பிரயாணத்தின்போது சூலம் பார்ப்பது ஏன்?
சூலம் என்றாலும் வாரசூலை என்றாலும் ஒன்றுதான். பிரயாணத்தின்போதும் வீடு குடிபோகும்போதும் இதனை அவசியம் பார்க்க வேண்டும் என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது. முதலில் சூலம் என்றால் என்ன என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். அந்தந்த நாளில் சூரியனின் தீட்சண்யம் குவியும் திசைக்கு சூலம் என்று பெயர் வைத்தார்கள்.
அந்த திசையில் சூடு அதிகமாக இருக்கும் என்ற காரணத்தால் சூலம் என்று குறிப்பிட்டிருக்கும் திசையில் பயணிக்க வேண்டாம் என்று சொன்னார்கள். சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய உண்மைக் கோள்கள் ஏழினையும் வார நாட்களாக ஞாயிறு, திங்கள் என வாரநாட்களாகப் பெயரிட்டு அழைக்கிறோம். ஒவ்வொரு கோளிற்கும் உரிய திசைக்கு எதிர்திசையை அந்த நாளுக்குரிய சூலம் காட்டும் திசையெனக் குறிப்பிட்டிருப்பர்.
சூரியன், சுக்கிரனின் திசை கிழக்கு என்பதால் ஞாயிறு, வெள்ளி அன்று மேற்கே சூலம் என்றும், சந்திரன், சனி ஆகியோரின் திசை மேற்கு என்பதால் திங்கள் மற்றும் சனிக்கிழமைகளில் கிழக்கே சூலம் என்றும் இவ்வாறாக ஒவ்வொரு நாளிற்கும் குறிப்பிடுவர். இதற்குப் பரிகாரமாக அன்றைய தினம் பகல் 12 மணிக்கு மேல் பால் அல்லது தயிர் சாப்பிட்டுவிட்டு பயணிக்கலாம் என்றும் ஒரு சிலர் குறிப்பிடுவர்.
அலுவல் பணியாகவோ, தொழில்முறையிலோ அடிக்கடி பிரயாணம் செல்பவர்கள் சூலம் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. நம் தமிழகத்தில் ‘சூல் கொண்ட மாதருக்கு சூலம் முக்கியம்’ என்ற பழமொழி வழக்கில் உள்ளது. அதாவது கர்ப்பிணி பெண்கள் பிரயாணம் செய்யும்போது அவசியம் சூலத்தைக் கணக்கில் கொள்ள வேண்டும்.
சூடு அதிகமாக இருக்கும் திசையில் பயணிக்கும்போது வயிற்றில் உள்ள பிள்ளைக்கும், அந்தப் பிள்ளையை சுமக்கும் தாய்க்கும் உடல்நலம் பாதிக்கப்படக் கூடாது என்ற எண்ணத்தில் சூலம் என்று குறிப்பிட்டிருக்கும் திசையில் பயணம் செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தினார்கள்.
அதேபோல, கிரகப்பிரவேசம் என்று சொல்லப்படுகின்ற புதுமனை புகுவிழாவிற்கும் வாரசூலை அவசியம் பார்க்க வேண்டும் என்கிறது ஜோதிட சாஸ்திரம். இதற்கு புதிய வீட்டின் தலைவாசல் எந்த திசையை நோக்கி இருக்கிறதோ அதனை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு கிழக்கு பார்த்த வாசல் என்றால் ஞாயிறு, மற்றும் வெள்ளிக்கிழமைகளில் புதுமனை புகுவிழா நடத்தக் கூடாது.
கிழக்கு நோக்கிய வாசற்படிக்கு பூஜை செய்து வீட்டினுடைய எஜமானர் மேற்கு நோக்கி உள்ளே நுழைய வேண்டியிருக்கும், ஞாயிறு மற்றும் வெள்ளிக் கிழமைகளில் மேற்கே சூலம் என்பதால் அந்த நாட்களில் கிழக்கு பார்த்த வாசல் உள்ள வீட்டிற்கு கிரகப்பிரவேசம் செய்யக்கூடாது என்பது சாஸ்திரம். அதேபோல க்ஷேத்திராடனம் அதாவது ஆன்மிகப் பிரயாணம் செல்பவர்கள் சூலம் பார்க்க வேண்டியது அவசியம். மற்றபடி அலுவல் பணியாக தினந்தோறும் பயணம் செய்பவர்கள் சூலத்தை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.