சிஎம் விஜய் அதிரடி - எம்எல்ஏ ஆனவர்களுக்கு கார், உதவியாளர் வசதி!

cm-vijay-mla-car-facility
சிஎம் விஜய் அதிரடி - எம்எல்ஏ ஆனவர்களுக்கு கார், உதவியாளர் வசதி!

தவெக ஆட்சியமைத்து 3 மாதங்கள் நிறைவடைந்துவிட்டது. சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.. பட்ஜெட் பற்றிய கருத்துகளை கடந்து தவெக, திமுக இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது. பல்வேறு சுவராஸ்யமான விவாதங்களும் நடக்கின்றன. சொந்தமாக வண்டி இல்லாததால் சட்டமன்றத்துக்கு வருவதற்கு வாகனம், உடன் பணியாற்ற உதவியாளர் வசதி செய்து கொடுக்குமாறு எம்எல்ஏ ஜோதிமணி கோரிக்கை வைத்தார். அவரின் கோரிக்கையை ஏற்று முதல்முறை எம்எல்ஏ ஆனவர்களுக்கு கார், உதவியாளர் வசதி செய்து கொடுக்க விஜய் முடிவு செய்துள்ளார்.

சட்டசபையில் தவெக முதல் பட்ஜெட்டை கடந்த 5 ஆம் தேதி தாக்கல் செய்தனர். பட்ஜெட் மீதான விவாதம் சட்டசபையில் சூடுபிடித்துள்ளது. எம்எல்ஏக்கள் தொகுதி சார்பாக பல்வேறு கோரிக்கை வைப்பது வழக்கம். முதலமைச்சர், சபாநாயகர் மற்றும் துறை சார்ந்த அமைச்சர்களுக்கு எம்எல்ஏக்கள் மனுக்கள் மூலம் தொகுதி சார்ந்த பிரச்சனைகளை கோரிக்கைகளாக வழங்குவார்கள்.


இந்நிலையில் விசிகவின் காட்டுமன்னார்கோவில் எம்எல்ஏ ஜோதிமணி சட்டமன்றத்தில், "அய்யா.. இது என் சொந்த கோரிக்கை. சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் தேவையான கோரிக்கை. இதைப்பற்றி உங்களிடம் ஏற்கனவே கடிதமாக கொடுத்துள்ளேன். நான் 280 கி.மீ தொலைவில் இருந்துதான் சட்டமன்றம் வருகிறேன். பஸ் அல்லது ரயிலில் வருவதற்கு அலவென்ஸ் கொடுக்கறீர்கள். சட்டமன்றத்தின் தனி வண்டியில் வருவதற்கு என்னிடம் சொந்தமாக வண்டி இல்லை. வாடகை வண்டியில் தான் சட்டமன்றம் வருகிறேன்.

என்னுடைய தொகுதி 40 கி.மீ சுற்றளவில் உள்ளது. மக்களின் பிரச்சனை தொடர்பாக தொகுதிக்குள் பயணித்து, குறைகளை கேட்பதற்கு வாகன வசதி இல்லை. உடன் ஒரு செயலாளர் வைத்து கொண்டு அவருக்கு ஊதியம் கொடுப்பதற்கும் என்னிடம் வசதி இல்லை. இப்படித்தான் இன்றைக்குள்ள முக்கால்வாசி சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். அதில் எந்த மாற்றமும் இல்லை. சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வாகனம் உள்ளிட்ட மற்ற வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும்.


காலணி கூட அணிய முடியாத சட்டமன்ற உறுப்பினர் இங்கே உள்ளனர். காலணி வாங்குவதற்கு கூட வசதி வாய்ப்பு இல்லாத எம்எல்ஏ பணியாற்றுகிறார்கள். இந்த சூழலில் லஞ்சம், லாவாண்யம் இல்லாத அரசாங்கத்தை கொடுப்பதாக கூறியுள்ளோம். அதற்கு நம்முடைய உறுப்பினர்களை நலமுடன் பார்த்துக் கொள்ளுமாறு உண்மையுடன், அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி வணக்கம் என்றார்.

அவருக்கு சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அளித்த பதிலில், "மாண்புமிகு உறுப்பினர் உட்காருங்கள். உறுப்பினர் அவர்கள் சட்டமன்ற உறுப்பினராக நேர்மையுடன், உண்மையாக பணியாற்றும் போது ஏற்படும் சிரமங்களை சொல்லியிருப்பதாக கருதுகிறேன். இதை மாண்புமிகு உறுப்பினர்கள், தமிழக சட்டமன்ற மேலவை முன்னாள் உறுப்பினர் நற்பணி சங்கத்தினரும் சில கோரிக்கைகளை வைத்துள்ளனர்.


மாண்புமிகு முதலமைச்சர் இந்த அவையில் உள்ளார். நேரடியாகவே அவரின் கவனத்துக்கு கொண்டு செல்கிறேன். அவரின் கரங்கள் அள்ளி கொடுக்கும் கரங்கள். அந்த வகையில் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கொடுத்துள்ள கோரிக்கையை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்ல விரும்புகிறேன்" என்றார். எம்எல்ஏவின் கோரிக்கை சமூகவலைதளங்களில் வைரலானது. ஜோதிமணியின் கோரிக்கையை ஏற்று எம்எல்ஏக்களுக்கு கார் வாங்கி கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.

இதுகுறித்து தலைமை செயலக வட்டாரங்கள் கூறுகையில், "முதல்முறை எம்எல்ஏ ஆனவர்களுக்கு கார் வழங்க முதலமைச்சர் விஜய் முடிவு செய்துள்ளார். தொகுதி அலுவலகத்துக்கு ஒரு கார் என்கிற அடிப்படையில் கார் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாம். அதை எம்எல்ஏவாக இருப்போர் பயன்படுத்தலாம். இதேபோல முதல்முறை எம்எல்ஏக்களுக்கு உதவியாளர் நியமனம் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் அறிவிப்பு வெளியாகும்" என்றனர்.