றிங்க..  எடுன்றிங்க..??
அது என்ன மலர்வளையாமா? ஏழுரை கிலோ எமன் சார்…
வெடிச்சிதுன்னா வழிச்சிதான் எடுக்கனும்…
அப்புறம் காசியில எனக்கு  பிண்டம் வைப்பிங்க…

என்று பேசும்  வசனமும் ....படம் நெடுக   வில்லன் அவதாரத்தில் அசத்தி இருப்பார்..

பாட்ஷா , தொட்டாசினுங்கி, முத்து உல்லாசம்,  போன்ற படங்களில் அவர் பெயர் சொன்னவை..
1999 ஆம் ஆண்டு வெளியான அமர்களம் வில்லன் கம் குணச்சித்திர வேடத்தில் நடித்தாலும் அதே ஆண்டில் வெளியான முதல்வன் பட்டி தொட்டி எங்கும்  ரகுவரன் பெயரை  பதிய வைத்த திரைப்படம் என்று சொல்லாம்.

That was nice interview  என்று சொல்லி  சாகும் இடத்தில் கைதட்டலால் அரங்கம் அதிர்ந்தது எனலாம்.

முதல்வன் படத்தில்  நடித்தமைக்கா  தமிழக அரசின் சிறந்த வில்லன் நடிகர் விருதினை பெற்றார்..
2000க்கு மேல் முகவரி, பார்த்தேன் ரசித்தேன், ரோஜா கூட்டம் , ரன்  போன்ற திரைப்படங்கள்  வில்லனில் இருந்து மாறி நல்லவன்  இமேஜூக்கு மாறினார்.

அதன் பின் நான் ரொம்பவும் பார்த்து ரசித்த திரைப்படம் கரு பழனியப்பன் இயக்கத்தில் வந்த  சிவப்பதிகாரம் திரைப்படம்தான்.

1996 ஆம் ஆண்டு நடிகை ரோகினியை திருமணம் செய்துக்கொண்டு 1997 இல் ரிஷிவரன் என்ற ஆண் மகனை ரகுவரன் ரோகினி  தம்பதிகள் பெற்றனர்.

யார் கண் பட்டதோ,.,2004 ஆம்  ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்றனர்.

ஆறு அடி மூன்று அங்குல உயரத்தில் தனக்கென தனி வாய்ஸ் மாடுலேஷனில்  தனியொருவனாக யாருடைய சப்போர்ட்டும் இல்லாமல் சாதித்த நடிகர் ரகுவரன் என்பதில் ஐயம் இல்லை.

2008 ஆம் ஆண்டு யாரடி நீ மோகினி  திரைப்படத்தில் தனுஷுக்கு அப்பாவாக நடித்தார்..  அப்போதே அவர் உடல் நிலை  சரியில்லாமல் ரொம்பவும் கஷ்டப்பட்டு டயலாக் பேசி  நடித்து இருப்பார்…
2008   ஆம் ஆண்டு  மார்ச் மாதம் தனது 49 வது வயதில் மரணத்தை தழுவினார்…

ரகுவரனை எனக்கு ரொம்பவும்  பிடித்து போனது விகடனில் தொடராக வெளி வந்த" காதல் படிக்கட்டுகள்" தொடரில் தன் காதலை மனம் விட்டு சொன்ன போது அந்த மனிதன் எனக்கு மிகவும்  நெருக்கமாகி போனான்.

புரியாத புதிர் திரைப்படத்தில் முதலிரவு அறைக்கு பால்  சொம்பு கொண்டு வரும்   ரேகாவிடம்  எனக்கு பால் எல்லாம் குடிச்சா ஆகாது… டாக்டர் எனக்கு விஸ்கிதான் குடிக்கனும்னு சொல்லி இருக்கார் என்று நக்கல் விடுவார்… ஒரு மனிதனின் கதை தொடர் போலவே… நிறைய குடித்து குடித்து அழிந்து போனார்..… குடி அவர் வாழ்க்கையை சீரழித்தது… திறமையான  நல்ல கலைஞனை சின்னா பின்ன படுத்தியது.

கொஞ்சம் வெயிட் போட்டு இன்னும் 20 வருடம் இருந்து இருந்தால் ரகுவரனால் சாகாவரம் பெற்ற கேரக்டர்களை அனாயாசமாக செய்து அசத்தி இருக்க முடியும்.. என்ன செய்ய..?? தலைக்கு மேல் வெள்ளம்.

ஆனால் ரகுவுக்கு  நினைவுநாள்… இந்த  நாளில் அந்த  ரகுவரன் என்ற  நெட்ட கொக்கு போன்ற உயரமுள்ள கலைஞனை.. அப்பாவி அம்மையப்பனிடம் சுயநலம் மிக்க மகனாக சீறியதை,  காதலன் திரைப்படத்தில் கக்கார்லாவிடம் சீறியதை, அஞ்சலியில் பாசமுள்ள தகப்பனை, புரியாத புதிரில் ஐ நோ என்று ஆர்பாட்டம் செய்தவனை,  அகலாது அனுகாது என்று முதல்வன் படத்தில் முதல்வனாக  திருக்குறள் பேசியவனை  எப்படி மறக்க முடியம்..?

முக்கியமாக கண்டுகொண்டேன்   கண்டுகொண்டேன் திரைப்படத்தில்  தபுவுக்கு  பாஸ் கேரக்டரில் கொஞ்ச நேரமே வந்தாலும்... டபுள் விடம் கால்கள் மிஸ் ஆனதை சொல்லும் காட்சியில் அசத்தியிருப்பார்.

தமிழ் சினிமாவில் நடித்த மொத்த  திரைப்படத்துக்கும்  அந்த படத்தின் ஒரு சில  காட்சிகள் போதும் என்பேன்..

ரகுவரன் ஜி.. மண்ணை விட்டு மறைந்தாலும் நீங்கள் செல்லுலாய்டில் செதுக்கி வைத்த காட்சிகள் கண்டிப்பாக இனி வரும் நடிகனுக்கு ரோல் மாடலாக இருக்கும்.

நன்றி:  ஜாக்கிசேகர் முகநூல்


.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.