"என் கண்ணாடியில் கேமரா இல்லை” - அமைச்சர் பர்வேஸ்

tn-assembly-minister-parvesh-eye-glass-camera
"என் கண்ணாடியில் கேமரா இல்லை” - அமைச்சர் பர்வேஸ்

தவெக அமைச்சர் முகமது பர்வேஸ், AI கேமரா உடன் கூடிய கண்ணாடி மூலம் சட்டப்பேரவை நிகழ்வுகளை படம் பிடிப்பதாக சமூக வலைதளங்களில் சர்ச்சை எழுந்த நிலையில், அமைச்சர் பர்வேஸ் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.

தவெக சார்பில் அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் முகமது பர்வேஸ். இவர் தற்போது, விஜய் தலைமையிலான அமைச்சரவையில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சராக உள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், தவெக அமைச்சர் பர்வேஸ் அணிந்திருக்கும் கண்ணாடி தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ளது. அமைச்சர் பர்வேஸ் மெட்டா ஏஐ கண்ணாடி அணிந்து சட்டப்பேரவைக் கூட்டத்திற்கு வந்ததாக சர்ச்சை எழுந்துள்ளது.

சட்டப்பேரவைக்குள் AI கேமரா வசதி கொண்ட மெட்டா ஸ்மார்ட் கண்ணாடியை அணிந்து வந்ததாகக் கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில், அமைச்சர் பர்வேஸ் தான் அணிந்திருந்த கண்ணாடி குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில், அவரே இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ளார்.

"நான் பயன்படுத்துவது சாதாரண கண்ணாடிதான். அதில் எந்த கேமராவும் இல்லை. இதை அணிந்துகொண்டுதான் சட்டசபைக்குச் செல்கிறேன். இதில் கேமரா இருப்பதாகப் பொய்யான தகவல்களைப் பரப்புபவர்களுக்கு கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். வதந்திகளை நம்ப வேண்டாம். உண்மை நிலையை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்" என அமைச்சர் பர்வேஸ் தெரிவித்துள்ளார்.