கூலியாளாகவும் வந்த சிவபெருமான் - மே தினம் சிறப்பு

may-2025-may-day-special
கூலியாளாகவும் வந்த சிவபெருமான் - மே தினம் சிறப்பு

பாண்டிய நாட்டின் தலைநகரான மதுரையில்  கனமழை பெய்து, வைகையாறு  பெருக்கெடுத்தோடியது. எனவே  ஒவ்வொருவர்  வீட்டிலிருந்தும்  ஒருவராவது வந்து வைகையின் கரையைப் பலப்படுத்தும் பணியை மேற்கொள்ளுமாறு கட்டளையிட்டார்! மன்னன் வரகுண பாண்டியன். (இவரிடமே  முன்பு மாணிக்கவாசகர் அமைச்சராக இருந்தார்.)  அனைவரும் அப்பணியைச் செவ்வனே செய்தனர்.

ஆனால் வந்தி என்ற   பிட்டு விற்கும்  ஒரு மூதாட்டியால் மண்ணைச்  சுமக்கவும்  முடியவில்லை!  அவரளுக்காகப் பணிசெய்ய வேறு யாரும்  அவளுக்கு உறவுமில்லை.  எனவே கடவுளிடம் தன் நிலை குறித்து முறையிட்டாள் வந்தி.  வந்தியின் நிலையை கண்ட சிவனார்  ஒரு கூலியாளின்  வடிவில் அங்கே  வந்து,  தாயே நான் இந்த மண்ணை சுமக்கிறேன்! அதற்கு  பதிலாக நீ  வேக வைக்கும் பிட்டில் உதிர்ந்து போவதையெல்லாம் எனக்குக் கொடு!  என்றார்.

சிவனார்  வேண்டுதலுக்கு  மூதாட்டியும் சம்மதித்தாள். ஆனால் சிவபெருமானின்   திருவிளையாடலால் அன்று அவள்  வேகவைத்த  பிட்டெல்லாம்  உதிர்ந்துப்  போனது. எனவே அதையனைத்தையும்  கூலியாளுக்குக்  கொடுக்க, அதை வாங்கி உண்ட  சிவபெருமானோ,  மண்ணைச்  சுமக்காமல், ஒரு மரத்தடியில் படுத்துத்  தூங்கினார்.  

அப்பொழுது  அங்கே மேற்பார்வை பார்க்க வந்த பாண்டிய மன்னன் ஒரு வேலையாள் தூங்கிக்கொண்டிருப்பதை கண்டு கோபமாகிப்  பிரம்பால்  அவரை  பிரம்பால்  அடிக்க, அந்த அடியானது அனைவரின் முதுகிலும் விழுந்தது. சிவபெருமானும்  ஒரு கூடை மண்ணை எடுத்து வைகையின் கரையில் கொட்டிவிட்டு மாயமானார். மறுகணமே வைகையின் உடைப்பும் சரியானது. பின்னரே அங்கிருந்த  அனைவரும், கூலியாளாக வந்தது சொக்கநாதரே! என்றுணர்ந்தனர்.

இந்த திருவிளையாடல் அரங்கேறியது ஆவணி மாத ஆரம்பத்தில். தன்னை தஞ்சம் என்றடைந்தவருக்கு உதவவும்,  இவ்வுலக உயிர்கள் அனைத்தும் தன்னுள் அடக்கம்! என்பதையும் விளக்கவுமே   சிவபெருமானால்இத்திருவிளையாடல்,
மதுரையில் நடத்தப்பட்டது.  

மாணிக்கவாசகரைத் தொல்லைப்படுத்திய மன்னனின் ஆணவத்தை அடக்கவும் எண்ளணியே திருவிளையாடலை நிகழ்த்தினார்! சிவனார். மாணிக்கவாசகருக்காக, நரியைப் பரியாக்கிய திருவிளையாடலை அடுத்தே வைகையை உடைப்பெடுக்க வைத்து, பின்னர் காத்தருளிய  திருவிளையாடலும்  சிவபெருமானால்  நிகழ்த்தப்பட்டது.

என் விருப்பமல்லாமல் இவ்வுலகில் எதுவும்  நடைபெறாது! நாடாளும் மன்னனாலும் நீயும் ஒரு சிறு துரும்பே! என மன்னனுக்கு உணர்த்தவுமே சிவபெருமான். இத்திருவிளையாடல்களை மீனாட்சியம்மை அரசாண்ட மதுரை மண்ணில்  நிகழ்த்திக் காட்டினார்.

இத்திருவிளையாடலை விளக்கவே மதுரையில் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மூல நட்சத்திரத்தன்று பிட்டுக்கு சிவனார்  மண் சுமந்த விழா கொண்டாடப்படுகிறது.  மதுரையில்  அன்றைய தினம் பொற்கூடையுடனும், பொன் மண்வெட்டியுடனும் இந்த விழா நாளில் வைகை ஆற்றிலிருந்து   சுந்தரேசர் கோயிலுக்கு எழுந்தருளுவர்.

வேறெங்கும் இல்லாத வகையில் இங்கு  திருவிழவை காணவரும் பக்தர்களுக்கு அனைவருக்கும்  பிட்டு பிரசாதமாக   வழங்கப்படுகிறது.   சிவபெருமான் மண் கொட்டிய இடம் வைகையின் கரையில் இன்றும் உள்ளது.

எளியோனுக்கு எளியோனாக, கூலியாளாகவும் வந்து, ஆதரவற்ற மூதாட்டிக்கு உதவிய சிவபெருமானின் கருணையுள்ளத்தை  நாம்,  இந்த உழைப்பாளர் தினத்தில் போற்றி வணங்கி, சிவனருளைப் பெறுவோம்.