திருப்பதி வெங்கடாசலபதி சித்தர்கள் அருளிய ரகசியம்!

tiruppati-venkatesa-perumal-siddhar-secret
திருப்பதி வெங்கடாசலபதி சித்தர்கள் அருளிய ரகசியம்!

முதலில் திருச்சானூர் ஸ்ரீபத்மாவதித் தாயாரைத் தரிசனம் செய்ய வேண்டும். இயன்ற மட்டும் கால்நடையாகவே மேல் திருப்பதி மலையை ஏறிச் சென்று தரிசனம் செய்வது உன்னதமானதாகும். ஏனென்றால் மலை நடைபாதையில் அற்புதமான தெய்வ வனங்கள் அமைந்துள்ளன.

ஸ்ரீஅகஸ்திய பெருமான் உள்ளிட்ட சித்த புருஷர்கள், மகரிஷிகள் தவமிருந்த இத்திருவனங்களில் பல மூலிகைகளின் அற்புதமான நறுமணமும் மூலிகைச் சத்துக்களைத் தாங்கி வரும் இயற்கைக் காற்றும் நம்முடைய தேகத்திற்கு ஆன்மீக ஒளியையும், ஆரோக்யத்தையும், தேக வலிமையையும் தர வல்லதாம், சுகபந்து என்ற மூலிகையின் நறுமணம் கொடிய சரும வியாதிகளைப் போக்கக் கூடியதாகும்.  AIDS வியாதியை அறவே போக்கக் கூடிய செருப்பட்டை என்ற மூலிகையைத் தங்கால் ஆஸ்ரமத்திலும் திருப்பதி மலையிலுமே காணமுடியும்..

திருப்பதி தலமானது பூலோகத்திற்கு உரித்தான நிலப்பரப்பன்று. வைகுண்டத்தின் ஒரு சிறு அணுப் பகுதியே திருப்பதி மலையாகும். சாட்சாத் வைகுண்ட புஷ்கரணியில் நீராடி ஸ்ரீஆதி வராக சுவாமியைத் தரிசனம் செய்து ஸ்ரீனிவாசனாம் வேங்கடாலசபதி சுவாமியின் திருக்கோயிலினுள் செல்ல வேண்டும்..

ஸ்ரீவேங்கடாசலபதியைத் தரிசனம் செய்யும் முறை :-
ஸ்ரீ பெருமாளின் திருவதனத்தைப் பாதங்களிலிருந்து துவங்கி திருப்பாதங்கள், திரு முட்டிகள், இடை, நாபி, புஜங்கள், மகாலட்சுமி வாசம் செய்யும் திருமார்பு, திருக்கண்டம் (கழுத்து), திருவாய், திருநாசி, திருக்கண்கள், திருநாமம், திருசிரசு, திருக்கிரீடம் இவ்வாறாகப் பாதாதி கேச தரிசனமே ஸ்ரீவேங்கடாசலபதியைப் பரிபூரணமாகத் தரிசனம் செய்யும் முறையெனச் சித்த புருஷர்கள் விதித்துள்ளனர்.

பாத நமஸ்காரம், பாத பூஜையின் மூலம் பகவானின் திருவடிகளை அடைந்த ஸ்ரீ மகாலட்சுமித் தாயார் இத்தகைய தரிசன முறையின் மூலமாகவே ஸ்ரீவேங்கடாசலபதி பெருமானின் திருமார்பில் உறையும்  பேற்றைப் பெற்றாக அருளியுள்ளார். எனவே இம்முறையில் தான் திருப்பதியில் ஸ்ரீ வேங்கடாசலபதியைத் தரிசனம் செய்தல் வேண்டும். இத்தகைய வழிபாடே ஸ்ரீமந் வேங்கடாசல நாராயண மூர்த்தியின் அருளைப் பரிபூரணமாகப் பெற்றுத் தரும் என்று சித்தர்கள் உரைக்கின்றனர்.

இதைத் தவிர இத்தலத்தில் ஏழை எளியோர்க்கு அன்னதானம் போன்ற தான தரும நற்செயல்களைச் செய்தல் ஸ்ரீபெருமாளின் அனுக்ரகத்தைப் பன்மடங்காகப் பெருக்கி நம்மைக் காக்கும்.

திருமலையானைத் தரிசனம் செய்ய இயலா ஊனமுற்றோர், குருடர்கள், தொழு நோயாளிகள், முதியோர், ஏழை, எளியோர் போன்றோருக்கு ஸ்ரீ சீனிவாசப் பெருமாளின் திவ்ய பிரசாதமாம் லட்டு இனிப்பினை அத்தகையோர்க்கு வழங்கினால் இறையருளைச் சுய நலமின்றிப் பகிரும் மனப் பக்குவத்திற்காக ஸ்ரீ ஏழுமலையானே விசேஷமான அனுக்ரகத்தை வர்ஷிக்கின்றார்.

இவ்வாறு இறைத் தலங்களைத் தரிசிக்கும் போது மனோஹரி சித்தி என்ற புண்ணியம் கிட்டுகிறது.. இதனால் நம் அன்றாட வாழ்வில் எதிர்கொள்ளும் இன்னல்களைக் கடக்கும் மன உறுதி கிட்டுகின்றது.

இத்தலங்களைத் தரிசிப்பதோடு நில்லாது அன்னதானம், பிரசாத தானம் ஆகியவற்றை ஏழை, எளியோர்க்கு வழங்கும் போது நம்முடைய சுயநலமின்மையைக் கௌரவிக்கும் பொருட்டு இறைவனே மனமுவந்து ‘ஜனோஹரி சித்தி’ என்ற புண்ணியத்தை வரமாக அளிக்கின்றான். இந்த ‘ஜனோஹரி சித்தி‘ என்பது உயிர் காக்கும் கவசம் போல் நம் குடும்பத்திற்கு உறுதுணையாக நின்று நம்மைப் பேராபத்துக்களினின்றும் காப்பாற்றுகிறது.

வாழ்க்கையில் மனம் தளராது பிறர் நலத்திற்காக நாம் வாழ வேண்டும், அதற்கே இறைவன் நம்மைப் படைத்துள்ளான் என்ற திடமான மன வலிமையை அளிக்கும் இந்த ஜனோஹரி சித்தி வளர வளர சாந்தமான சௌபாக்கியம் நிறைந்த வாழ்க்கை அமையும்.