அம்மாவின் ஞாபகம்!
~அன்று~
அலுவலக அசதி, வேலைப் பளு, அன்றாட கோபம்
வீட்டுக்கு வந்ததும்...
அவளை திட்டித்தீர்த்த பிறகே
தூங்கப் போவேன்.
மறுநாள் விடிந்த பின்னும்
அலார சப்தத்திற்கும்
விழிக்காமல் சுருண்டு கிடப்பேன்...
அருகில் வந்து பயந்து கொண்டே தலை கோதி
எழுப்பிவிடுவாள்...
மீண்டும் திட்டத் தொடங்குவேன். உறக்கத்தில் தானாய் கொட்டும் வலிதரும் வார்த்தைகள்...
வார்த்தை வசை பழகிவிட்டவள் காப்பியை முன்னே நீட்டுவாள்...
கடிந்து கொண்டே குடித்து விட்டு, அலுவலகம் கிளம்புவேன்...
போகும் போது கையில்
டிபன் பாக்ஸை திணிப்பாள்,
முதல் அடுக்கில் காலை உணவும், இரண்டாம் அடுக்கில் மதிய உணவும்,
தனியாய் ஒரு சின்ன டப்பாவில் தயிரும் இருக்கும்...
அதை வாங்கிக்கொண்டு
வண்டி எடுக்கப்போகிற போது, மறந்து போன ஏதோ ஒன்றை...
ஜெர்கினோ, கண்ணாடியோ,
வாட்ச்சோ, ஹெல்மெட்டோ
எடுத்துக்கொண்டு ஓடி வருவாள்...
தெருமுனை கடக்கும்வரை
பார்த்துக்கொண்டே நிற்பாள்...
அலுவலகம் போன
அரைமணி நேரம் கழித்து
தவறாமல் வரும் அவள் அழைப்பு...
எப்போதும் போல
கைபேசியை எடுத்து
‘வந்து தொலஞ்சிட்டேன்
போனை வை
நைட் வர லேட் ஆகும்
திருப்பிக் கூப்பிடாதே’...
எதிர் முனையில்
பழகிவிட்ட மவுனத்தோடு
சலனமில்லாமல் அவள்...!
~இன்று~
அலாரம் வைத்தாலும்
சரிவர தூக்கம் இல்லை...
அலாரத்தின் அதிர்வுகளில்
என் ஆன்மாவின் இதயம் படபடக்கிறது...
அலுவலகம் போகையில்
சாப்பாடு கொடுக்க யாருமில்லை,
ஹோட்டல் சாப்பாட்டில் ஒட்டி வரும் தலைமுடியை
தூக்கியெறிந்து சாப்பிடப் பழகிவிட்டேன்,
அஜீரண கோளாறு அன்றாட நிகழ்வு...
தினமும் ஏதோ ஒன்றை
மறந்து விட்டே அலுவலகம் வந்து சேர்கிறேன்...
வேலைப் பளுவை கோபத்தை காட்ட யாரும் இல்லை...
கண்ணாடி முன்னே நடுநிசியில் கண்ணீர் விட்டுக் கதறுகிறேன்...
கைப்பேசியில் ..,
எந்த அழைப்பு வந்தாலும்
திட்டு வாங்கி.. திட்டு வாங்கி...
மீண்டும் மீண்டும் வந்து பேசிய
அம்மாவின் ஞாபகம்.
~மகிழா.