பெரியவா ஏரோபிளேன் செய்யக் கூட சொல்லிக் கொடுத்தார்!
"மஹாபெரியவா ஆகாய விமானத்தைப் பத்தி பேசின சம்பவம் தான் இப்போ நாம் பார்க்கப் போறது"!
பெரியவாளோட பரம பக்தர் ஒருத்தர், மினியேச்சர்கள் செய்யற வேலை பார்த்துண்டு இருந்தார். அதாவது, பெரிய பில்டிங், தொழிற்சாலை, கோயில் இப்படிப் பலதையும் ஒரிஜனலோட மினிசைஸ் மாடலா உருவாக்கற வேலை.
ஒரு சமயம் ஏரோனாட்டிகல் காலேஜ் ஒண்ணுலேர்ந்து
மினியேச்சரா ஒரு ஏரோப்ளேன் செஞ்சு தரச் சொல்லி ஆர்டர் வந்தது. விமானம் செய்யறதுக்குத் தேவையான ஸாஃப்டான ஒருவகை மரத்தையும் அவாளே குடுத்திருந்தா.
அந்த பக்தர், மினியேச்சர் விமானம் செய்ய ஆரம்பிச்சார். முதல்ல ஒரு துண்டுக் கட்டையை எடுத்து செதுக்க ஆரம்பிச்சார். முழுசா ரெண்டு நிமிஷம் கூட ஆகலை, அதுக்குள்ளே அந்தக் கட்டை படக்குனு உடைஞ்சுது. சரி... ரொம்ப ஸாஃப்டான கட்டை, நாம கொஞ்சம் அவசரப்பட்டுட்டோம். மெதுவா செதுக்குவோம்னு அடுத்ததை எடுத்து சீவ ஆரம்பிக்கும் போதே அதுவும் உடைஞ்சு விழுந்தது. என்ன இது... ரெண்டு கட்டை வீணாயிடுத்தேன்னு ஒரு நிமிஷம் தயங்கினவர், சரி அதான் தேவைக்கு அதிகமாகவே கட்டை குடுத்திருக்காளே... இது ஒண்ணும் நஷ்டமாகிடாதுன்னு நினைச்சுண்டு மூணாவதை எடுத்து செதுக்க ஆரம்பிச்சார். ஆனா கை அதுக்கு ஒத்துழைக்காம ஏனோ நடுங்க ஆரம்பிச்சுது. ஒருவேளை இதுவும் உடைஞ்சுடுமோ அப்படின்னு இனம் புரியாத பயம் அவருக்குள்ளே எட்டிப்பார்த்தது.
மனசுக்குள்ளே மஹாபெரியவாளை நினைச்சுண்டார். கொஞ்சம் கொஞ்சமா பதட்டத்தைத் தணிச்சுண்டு விமானத்தோட கூர்மையான முன்பகுதியைச் செதுக்க ஆரம்பிச்சார். எதனாலேயோ அவருக்கு கோயிலோட கோபுரம் ஞாபகத்துக்கு வந்தது. "மீதி இருக்கிற கட்டையில ஒரு கோயில் செதுக்கு!' யாரோ மனசுக்குள் சொன்ன மாதிரி இருந்தது.
அவ்வளவுதான் மள மளன்னு விமானத்தோட மினியேச்சரை செஞ்சு முடிச்சார். மீதி இருந்த கட்டைகளைச் செதுக்கி ஒரு கோயிலோட மாதிரியை உருவாக்கினார். சரியா அதே சமயத்துல மினியேச்சர் விமானத்தை வாங்கிக்க வந்தவா, "இந்தப் படம் வழியில ஒரு கடையில இருந்தது. பார்த்ததும் ஏனோ உங்களுக்கு வாங்கித் தரணும்னு தோணித்து!" அப்படின்னு சொல்லி ஒரு படத்தை அவர் கிட்டே குடுத்தா. ஆதிசங்கர பகவத் பாதர், ஒரு மரத்துக்குக் கீழே உட்கார்ந்து தன் சீடர்களுக்கு பாடம் நடத்தற மாதிரியான படம் அது.
அதை வாங்கிண்ட பக்தர், ஏதோ மனசுக்குள்ளே தோணவும் மினியேச்சரா தான் செஞ்சு வச்சிருந்த கோயிலுக்கு உள்ளே அதை வைச்சார். அதுக்காகவே அளவெடுத்து ஃப்ரேம் பண்ணின மாதிரி பர்ஃபெக்டா அங்கே பொருந்தித்து அந்தப் படம். உடனே கண்ணுல ஜலம் முட்ட அந்த மினியேச்சர் கோயிலை எடுத்துண்டு காஞ்சிபுரத்துக்குப் போய் மஹாபெரியவாளை தரிசனம் பண்ணி, அவர் திருவடியில அந்தக் கோயிலை வைச்சார். "என்ன... ஸாஃப்ட் கட்டையில ஆதி ஆசார்யாளுக்கு
கோயில் கட்டி எடுத்துண்டு வந்துட்டயா? பேஷ் பேஷ்.." விமானம் நல்லபடியா அமைஞ்சுதா?" பக்தர் எதுவும் சொல்லாமலே பெரியவா கேட்க, அதிர்ந்து போனார் அந்த பக்தர். சந்தோஷம் ஒருபக்கம், ஆச்சரியம் மறுபக்கமா ஆனந்தக் கண்ணீர் வழிய பேசவும் மறந்து
பெரியவாளையே பார்த்துண்டு நின்னார் அந்த பக்தர்.
"ஒனக்கு ஒரு விஷயம் தெரியுமோ.... ராமாயணம் மகாபாரதத்துல எல்லாம் கூட விமானத்தைப் பத்தின
குறிப்புகள் இருக்கு. போஜராஜன், தான் எழுதின ஸமராங்கண ஸாஸ்திரத்துல ஏரோப்ளேன் எப்படி
செய்யணும்னு விவரமா சொல்லியிருக்கார். அதோட வெளிப்பகுதி வடிவமைப்பு எப்படி இருக்கணும், எந்த மாதிரியான மரத்துல அல்லது உலோகத்துல செய்யணும், அது பறக்கறதுக்கான ஏற்பாடுகள் எப்படி இருக்கணும் னெல்லாம் சொல்லி இருக்கார்.
இந்த விவரத்தை எல்லாம் நான் ஏரோநாட்டிகல் இஞ்சினியர்கள் கிட்டே சொன்னேன். அவா முழுசையும் கேட்டுட்டு, ப்ரொபெல்லர் மாடல் ஏரோப்ளேன் உத்தி இது. அவர் சொல்லி இருக்கற முறையில வடிவமைச்சா ரொம்பவே நன்னா பறக்கும்னு சொன்னா. இன்னொரு விஷயமும் சொல்றேன். விமானத்தைப் பத்தி சொன்ன போஜராஜன், அதோட முக்கியமான யந்த்ர பாகங்களைப் பத்தி சொல்லலை. அதுக்கான காரணங்களையும் அவர் சொல்லி இருக்கார்.
எதிர்காலத்துல ஆகாச ஊர்திகள் மனுஷாளை அழிக்கறதுக்குப் பயன்படுத்தப்படும். அதனால அதைச் சொன்ன பாவம் எனக்கு வேண்டாம்னு குறிப்பிட்டிருக்கார். பெரியவா சொல்லச் சொல்ல, அந்த பக்தருக்கு மட்டுமல்லாம, அங்கே இருந்த எல்லாருக்குமே வியப்பு மிதமிஞ்சித்து. மஹாபெரியவாளுக்கு சாஸ்திரம், சம்பிரதாயங்கள் மாதிரியான விஷயங்கள் தான் தெரியும்னு நினைச்சுண்டு இருந்தவாளுக்கெல்லாம் , பெரியவா விமானத்தைப் பத்திச் சொன்னது வியப்பை ஏற்படுத்தித்து.
ஹர ஹர சங்கர
ஜெய ஜெய சங்கர