குட்டிக்கதை - நிம்மதி
'ஏங்க, நீங்களும் பக்கத்து வீட்டு முருகேசனும் ஒண்ணா படிச்சீங்க, ஒண்ணா வேலைக்குப் போனீங்க, ஒண்ணாவே ரிட்டையரும் ஆனீங்க!" என்று கோமதி சொல்லிக் கொண்டிருக்கும்போதே இடைமறித்து,
"ஆமா. அதுக்கு இப்ப என்ன?" என்றான் சங்கரன்.
"என்னாவா? அவரு பையனை நல்லா படிக்க வச்சு, வேலையும் வாங்கி வச்சு இப்ப என்னான்னா வேலையில உள்ள ஒரு பொண்ணையும் எங்கேயோ தேடிப்புடிச்சி கல்யாணமும் பண்ணி வச்சிருக்காரு. ரெண்டு பேரும் அமெரிக்காவில் வேலை பார்க்கிறாங்க. அப்பா, அம்மா ரெண்டு பேருக்கும் மாசம் பணம் அனுப்புறான் அந்தப் பையன். உங்கப் பையனை இப்படியா படிக்க வச்சீங்க? எங்கேயோ கிராமத்துல உள்ள படிக்காத பொண்ணைப் பார்த்து கட்டி வச்சீங்க" என்று கோமதி கணவன் சங்கரனிடம் கொட்டித் தீர்த்தாள்.
சங்கரன் இதையெல்லாம் கேட்டுக் கொண்டே அமைதியாக பேப்பரைப் படித்துக் கொண்டிருந்தார்.. அப்போது பக்கத்து வீட்டில்,
"என்னங்க! நாம என்னதான் நம்ம பையனைப் படிக்க வச்சி வேலையில உள்ள பொண்ணை கட்டி வச்சாலும் பக்கத்து வீட்ல இருக்கிற நிம்மதி நமக்கு இருக்காங்க? நேத்து மாமியாருக்கு உடம்பு முடியலேன்னு சொன்னவுடனேயே சொன்னவுடலே அவங்கள ஆட்டோவுல கொண்டுபோய் டாக்டர்கிட்ட காண்பிச்சிட்டு வந்து இனிமே நீங்க எந்த வேலையும் செய்யக்கூடாதுன்னு சொல்லி எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டு செஞ்சிகிட்டு தன் மாமியார், மாமனாரை நிம்மதியா வச்சிருக்கா அந்த வீட்டு மருமக. நம்ம மருமக எத்தனை லட்சம் சம்பாதிச்சா என்ன! நிம்மதிதாங்க வாழ்க்கை!" என்றாள் மங்களம் தன் கணவன் முருகேசனிடம்.
- இராதை இரா.பாரதிதாசனின்
ஒரு பக்கக் கதை.
நன்றி - பட்டாம்பூச்சி
சிறுகதை பூங்கா.