வியாழக்கிழமை குரு பகவான் வழிபாட்டு பலன்கள்!
வியாழக்கிழமை செல்வ வளத்தை பெறுவதற்கும், மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை அமைவதற்கும் உண்டான பரிகாரங்களை செய்ய மிகவும் சிறப்பான நாள்.
இந்த வியாழக்கிழமையில் நாம் செய்யக்கூடிய சிறிய செயல்கள் கூட வெற்றிகரமான வாழ்விற்கு வழிவகுப்பதாக இருக்கும்.
அந்த வகையில் வியாழக்கிழமை என்பது குருவுடன் தொடர்புடைய நாளாகும். ஒன்பது கிரகங்களில் முக்கியமானது குரு என்னும் வியாழன் கிரகமாகும். தேவ குரு பிரகஸ்பதியின் அருளை பரிபூரணமாக பெற்ற ஒருவர் நிச்சயம் அனைத்திலும் வெற்றி காண்பார் என்பது நம்பிக்கை.
அனைத்து தெய்வங்களுக்கும் எதை வேண்டி நாம் வழிபாடு செய்கிறோமோ அதை தரக்கூடிய ஆற்றல் என்பது இருக்கிறது. இருப்பினும் இந்த தேவைகளை பூர்த்தி செய்வதற்கு இந்த தெய்வத்தை தான் வழிபட வேண்டும் என்று நம்முடைய முன்னோர்கள் கூறியுள்ளனர். இதோடு மட்டுமல்லாமல் கிரகங்களும் சாதகமாக இருந்தால்தான் நம்முடைய வாழ்வில் செல்வ செழிப்பு உயரும் என்று கூறப்படுகிறது.
வியாழக்கிழமையில் செய்ய வேண்டியவை:
வியாழக்கிழமை உலகையே காத்து ரட்சிக்கும் விஷ்ணுவுக்கு உகந்த நாள் ஆகும். இந்த நாளில் விஷ்ணுவை வழிபடுவதன் மூலம் லட்சுமி தேவியும் மகிழ்ச்சி அடைகிறாள்.
அன்னை லட்சுமியின் அருளால் ஒருவருக்கு அபரிமிதமான பணமும், மகிழ்ச்சியும் கிடைக்கும். விஷ்ணு பகவான் மற்றும் அன்னை லட்சுமியின் அருளால் வாழ்வில் உள்ள அனைத்து குறைகளும் நீங்கும்.
வியாழக்கிழமை அன்று அதிகாலையில் ஸ்நானம் செய்துவிட்டு விஷ்ணுவையும், அன்னை லட்சுமியையும் ஒன்றாக வழிபடுங்கள். இப்படிச் செய்வதால் கணவன், மனைவிக்கிடையே இடைவெளி என்பதே இருக்காது. அவர்களுக்கு மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை அமையும்.
தானம் இல்லாமல் எந்த விரதமும், சடங்கும் நிறைவடையாது. வியாழக்கிழமை அன்று குங்குமம், சந்தனம் அல்லது மஞ்சளை தானம் செய்யவும். அதோடு நெற்றியில் குங்குமம் வைத்து கொள்வதை வழக்கமாக்கி கொள்ளவும். இதன் காரணமாக ஜாதகத்தில் குரு வலுப்பெற்று சுப பலன்களை தரத் தொடங்குவார்.
தோஷம் நீங்க, வியாழக்கிழமை அன்று குளிக்கும் நீரில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூளை சேர்த்துக் குளிக்கவும். மேலும் குளிக்கும் போது, 'ஓம் நமோ பகவதே வாசுதேவாய' என்ற மந்திரத்தை உச்சரிக்கவும். முடிந்தால் வியாழக்கிழமை அன்று மஞ்சள் நிற ஆடைகளை அணியவும்.
வியாழக்கிழமை அன்று விரதம் இருந்து வாழைக்கன்றுக்கு நீர் ஊற்றவும். இதனால் திருமணத்தடை நீங்கும். திருமணமானவர்கள் இந்த விரதத்தை கடைபிடித்தால், அவர்களின் திருமண வாழ்க்கையில் எந்த பிரச்சனையும் ஏற்படாது.
வியாழக்கிழமை காலை, வீட்டின் பிரதான வாசலில் கோலம் இட்டு, சிறிது வெல்லம் வைக்கவும். இவ்வாறு செய்வதால் வீட்டில் மகிழ்ச்சியும், செழிப்பும் உண்டாகும். பின்னர் பசுவிற்கும் உணவளிக்கவும்.
வியாழக்கிழமை அன்று யாருக்கும் கடன் கொடுக்கவோ, யாரிடமும் கடன் வாங்கவோ கூடாது என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். இதன் காரணமாக, ஜாதகத்தில் குரு பலவீனமாகி, நிதி சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும்.
விஷ்ணுவை வழிபடும் போது, அவருக்கு முன்னால் நெய் தீபம் ஏற்றி, மஞ்சள் பூக்களுடன் துளசியினால் அர்ச்சனை செய்து வழிபடவும்.
இவ்வாறு வழிபட்டு வர அன்னை மஹாலக்ஷ்மியின் பரிபூரண அருள் கிடைத்து வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் நடக்கும்.
மந்திரம்
குருபகவான் காயத்ரி மந்திரம்
ஓம் விருஷபத் வஜாய வித்மஹே
க்ருணி ஹஸ்தாய தீமஹி
தந்நோ குருஹ் ப்ரசோதயாத்..
ஸ்லோகம்
குருபகவான் ஸ்லோகம்
குணமிகு வியாழ குருபகவானே
மணம் உள வாழ்வு மகிழ்வுடன் அருள்வாய்!
ப்ரகஸ்பதி வியாழப் பரகுரு நேசா
க்ரஹதோஷமின்றி கடாக்ஷித் தருள்வாய்!!
நன்றி வாழ்க நலமுடன் வளமுடன்