த்ரிஷாவிடம் உதயநிதி மன்னிப்பு கேட்க வேண்டும் - குஷ்பூ
மேகதாதுவில் அணை கட்டுவது, தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடாததை கண்டித்து தஞ்சாவூரில் நேற்று திமுக போராட்டத்தில் ஈடுபட்டது. அதில் கலந்து கொண்ட உதயநிதி முதலமைச்சர் விஜயை, நடிகை த்ரிஷாவுடன் ஒப்பிட்டு தரக்குறைவாக பேசியதற்கு எதிர்ப்புகள் எழுந்துள்ளன. உதயநிதியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். த்ரிஷாவிடம், உதயநிதி பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று குஷ்பூ கூறியுள்ளார்.
நடிகையும், பாஜக மாநில துணை தலைவருமான குஷ்பூ எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "உதயநிதிஸ்டாலினின் பேச்சை கேட்டேன். மிகவும் தரக்குறைவாக, மலிவாகவும், பெண்களின் கண்ணியத்தை இழிவுபடுத்தும் வகையிலும் பேசியுள்ளார். வாரிசு அரசியல் கலாசாரத்தின் பிரதிபலிப்பாக உதயநிதி பேச்சு உள்ளது. இந்த மனநிலையில் இருப்பவர்கள் ஒரு அரசியல் கட்சியை எப்படி வழிநடத்துவார்கள்.
இவர்கள் நாளை தமிழகத்ததை ஆளவும் விரும்புகிறார்கள். நம்மை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும். பெண்களை இழிவுபடுத்துவதையும், அவமதிப்பதையும், கேவலப்படுத்துவதையும் அரசியல் நாடகமாக்குகிறார்கள். அதற்கு தங்கள் ஆதரவாளர்களின் கைதட்டல், விசில் எதிர்பார்த்து பேசுவோரிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும். இதை சாதாரணமாக கடந்து செல்ல முடியாது. சாதாரணமாக நினைப்போருக்கு ஒன்றை கூறிக்கொள்கிறேன்.
பெண்களின் கண்ணியம் அரசியல் பலிபீடமாக மாறுகிறது. உங்கள் குடும்பம் உள்பட எந்த குடும்பமும் அதன் விளைவுகளில் இருந்து தப்பிக்க முடியாது. அரசியல் கருத்து வேறுபாடுகள் இயல்புதான். ஆனால் பொதுவெளியில் வைக்கப்படும் கருத்துகளுக்கு எல்லைகள் இருக்க வேண்டும். பெண்கள் எப்போதும் மரியாதையுடன், கண்ணியத்துடன் நடத்தப்பட வேண்டும். அரசியல் லாபத்திற்காக பயன்படுத்தப்படும் பகடைக்காய்களாக பேசக்கூடாது.
உதயநிதியால் தன் அரசியல் எதிரியின் செயல்திறன், தலைமைத்துவத்துக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. அதனால் தனிப்பட்ட அவதூறுகளையும், தரக்குறைவான வார்த்தைகளும் பயன்படுத்தி எளிதாக தப்பிக்கும் வழியாக மாற்றிவிடுகிறார்கள்.
உதயநிதிஸ்டாலின் மற்றும் அவரது தந்தை மு.க. ஸ்டாலின் கடந்த காலங்களில் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்திருக்கலாம். அதை பொது வாழ்வின் தரமாகவோ, அரசியல் நாகரிகத்தின் அளவுகோலாகவோ மாற்ற கூடாது.
பொது மேடையில் நடிகை த்ரிஷாவை இழிவுபடுத்தியதற்காக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, அவரிடம் எந்த நிபந்தனையுமின்றி பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். தன் தவறை ஒப்புக்கொண்டு, அதற்காக மன்னிப்பு கேட்கும் துணிச்சலும், நாகரிகமும் உதயநிதியிடம் இருக்கிறதா என்று பொறுத்திருந்து பார்ப்போம்" என்று கூறியுள்ளார். குஷ்பூவின் பதிவு சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.