"தீச கத்தரிக்காய் கறி" - காஞ்சி மகா பெரியவா

kanji-maha-periyava
"தீச கத்தரிக்காய் கறி" - காஞ்சி மகா பெரியவா

அவர்களுக்கு ஒரே ஆச்சர்யம்.தனது வீட்டில் நடந்த பூஜையில் பெரியவா கலந்து கொண்டுள்ளார் என்ற பூரிப்பு ஒரு பக்கம் இருந்தாலும்,அதை இவ்வளவு துல்லியமாகக் கூற யாரால் முடியும்? என்ற வியப்பு.

 

2013 வருடம் ஜூன் மாதம் சங்கரா டி,வி,யில் கணேச சர்மா நிகழ்த்திய உபன்யாச உரையில் ஒரு  பகுதி.

 

காதால் கேட்டு ஓரளவு நினைவில் தட்டச்சு;வரகூரான் நாராயணன்.

 

பரமாச்சார்யாரை தெய்வமாகக் கொண்டாடிய பல பக்தர்களில் ஒருவரது கதை.

 

அந்த பக்தருக்கு மூன்று மகன்கள். மூவருக்கும் திருமணமாகி ஒரே வீட்டில் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்தனர்.ஒவ்வொரு மாட்டுப்பெண்ணும் ஒவ்வொரு வாரம் சமையல் செய்வது வருவது வழக்கம்.

 

அப்படி இருக்கும் போது, இந்த பக்தர் தினமும் பூஜை முடிந்தவுடன் நைவேத்தியத்திற்கு தயாராக அன்று செய்துள்ள அனைத்தையுமே வைத்து படைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார். (அன்னம் மட்டுமே காண்பிப்பது பலர் வழக்கம்) நைவேத்தியம் நம் பெரியாவாளுக்குத்தான்.

 

அவ்வாறு ஒருநாள் அவரது கடைசி மருமகள் சமையல் முறை.அன்று அன்னத்துடன் ஒரு கத்தரிக்காய் வதக்கல் கறியும் பண்ணியிருந்தார்

 

சிரத்தையுடன்தான் சமைத்தாள் அந்தப் பெண். ஆனால் கறி கொஞ்சம் தீய்ந்து விட்டது. நைவேத்திய நேரம் வந்தவுடன் வழக்கப்படி சமைத்த எல்லாப் பண்டங்களையும் வைத்தாள்

 

.அவர், "ஏனம்மா இப்படி கத்தரிக்காய் தீய்ந்து விட்டது" என்று கேட்கிறார்.மாட்டுப்பெண், "என்ன செய்வது மாமா இப்படி ஆகிவிட்டது" என்று சொல்கிறாள்.

 

இது நடந்து நான்கைந்து மாதங்கள் ஆகியிருக்கும். பெரியவா தரிசனத்துக்கு இந்த குடும்பத்தினர் சென்றுள்ளனர்.

 

அப்போது பெரியவா யதேச்சையாக அந்த பக்தரின் கடைசி மாட்டுப்பெண்ணைப் பார்த்து "நீ தானே அன்றைக்கு ஒரு நாள் 'தீசக் கத்தரிக்காய் கறி' நைவேத்தியத்திற்கு வைத்தவள் என்று சொல்லி புன் சிரிப்பு சிரிக்கிறார்.

 

அவர்களுக்கு ஒரே ஆச்சர்யம்.தனது வீட்டில் நடந்த பூஜையில் பெரியவா கலந்து கொண்டுள்ளார் என்ற பூரிப்பு ஒரு பக்கம் இருந்தாலும்,அதை இவ்வளவு துல்லியமாகக் கூற யாரால் முடியும்? என்ற வியப்பு.

 

பக்தர்களின்பால் அவர் காட்டும் பரிவு,அன்பு இதைத்தான் "தாயிற்சிறந்த தயாவான தத்துவன்" என்று நாம் புரிந்து கொள்வோம்.

 

ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர