"அன்னத்தால" மட்டும்தான் ஒருத்தரை பூரணமா திருப்தி பண்ண முடியும் - மகா பெரியவா

kanchi-maha-periyava
"அன்னத்தால" மட்டும்தான் ஒருத்தரை பூரணமா திருப்தி பண்ண முடியும் - மகா பெரியவா

அதை ஒரு தரம் பண்ணிட்டா, அடுத்த வேளைக்குத்தான் பசிக்கும். ஆனா அரைகுறையா திருப்தி பண்ணினா இன்னமும் சாப்டலாம்னு தானே தோணும்"- மகாபெரியவா..

(பொட்டலமா மடிச்சுக் குடுக்காம உட்காரவைச்சு திருப்தியாகறாப்ல அன்னம் பரிமாறுங்கோ. அதுதான் புண்ணியம்" )


1960-ம் வருஷம் க்ஷேத்ர யாத்ரை பண்ணிண்டு இருந்த சமயத்துல, திருச்சியில் ஒரு இடத்துல சில நாட்கள் தங்கினார் மகாபெரியவா .சுத்துவட்டாரத்துல இருந்தெல்லாம் ஏராளமான பக்தர்கள் வந்து ஆசார்யாளை தரிசனம் பண்ணிண்டு இருந்தா. பக்தர் கூட்டம் ரொம்ப அதிகமா இருந்ததாலே வரிசை நகர்கறதுக்கு ரொம்பவே  நேரமாச்சு.

வயசுல பெரியவா,சின்னவா, குழந்தைகள்னு நிறையப்பேர் வரிசையா வந்ததால், " எல்லாரும் ரொம்ப தூரத்துலேர்ந்தெல்லாம் வர்றா....யாராவது முடிஞ்சா அன்னதானத்துக்கு ஏற்பாடு செய்யலாமே!" அப்படின்னார் மகாபெரியவா.
அவர் நினைச்சா அன்னதானம் பண்ணுங்கோன்னு உத்தரவே போடலாம். ஆனா, அவர் ஒருபோதும் அப்படிச் சொன்னதில்லை.கோரிக்கை மாதிரிதான் சொல்வார்.

அன்னதானம் செய்யலாம்னு ஆசார்யா சொன்ன அன்னிக்கே, மடத்துக்காராளும் ,பக்தர்களும் சேர்ந்துண்டு அதைத் தொடங்கினா. ஆரம்பிச்ச அன்னிக்கே அன்னதானம் நடந்த இடத்துல கூட்டம் நெருக்கித் தள்ளிண்டு நிறைஞ்சுது. ஒருத்தருக்கும் இல்லைன்னு சொல்லாதபடிக்கு அன்னதானம் நடந்தது

அந்த சமயத்துல முதல் பந்தியில உட்கார்ந்து சாப்பிட்ட சிலர், ஆறாவது,ஏழாவது பந்தியிலயும் சாப்பிடறதுக்கு வந்தா. சிலர்,கடைசிப் பந்திக்கு வந்தா. அவாளை அடையாளம் கண்டுபிடிச்சுட்ட மடத்து சிப்பந்திகள் சிலர், இலையில உட்கார்ந்தவாளை எழுப்பி வெளியில அனுப்பிட்டா. ஒருவழியா அன்னிக்கு அன்னதானத்தை முடிச்சா......!
தரிசன நேரம் முடிஞ்சதும்,சாயங்கால அனுஷ்டானங்களை முடிச்சுட்டு, மடத்து சிப்பந்திகளை எல்லாம் கூப்பிட்டார் மகாபெரியவா.

"என்ன அன்னதானமெல்லாம் நன்னா நடந்ததா? ஏதாவது விசேஷம் உண்டா?" அப்படின்னு கேட்டார்.
"ரொம்ப பிரமாதமா நடந்தது பெரியவா .எல்லாரும் திருப்தியா சாப்டா.ஒரே ஒரு குறை. கூட்டம் நெருக்கித் தள்ளிண்டு வந்ததால சமளிக்க முடியலை. அதனால அன்னத்தைப் பொட்டலமா கட்டிக் குடுக்கலாம்னு நினைக்கிறோம்.நீங்க உத்தரவு குடுத்தேள்னா ...அப்படியே செஞ்சுடலாம்"-சில ஊழியர்கள் சொன்னார்கள்.

எல்லாத்தையும் கேட்டுண்ட மகாபெரியவா, "எல்லாருக்கும். வயறு நெறையாப்ல திருப்தியா போட்டதா சொன்னேளே. அப்படி நெறைஞ்சிருந்தா, ஒரு பந்தியில ஒக்கார்ந்து சாப்டவா, ரெண்டு மூணு பந்திக்கு அப்புறம் ஏன் திரும்பி வரப்போறா? அன்னத்தால மட்டும்தான் ஒருத்தரை பூரணமா திருப்தி பண்ண முடியும். அதை ஒரு தரம் பண்ணிட்டா , அடுத்த வேளைக்குத்தான் பசிக்கும். ஆனா அரைகுறையா திருப்தி பண்ணினா இன்னமும் சாப்டலாம்னு தானே தோணும்.

தப்பை ஒங்கமேல வைச்சுண்டு சாப்டவந்தவாளை எலைலேர்ந்து எழுப்பி அனுப்பறது பாவம் இல்லையோ? நடந்த எல்லாமும் தனக்குத் தெரியும்கற மாதிரி கேட்டார் மகாபெரியவா

சர்வ வியாபியான ஈஸ்வரன் கிட்டே இருந்து எப்படி எதையும் மறைக்க முடியாதோ ,அதேமாதிரி அந்த பரமேஸ்வரனோட அம்சமான ஆச்சார்யாகிட்டே இருந்தும் எதையும் மறைக்க முடியாதுங்கறதை உணர்ந்து அமைதியா தலைகுனிஞ்சுண்டு நின்னா எல்லாரும்

"ம்....அப்புறம் என்ன சொன்னேள்? பொட்டலமா மடிச்சுக் குடுத்துடலாம்தானே? உட்காரவைச்சு அன்னம் பரிமாறது கஷ்டமா இருக்கறதால இந்த முடிவுக்கு வந்தேளாக்கும்? நீங்க சொல்றாப்புல பொட்டலமா கட்டிக் குடுத்தா, எங்கே வைச்சுண்டு சாப்பிடுவா? எலையை எங்கே போடுவா? குடிக்க ஜலம்,கை அலம்ப ஜலத்துக்கெல்லாம் எங்கே போவா? இதையெல்லாம் யோசிச்சேளோ?" பெரியவா சொல்லச் சொல்ல பதில் பேச முடியாம நின்னுண்டு இருந்தா எல்லாரும்.

மகாபெரியவாளே தொடர்ந்தார்; " ஒங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமோ? யாத்ரை வந்துண்டு இருக்க சமயத்துல ஒரு மடத்துல குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட எலையில மிச்சம் மீதி ஒட்டிண்டு இருந்த பதார்த்தங்களை எல்லாம் நரிக்குறவா சேமிச்சுண்டு இருந்ததைப் பார்த்தேன்.அதையெல்லாம் காயவைச்சு சேமிச்சு வைச்சுண்டு சாப்ட எதுவும் கிடைக்காதப்போ பயன்படுத்திப்பா..! அவா எடுத்துண்டு தூக்கிப் போடற எலைகள்ல ஒட்டிண்டு இருந்ததை நாய்கள் திங்கறது.அதுக்கப்பறம் மீதி உள்ள எலையை மாடுகள் சாப்டறது. நீங்க பொட்டலமா மடிச்சுக் குடுத்தா,இத்தனை ஜீவன்களுக்கும் அது கிடைக்குமா? அதனால உட்காரவைச்சு திருப்தியாகறாப்ல அன்னம் பரிமாறுங்கோ. அதுதான் புண்ணியம்" சொல்லி முடிச்சார் மகாபெரியவா.

மகாபெரியவா சொன்ன காட்சிகளை நாமளும் கூட பலசமயங்கள்ல வழியில் பார்த்திருப்போம். ஆனா, நாம சாப்பிடறச்சே, அதையெல்லாம் மனசுல வைச்சுக்கறதோ, மத்தவாளுக்கும் உணவு கிடைக்கணும்னு நினைக்கறதோஇல்லை. பரமேஸ்வரன் மட்டும்தான் லோகத்துல உள்ள சகல உயிர்களுக்கும் படியளந்து எதுவும் பட்டினியா இருக்கக் கூடாதுன்னு நினைக்கறதா புராணங்கள் சொல்றது.

அதையே இந்த அனுபவத்தின் மூலமா நிரூபிச்ச மகாபெரியவா, அந்த மகேஸ்வரனோட அம்சம்தான்கறது சந்தேகம் இருக்க முடியுமா என்ன?

கட்டுரையாளர்-பி.ராமகிருஷ்ணன்
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
நன்றி-17-05-2018 தேதியிட்ட குமுதம் பக்தி (ஒரு பகுதி)