நவக்கிரக பரிகாரங்கள் செய்தால் தோஷம் நீங்குமா?

navagraka-parikaram-palangal
நவக்கிரக பரிகாரங்கள் செய்தால் தோஷம் நீங்குமா?

1.சூரியனுக்குரிய பரிகாரம் :-
ஞாயிற்றுக்கிழமை கோதுமையினால் செய்யப்பட்ட சப்பாத்தி ரொட்டி கோதுமை தோசை போன்றவற்றை செய்து தானும் சாப்பிடலாம். வீட்டுக்கு வரும் உறவினர்க்கும் கொடுக்கலாம். குழந்தைகளுக்கு கோதுமை அல்வா வாங்கிக் கொடுத்து சந்தோஷப் படுத்தலாம். இதனால் மேலதிகாரிகள் கோபம் தணியும் . அரசு சம்பந்தமான காரியங்கள் கை கூடும்.

2. சந்திரனுக்குரிய பரிகாரம் :-
பலா மரத்தின் வடக்கு போகும் வேரை பூச நட்சத்திரத்தில் அல்லது அமாவாசை ஞாயிற்றுக்கிழமை கூடிய சுபதினத்தில் காப்புக் கட்டி எடுத்து வந்து தாயத்தாக்கி கட்டிக் கொள்ள சந்திர திசை முழுவதும் நலம் தரும்.

3. செவ்வாய்க்குரிய பரிகாரம் :-
செவ்வாய் பகவானின் மூலிகையான சிவனார் வேம்பை முறைப்படி பூஜை செய்து காப்புக் கட்டி எடுத்து அணிந்து கொள்ள அதிகார பதவி கிட்டும். உடல் நலம் தேறும். எதிரிகள் சரணடைவார் . உறவுகள் மேம்படும். எதிலும் முக்கியத்துவம் கிட்டும். செவ்வாயின் திசை முழுவதும் பலன் தரும். சகோதரர்கள் நலம் பெறுவார்.

4.புதனுக்குரிய பரிகாரம் :-
புதனுக்குரிய இருவேலி மூலிகை அல்லது செந்நாயுருவி வேருக்கு முறைப்படி பூஜை செய்து காப்புக் கட்டி உயிர் கொடுத்து பூஜையில் வைத்து புதன்கிழமை புதன் ஓரையில் ( காலை 6:00 மணிக்குமேல் 7:00 மணிக்குள்) தாயத்தாக்கி கழுத்தில் அணிந்து கொள்ளுங்கள். இதனால் படிப்பவர்கள் பலன் பெறுவர். தோல் நோய் வராது. சிந்தனைக்கு ஏற்ப சுப சந்தோஷ மேன்மையுண்டாகும். குடும்பத்தினர் மகிழ்வார்கள். பெண்களால் முன்னேற்றம் வரும்.

5.குருவுக்குரிய பரிகாரம் :-
வியாழனின் சமித்தாகிய அரச மரத்தின் புல்லுருவியை முறைப்படி பூஜை செய்து தாயத்தாக்கி அணியவும். வியாழனின் திசையில் தனதான்ய அபிவிருத்தி புத்திர சுகம், குருவருள், இறையருள் கிடைக்கும்.

6. சுக்கிரனுக்குரிய பரிகாரம் :-
சுக்கிரன் மூலிகையான கருஊமத்தன் செடிக்கு முறைப்படி பூஜை செய்து காப்புக்கட்டி சாப நிவர்த்தி செய்து உயிர் கொடுத்து எடுத்து வந்து. தாயத்தாக்கி அணியவும் நன்கு சிரத்தையுடன் தூபம் கொடுத்து வந்தால் சுக்கிரன் திசை முழுவதும் வெற்றி கிடைக்கும். வண்டி, வாகனம், வீடு, நல்லதுணை அமையும். சுக்கிரன் எந்த நிலையில் இருந்தாலும் திசை முழுவதும் நல்ல பலனைத் தரும். அறுபத்து நான்கு கலைகளிலும் தேர்ச்சி உண்டாகும் இயல் இசை நாடகத்தில் கலைத்துறையில் முழு வெற்றி கிடைக்கும்.

7.சனி பகவானுக்குரிய பரிகாரம் :-
சனிபகவான் மூலிகையான செவ்வலரி வேரை முறைப்படி காப்புக்கட்டி பூஜை செய்து வடக்கு போகும் வேரை எடுத்து அணிந்து கொள்ள வெற்றிமேல் வெற்றி உண்டாகும். இது பெரும் சக்தியையும் சர்வ மேன்மையையும் தரும். ஆயுள் முழுவதிலும் பலன் தரும். நினைத்ததை சாதிக்க வைக்கும். ஏழரை சனி, அஷ்டமத்து சனி, கண்டச் சனி, விலக சர்வ சாபங்களும் விலகும். சனி பகவான் திசை வருடம் பத்தொன்பதும் நல்ல பலன் கிட்டும்.

8. ராகுவுக்குரிய பரிகாரம் :-
இராகு மூலிகை எட்டி மரத்தின் வடக்கு போகும் வேருக்கு காப்புக்கட்டி பூஜை செய்து எடுத்து வந்து பூஜை அறையில் வைத்து அந்த வேருக்கு வாசனைத் திரவியங்கள் பூசி இராகுவின் காயத்ரி மந்திரம் 1008 முறை ஜெபித்து தாயத்தாக்கி அணிந்து கொள்ள இராகு திசை முழுவதும் நல்ல பலன் கொடுக்கும்.

9.கேதுக்குரிய பரிகாரம் :-
வேப்ப மரத்தின் வடக்கு போகும் வேருக்கு அசுவணி , மகம், மூலம் நட்சத்திரத்தில் காப்புக்கட்டி பூஜை செய்து எடுத்து வந்து தாயத்தாக்கி அணிந்து கொள்ள கேது பகவான் திசை முழுவதும் நல்ல பலன் தரும் . வாழ்வில் பிடிப்பு இல்லாதவர்கள் வீட்டில் துன்பம் , துயரம் உள்ளவர்கள், நல்ல பெயரை எடுக்க இயலாதவர்கள் , மேலதிகாரி தொல்லையுடையவர்களும், இம்மூலிகையால் இதன் மகிமையால் வாழ்நாள் முழுவதும் நல்ல பலனைத் தரும்.

காப்பு கட்டுதல் -
அதாவது செடிக்கு சாபவிமோசனம் கொடுத்த பின் செடியின் அடிப்பகுதியில் வேரினை ஒட்டி ஒரு மஞ்சள் நூலில் முனை முறியாத மஞ்சளை கட்டி அதனை கட்டி 3 முடிச்சுகள் போட வேண்டும். பின் கற்பூர தீபம் காண்பித்து தொட்டு வணங்கி அதன் பின் பிடுங்க வேண்டும்.இதுவே காப்பு.

சாப விமோசனம் -.
செடியின் முன் அமர்ந்து,
ஓம் மூலி உனக்கு இடப்பட்ட சக்தி சாபம் நசி நசி, சித்தர்கள் சாபம் நசி நசி , தேவர்கள் சாபம் நசி நசி , எவரிட்ட சாபமாயினும் அனைத்து சாபங்களும் நசி நசி , ஓம் மூலி உன் உயிர் உன் உடலில் நிற்க சிவா.
3 முறை சொல்ல மூலிகையின் சாபங்கள் விலகும்.

இதுவே சாபவிமோசனம் கொடுத்து காப்பு கட்டி வேர் பிடுங்கும் முறையாகும். இந்த முறை அனைவரும் கையாளும் எளிமையான முறையாகும்.

இந்த மாதிரியான வேலைகளை தொழில் அறிந்தவர்கள் செய்தால்தான் பலன் கிடைக்கும் என்று எண்ண வேண்டாம். அனைவரும் கையாளும் எளிமையாக முறைகள் தான்.

அனைவரும் செய்யலாம் தயக்கம் வேண்டாம். பயன்படுத்தி பயன் அடைவீர்.

- மகிழா