யானைக்குக் கொடுத்த சாத உருண்டைகள்,

maha-periyava-story-periyava-teller-story
Maha periyava, story, periyava, teller story, மஹா பெரியவா, சொன்ன கதை

யானைக்குக் கொடுத்த சாத உருண்டைகள், வேகவில்லை,பொறுக்குத் தட்டி போய்விட்டது என்று -பெரியவாளுக்கு எப்படித் தெரிந்தது?

 

சாத உருண்டைகளை பெரியவா, கையால் தொட்டுக்கூட பார்க்கவில்லை, ஏன், ஒரு விநாடி நின்றுகூடப் பார்க்கவில்லை.

 

இப்படியான சிறு விஷயங்களில் கூட சர்வக்ஞத்வம் வெளிப்படுமோ?

 

கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு

தொகுப்பு-டி.எஸ்.கோதண்டராம சர்மா.

தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

 

ஸ்ரீ மடத்து யானைகளுக்கு, தினமும் சாயங்காலம், வெல்லம் சேர்த்து, பெரிய பெரிய உருண்டைகளாக அன்னம் கொடுப்பது வழக்கம். யானைப் பாகன், தன் கையால் உருண்டையை எடுத்து, யானையின் வாய்க்குள் செலுத்துவார்.

 

ஒரு நாள், யானைக்கு உணவு கொடுக்கும் வேளையில், பெரியவா தற்செயலாக அங்கே வந்து விட்டார்கள். உருண்டைகளாகச் சாதம் உருட்டி வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்தார்கள். அருகிலிருந்த சிஷ்யரிடம், "இந்த உருண்டைகளை யானைக்குக் கொடுக்க வேண்டாம்" என்று பாகனிடம் சொல்லும்படி உத்தரவிட்டு விட்டுப்  போய்விட்டார்கள்

 

மானேஜரை அவசரமாக அழைத்தார்கள்.

 

"யானைக்குக் கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த அன்னம், சரியாக வேகவில்லை; காய்ந்து பொறுக்குத் தட்டிப் போயிருந்தது. இப்படியெல்லாம் அசிரத்தையாய் தீனி கொடுக்கக் கூடாது. வாயில்லாப் பிராணி என்பதால், வெந்ததும்,வேகாததுமாக சாதம் கொடுக்கலாமா?...பாகனிடம் சொல்லி வையுங்கோ. சாக்ஷாத் கஜமுகனுக்கு நைவேத்யம் பண்ணுகிற மாதிரி, யானைக்குச் சாதம் கொடுக்கணும்.... அத்தனை பக்தி வேணும்; சிரத்தை வேணும்...புதுசா சாதம் வடிச்சு, யானைக்குப் போடச் சொல்லுங்ங்கோ..."---இது பெரியவா.

 

சிஷ்யர்கள் எல்லாரும் நெகிழ்ந்து போய் விட்டார்கள். ஒரு வாயில்லாப் பிராணியிடம், இவ்வளவு பரிவா?

 

சாத உருண்டைகளை, பெரியவா, கையால் தொட்டுப் பார்க்கவில்லை. ஏன் ஒரு விநாடி நின்றுகூடப் பார்க்கவில்லை!

 

வேகவில்லை, பொறுக்குத் தட்டிப் போய்விட்டது - என்றெல்லாம் எப்படித் தெரிந்தது?

 

இப்படியான சிறு விஷயங்களில்கூட ஸர்வக்ஞத்வம் வெளிப்படுமோ?