மழைக்காலம் பலருக்கு மகிழ்ச்சியானதாக இருப்பதில்லை. மழையுடன் சளி, இருமல், காய்ச்சல் போன்ற உடல்நலக் குறைவுகளும் வந்துவிடும். மழைக் காலத்தில் நம்முடைய உடலின் நோய் எதிர்ப்பு சக்தியும் சற்று மந்தமாகிவிடும். இதனால் மிக எளிதில் நோய்த் தொற்று ஏற்பட்டுவிடும் வாய்ப்பு அதிகரிக்கிறது. இந்த காலத்தில் ஏற்படக் கூடிய நோய்கள் அதை எதிர்கொள்ள நம் உடலுக்கு நாம் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை பற்றிப் பார்ப்போம்!
மழைக் காலத்தில் முதன்மையான பாதிப்பாக இருப்பது ஃபுளு எனப்படும் சாதாரண சளி. மழைக் காலத்தில் பாக்டீரியா, வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் என்பதால் மிக எளிதில் சளி தொந்தரவு ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க நம்முடைய உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும். ஊட்டச்சத்து மிக்க உணவை உட்கொள்ள வேண்டும். வெந்நீர் அருந்த வேண்டும்.
மழைக் காலத்தில் ஏற்படக்கூடிய மற்றொரு பிரச்னை கொசுக்களால் ஏற்படும் சில காய்ச்சல்கள். தேங்கும் மழை நீரில் வளர்ச்சியடையும் கொசுக்கள் மூலம் மலேரியா, டெங்கு, சிக்குன்குனியா போன்ற நோய்கள் பரவலாம். இதைத் தவிர்க்க வீடுகளுக்குள் கொசு வருவதைத் தவிர்ப்பதும், வீட்டைச் சுற்றியுள்ள பகுதிகளில் மழை நீர் தேங்காமல் பார்த்துக்கொள்வதும்தான்.
மழைக் காலத்தில் காலரா எனப்படும் வயிற்றுப் போக்கு ஏற்படலாம். காலரா என்பது தண்ணீரில் பரவக் கூடிய பாக்டீரியா தொற்றாகும். வயிற்றுப்போக்கு, வாந்தி தொடர்ந்து உடலில் நீர்ச்சத்து குறைந்து உயிரிழப்பைக் கூட ஏற்படுத்தலாம். வெளியே பாதுகாப்பற்ற தண்ணீர், உணவு எடுத்துக்கொள்வதைத் தவிர்ப்பது நல்லது. வீட்டிலும் நன்கு கொதிக்க வைத்த தண்ணீரையே பயன்படுத்த வேண்டும்.
மற்றொரு உணவு மற்றும் தண்ணீரில் பரவக்கூடிய நோய் டைஃபாய்டு காய்ச்சல் ஆகும். இதுவும் சாலமோனெல்லா டைஃபி எனப்படும் ஒரு வகையான பாக்டீரியாவால் ஏற்படும் தொற்றுதான். ஆரோக்கியமான, சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படும் உணவு, தண்ணீரை எடுத்துக்கொள்வது டைஃபாய்டை தவிர்க்க உதவும்.
மழைக் காலத்தில் கழிவு நீர் மழை நீருடன் கலந்து செல்லும் சூழல் இருக்கும். இந்த சூழல் எலிக்காய்ச்சல் எனப்படும் லெப்டோஸ்பைரோசிஸ் என்ற காய்ச்சல் பரவ காரணமாக இருக்கிறது. வெளியே சென்று வந்த உடன் கால்களை வெந்நீரில் சுத்தம் செய்வது, வெளியே செல்லும் போது காலணி அணிந்து செல்வது போன்றவை எலிக் காய்ச்சல் பரவலைத் தடுக்க உதவும்.