திருமணம் கைகூட பெரியவா தந்த அம்பாள் படம்!
‘இல்லறமல்லது நல்லறமன்று’ என்பது ஆன்றோர் வாக்கு. ஆனால், தங்கள் பெண்ணுக்கோ அல்லது பிள்ளைக்கோ இன்னும் நல்ல மண வாழ்க்கை அமையவில்லை என்று கவலைப்படும் பெற்றோர்கள் பலர் இன்றைக்கும் இருக்கவே செய்கின்றனர்.
1960-களின் தொடக்கத்தில் பல பெற்றோர்கள் மஹா ஸ்வாமிகளை தரிசித்தபோது, தங்களின் பிள்ளைகளுக்குத் திருமணம் தடைப்பட்டு வருவதாக தங்களுடைய வருத்தத்தைத் தெரிவித்துக் கொண்டு பிரார்த்தனை செய்தார்கள்.
அவர்களின் கவலையைப் போக்கு வது போல் மஹா ஸ்வாமிகள் பவானி அம்பிகையின் திருவுருவ வண்ணப் படத்தை உரிய மந்தரம் மற்றும் பூஜிக்கும் முறையுடன் அனுக்கிரஹம் செய்து அருளினார்.
பூஜிக்கும் முறை:
அம்பிகையின் படத்தை ஃபிரேம் செய்து பூஜையறையில் வைத்து தினமும் காலையில் ஸ்நானம் செய்துவிட்டு, அம்பிகையையும் மஹா ஸ்வாமிகளையும் தியானித்துவிட்டு, முதல்நாள் அம்பிகையின் நெற்றியிலும் வலது திருவடியிலும் சந்தனம் குங்குமப் பொட்டு வைத்து, படத்தின் பின்பக்கம் கொடுக்கப்பட்டுள்ள சமஸ்கிருத ஸ்லோகத்தை பாராயணம் செய்து, பழமோ அல்லது சுத்த அன்னமோ நிவேதனம் செய்யவேண்டும். சமஸ்கிருத மொழி தெரியாதவர்கள் இந்தப் பக்கத்தில் உள்ள தமிழ் ஸ்லோகத்தை பாராயணம் செய்யலாம்.
தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பொட்டு வீதம் பிரதட்சிணமாக அதாவது, இடமிருந்து வலமாக படத்தைச் சுற்றி வைத்துக்கொண்டு வரவேண்டும். அம்பிகையின் இடது திருவடியில் நிறைவு செய்யவேண்டும்.
ஒவ்வொரு நாளும் ஸ்லோக பாராயணத்துடன் நிவேதனமும் செய்யவேண்டும். இந்த பூஜையை யாருக்கு திருமணம் நடைபெற வேண்டுமோ அவர்தான் செய்ய வேண்டும். ஒரு பிரதட்சிணம் பூர்த்தி அடைவதற்குள் திருமணம் கூடிவரும். சில காரணங்களால் திருமணம் கூடி வரவில்லை என்றால், வைத்த பொட்டுக்களைத் துடைத்துவிட்டு மறுபடியும் பூஜையைத் தொடங்கவேண்டும். இரண்டாவது பிரதட்சிணம் நிறைவு பெறுவதற்குள் கண்டிப்பாகத் திருமணம் கைகூடி வரும் என்பது பலரும் அனுபவத்தில் கண்ட உண்மை.
திருமணம் கைகூட பெரியவா தந்த அம்பாள் படம்!
சரண்யே! வரேண்யே! ஸுகாருண்ய மூர்த்தே!
ஹிரண்யோத ராத்யை ரகண்யே! ஸுபுண்யே!
பவாரண்ய பீதேஸ்ச மாம்பாஹி பத்ரே!
நமஸ்தே! நமஸ்தே! நமஸ்தே! பவானி
ஸ்லோகத்தின் தமிழ் வடிவம்:
தஞ்சம் அளிப்பவள் நீ, தரத்தில் உயர்ந்தவள் நீ,
தயையதன் உருவமதாய் இலகுறும் அம்பிகை நீ,
நம் சிவனோடு அரியும் நான்முகனும் அளவில்
நாட்டறியா இசையோய் புனித மிகுந்தவளே,
அஞ்சினன் அஞ்சினன் யான் அடர்பிறவித் துயர் கண்டு
அபயம் அளித்திடுவாய் அன்னை சுமங்கலையே
செஞ்சரணாம்புயமே சேர்ந்து பணிந்துருகிச்
சென்னி வணங்கினன்யான் பவானி எனும் சுடரே!