Breaking News :

Friday, April 26
.

ஆனந்தவல்லி


ஆனந்தவல்லி

லஷ்மி பாலகிருஷ்ணன்
பாரதி புத்தகாலயம்

அடிமை வாணிகம் ஆங்கிலேயர் காலத்தில் இருந்தது அறிவோம். அமெரிக்காவில் இருந்ததைக் கூட கருப்பு அடிமைகளின் கதை வழி அறிவோம். ஆனால் உள்ளூரில், நம் தமிழ் நாட்டிலேயே சிறுமிகள் முதற்கொண்டு அடிமைகளாக விறகப்பட்டார்கள் என்பது இந்த நாவல் மூலம் தெரிகிறது.

ஆனந்தவல்லி என்ற இந்த, வரலாற்று உண்மைகளைக் களமாகக் கொண்ட நாவல் லஷ்மி பாலகிருஷ்ணனால் எழுதப்பட்டது. இவர் எழுதாப் பயணம் என்ற நூலை (ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தையின் வளர்ப்பு பற்றிய அனுபவங்கள்) எழுதியவர். இந்த நூலை மூல மராட்டி மொழி ஆவணங்களை ஆய்வு செய்து எழுதியுள்ளார். மராட்டிய மன்னர்களின் ஆட்சி தஞ்சை, திருவையாறு பகுதிகளில் 17,18 ஆம் நூற்றாண்டுகளில் இருந்தது. கிட்டத்தட்ட 180 ஆண்டுகளின் ஆவணங்கள் தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இதை அமைத்தது கூட சரபோஜி மன்னர், மராட்டிய மன்னர்களின் கடைசி அரசர். இவர்கள் ஆங்கிலேயர்களுக்கு அடங்கி, பெயருக்கு மன்னனாக இருந்தார்கள் தங்கள் இறுதி காலங்களில்.

நாவல் ஆனந்தவல்லி என்ற, அரண்மனைக்கு விற்கப்பட்ட பெண்ணின் கதை. அவளுடைய தந்தை பெரிய கொத்தன் தன் 12 வயது மகளை, காசுக்கு ஆசைப்பட்டு விற்று விடுகிறான். அவள் 5 வயதாய் இருக்கும் போது மணம் புரிந்த சபாபதி, அரசு ஊழியன் வந்து கேட்கும் போது விற்கப்பட்ட சேதி அறிகிறான். பெரிய பெண் ஆனவுடன் தங்கள் ஊருக்கு அனுப்பி விடுகிறேன் என்று சொன்னதை, மீனாட்சியின் அப்பா மறைத்ததை அறிகிறான். அவளை மீட்க போராடுகிறான்.

விற்கப்பட்ட அடிமைகள் அரண்மனையின் பணிப்பெண்களாக நியமிக்கப்பட்டு, அரசரின் கத்தி மனைவிகள் ஆக்கப்படுவார்கள். கத்தி மனைவிகள் எனில் அரசருக்கு பதிலாக அரசரின் கத்தியை சாட்சியாக வைத்து, தாலியை அதில் வைத்து, கட்டிக் கொள்ளுதல். இவர்களுக்கு அரசரின் மனைவி என்ற அந்தஸ்தைத் தவிர அனைத்து வசதிகளும் கிடைக்கும். அரசரின் ஆலோசனை மையங்களாகவும், அவர்களின் பாலின வேட்கையை தணிப்பவர்களாகவும் நடக்க வேண்டும். இவ்வாறு வந்து சேர்ந்த ஆனந்தவல்லி என்று பெயர் மாறிய மீனாட்சி, ஒரு நாள் போன்ஸ்லே வம்சத்தின் கடைசி மன்னர் அமரசிம்மனுடன் தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. தனக்கு அடைக்கலம் கொடுத்த ருக்மணி பாய் சொல்லுக்கு அடங்கி, இசைகிறாள். அந்த ருக்மணி பாய் அமரசிம்மன் காலமான போது உடன்கட்டை ஏறுகிறார். உடன் கட்டை ஏறும் காட்சிகள்(அரசரின் மனைவி பவானி பாய் மற்றும் கத்தி மனைவி ருக்மணி பாய்) பிரமாண்டமாய் விளக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் தமிழ் நாட்டிலும் உடன்கட்டை ஏறுதல் என்னும் கொடுமை இருந்தது என்று தெரிகிறது. 

உடன் கட்டை ஏறுதலின் அவசியம் பற்றிய உரையாடல்கள், அதைத் தடுக்க ஆங்கிலேயர்கள் முயற்சிகள், ஏறாதவர்கள் வாழக்கூடிய வாழ்வு போன்றவை நாவலில் ஆங்காங்கே வருகின்றன.

இறுதியில் தன் அம்மாவைக் காண ஆசைப்பட்ட ஆனந்த வல்லியின் ஆசை நிறைவேறியதா, அவள் கணவன் மீனாட்சியை மீட்க முடிந்ததா என்பதை நூலில் காண்க. மனைவி விற்கப்பட்டதை அறிந்தும், அவள் மீது தவறில்லை, அவளை மீட்டுவருவேன் என்று கிளம்பும் சபாபதி பாத்திரம் அருமையாகப் படைக்கப்பட்டுள்ளது. நாவல் முழுவதும் அந்தக் காலத்திற்கேயுரிய வார்த்தைகளை உபயோகித்துள்ளார் லஷ்மி பாலகிருஷ்ணன்.

அவசியம் அனைவரும் படிக்க வேண்டிய நாவல். எப்படி பெண்கள் அந்தக் காலத்தில் நடத்தப்பட்டுள்ளார்கள், எதையெல்லாம் கடந்து வரவேண்டிய ருந்தது என்பதையெல்லாம் அறிந்து கொள்ளவேண்டியுள்ளது.

இந்த வருட புத்தாண்டுப் பரிசாக Priyadharshini Gopal கொடுத்த இந்த நூலை, ஒரு உரை நிகழ்விற்காக படிக்கவேண்டியிருந்தது. வருட ஆரம்பத்திலேயே ஒரு நல்ல நூலை வாசிக்க நேர்ந்ததில் மகிழ்ச்சியும் நன்றியும்.

-கோவை பிரசன்னா.

இன்றைய நுழைபுலம் உரை கமெண்டில் உள்ளது. இயன்றோர் கேட்டு, கருத்துகளைப் பகிரவும்)


Tags

    .

    Sign up for the Newsletter

    Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.