ஸ்ரீ யோக நரசிம்ம (அக்காரக்கனி) ஸ்வாமி!
யோக நரசிம்ம சுவாமி வீற்றிருக்கும் திருத்தலங்களில் சோளிங்கர் உயர்ந்ததாக கருதப்படுகிறது.
ஸ்ரீ அமிர்தவல்லி தாயார் ஸமேத ஸ்ரீ யோக நரசிம்ம (அக்காரக்கனி) ஸ்வாமி (உற்சவர் - ஸ்ரீ பக்தவத்சல பெருமாள்) திருக்கோயில்.
திருக்கடிகை (சோளிங்கர், சோளிங்கபுரம்),
(64-வது திவ்யதேசம்)
இவ்வூரில் ஒரு கடிகை (சுமார் 1/2 மணி நேரம்) தங்கி இருந்தாலே மோக்ஷம் கிடைக்குமாதலால் கடிகாசலம், திருக்கடிகை என்ற பெயர்கள் ஏற்பட்டனவாம்.
விஸ்வாமித்ரர் இங்கே கடிகையில் நரஸிம்ஹரை ஒரு கடிகை (நாழிகை) துதி செய்து ப்ருஹ்மரிஷி பட்டத்தை பெற்றதாக ஐதீகம்.
இத்தலத்தில் ஒரு நாள் தங்கினாலும் பீடைகள் தொலைந்து மோக்ஷம் சித்திக்கும் என்று ஸ்தல புராணம் கூறுகிறது.
அதற்கான காரணம்
மகிமை வாய்ந்த நரசிம்மர் பல்வேறு வடிவங்களில் பல்வேறு தலங்களில் கோயில் கொண்டு அருள்கிறார். அவற்றில் ஒன்று, சோளிங்கர்.
ஒரு நாழிகை நேரம் இத்தலத்தில் தங்கியிருந்தாலே வீடுபேறு வழங்கும் புண்ணிய தலம் இது.
சோளிங்கர் என அழைக்கப்படும் சோழ சிங்கபுரம் நரசிம்மர் பெயரால் அமைந்ததாகும்.இங்கு இரண்டு மலைகள் உள்ளன.
பெரிய மலை மீது நரசிம்ம சுவாமி யோக நரசிம்மராக விளங்குகிறார்.பின் கரங்களில் சங்க சக்கரம் விளங்க,முன் கரங்களில் சிம்மகர்ண முத்திரைகளைக் கொண்டுள்ளார்.
இவருக்கு நேர் எதிரிலுள்ள சிறிய மலையில் யோக ஆஞ்சநேயர் உள்ளார்.இவர் நான்கு கரங்களுடன் சதுர்புஜ ஆஞ்சநேயராகக் காட்சியளிக்கின்றார்.இது சிறந்த பிரார்த்தனைப் பதியாகும்.
ஒரு ஆண்டில் பதினோரு மாதங்கள் இத்தலத்தில் யோக நிலையிலேயே, கண்மூடி அமர்ந்திருக்கும் இந்த நரசிம்மர் கார்த்திகை மாதம் மட்டும் கண் திறப்பதாக கூறுகின்றனர்.
ஆகவே இத்தலத்தில் கார்த்திகை மாதம் முழுக்க திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.
கார்த்திகை மாதம் வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்று கிழமைகளில் இந்த கோவிலில் சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெறும்.
அதிலும் கார்த்திகை ஞாயிற்று கிழமைகளில் மட்டும் நரசிம்மரை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள்.
எனவே இந்த நாட்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும்.
கார்த்திகை ஞாயிற்றுகிழமைகளில் கோவில் நடை அதிகாலை 4 மணிக்கே திறக்கப்பட்டு அபிஷேகமும், பூஜைகளும் நடக்கும்.
இதனால் கார்த்திகை மாதத்து ஞாயிற்றுக் கிழமைகளில் நடைபெறும் விழாவில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு பிரார்த்தனைகளைச் செலுத்துகின்றனர்.