வியக்க வைத்த விநாயகர் கோவில்கள்!
விநாயகர் புகழ் பாடி ஒரு செயலைத் தொடங்கினாலே, அந்த நிகழ்வு சிறப்பாய் நடந்து முடிக்கும் என்பது நம்மில் பலருக்கு நம்பிக்கை.
தமிழகத்தின் பல்வேறு விநாயகர் கோவில்களுக்கும் தனித்தனியே பல அற்புத வரலாறுகளும், அதிசய சக்திகளும் இருக்கின்றன. சில விசித்திரமான விநாயகர் கோவில்களும் இருக்கின்றன.
தாயாருடன் பள்ளியறையில் இருக்கும் விநாயகர் :
விநாயகர் தலங்களிலே வேறு எங்கும் இல்லாத ஒரு சிறப்பு குறிப்பிட்ட கோவிலில் உள்ளது. இங்கு விநாயகருக்கு பள்ளி அறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பள்ளியறையில் இவருடன் அமர்ந்திருப்பது அவரின் தாயாரான சக்தி தேவியார்.
குழந்தை வரம்:
தன் தாயாருடன் அமர்ந்திருப்பதாலோ என்னவோ தன்னைத் தேடி வரும் பக்தர்களுக்கு குழந்தை வரும் அருளுகிறார். இந்த நம்பிக்கை நீண்ட நெடும் காலமாக இருக்கிறது. புதுச்சேரியில் அமைந்துள்ள மணக்குள விநாயகர் கோவில்தான் அது. இங்கு மூலவர் கிணற்றின்மீதே அமர்ந்துள்ளார்.
இது கிணறு அல்லது குளம் என்றே அழைக்கப்படுகிறது. உலகில் ஒரு தெய்வம் அதன் தீர்த்தகுளத்தின் மேலே அமர்ந்திருப்பது இந்த கோவிலில் மட்டும்தான்.
இந்த விநாயகர் அமர்ந்திருக்கும் பீடத்தின் இடது ஓரம் அரை அடி விட்டத்தில் ஒரு குழி செல்கிறது. இதன் ஆழம் எதுவரை என்று கண்டுபிடிக்கப்படவில்லை. இதில் அதிசயம் என்னவென்றால் இந்த குழியில் எப்போதுமே நீர் இருக்கிறது.
மலை உச்சியில் அமர்ந்திருக்கும் பிள்ளையார்
உலகில் வேறெந்த பிள்ளையாரும் மலை உச்சியில் அமர்ந்திருப்பதாக தெரியவில்லை. அப்படியே, இருந்திருந்தாலும் இந்த அளவுக்கு பிரபலமான கோவில் வேறெங்கும் இல்லை.இந்த கோவில் அமைந்திருக்கும் உயரம் 275 அடி. மலைக்கோவிலுக்கு செல்ல 417 படிக்கட்டுகள் உள்ளன. இங்கு ஆயிரம்கால் மண்டபம் இருக்கிறது.
இப்படியாக சிறப்பை பெற்ற கோவில் திருச்சி மலைக்கோட்டையில் அமைந்துள்ள உச்சிப் பிள்ளையார் கோவில். இந்த பிள்ளையாருக்கு அருகம்புல் சாற்றி வழிபடுகின்றனர். பால் அபிஷேகம் சிறப்பு வாய்ந்தது.
குட்டு வாங்கிய விநாயகர்:
உச்சிப் பிள்ளையார் கோவிலில் இருக்கும் விநாயகர் சிலையில் தான் வாங்கிய குட்டு இன்னும் அப்படியே வடுவாக காட்சியளிக்கிறது. விபீஷணன்தான் விநாயகரை கொட்டினார் என்பது புராணக்கதை.
அசல்பதிவேற்றியவருக்கு நன்றி.
உலகிலேயே பெரிய கொளுக்கட்டை:
உலகின் மிகப் பெரிய அளவிலான பிள்ளையார் கொளுக்கட்டை இந்த கோவிலில்தான் விநாயகருக்கு படைக்கிறார்கள். மேலும் இந்தியாவில் இருக்கும் ஒரே குடைவரைக் கோவில் இதுவாகும். அதாவது பிள்ளையாருக்கென கட்டப்பட்ட குடைவரைக் கோவில்.பல்லவர் காலத்தில் உருவாக்கப்பட்ட இந்த கோவிலின் பழமை 1600 ஆண்டுகள் ஆகும். இவ்வளவு பழமையான கோவில் இது. இந்தியாவின் அல்லது உலகின் மிகப் பழமையான பிள்ளையார் கோவில் இதுவாகத்தான் இருக்கும்.
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில்:
சிவகங்கை மாவட்டம் பிள்ளையார் பட்டியில் அமைந்துள்ள கற்பக விநாயகர் கோவில்தான் அது. ஒவ்வொரு பிள்ளையார் சதுர்த்தியின் போதும், விநாயகப் பெருமான் வெள்ளி மூஷிக வாகனத்தில் எழுந்து கோவில் உட்பிறகாரத்தில் வலம் வருவதாக நம்பிக்கை. சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சியும் பிரம்மாண்டமாகஇருக்கும்.
ஆசியாவின் மிகப் பெரிய விநாயகர்:
கோவை மாவட்டத்தில் அமைந்திருக்கும் புலிய குளம் விநாயகர் கோவில் உலக சாதனைக்கு சொந்தமான ஒரு கோவில் ஆகும். இந்த புலியகுளத்தில் இருக்கும் முந்தி விநாயகர் தான் ஆசியாவின் மிகப் பெரிய விநாயகர் ஆவார். ஆசியா தாண்டி விநாயகர் கோவில்கள் அந்த அளவுக்கு சிறப்பு இல்லை. எனவேஇதுதான் உலகின் மிகப்பெரிய விநாயகர் ஆக இருக்கும்...
தமிழகத்தின் மூத்த விநாயகர்!
திண்டிவனம் அருகே உள்ளது ஆலகிராமம். இங்கு சுமார் 1500 ஆண்டுகள் பழமையான 'எமதண்டீஸ்வரர்' சிவாலயம் ஆலயம் அமைந்துள்ளது. சிவன், எமனுக்கு காட்சியளித்து கங்கையை வருவித்த தலமாக திகழ்கிறது. இங்குள்ள பல்லவர் காலத்திய விநாயகர் சிற்பம், தமிழகத்திலேயே மிகவும் பழமையான விநாயகர் சிற்பம் என ஆய்வாளர்களால் கருதப்படுகிறது. அதாவது பிள்ளையார்பட்டி விநாயகரை விட பழமையான சிற்பமாகும். அதனால் 'மூத்த விநாயகர் என அழைக்கப்படுகிறார்.