ரத்த அழுத்தம் தான் பக்கவாதம் ஏற்படுவதற்கான முழு முதற் காரணம். ரத்தக் கொதிப்பை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள தேவையான மருந்துகள், உப்புக் குறைந்த உணவு, மது, புகையை தவிர்ப்பது ஆகியவற்றை கடைப்பிடித்தால் பக்கவாத பயமின்றி யார் தயவையும் நாடாமல் வாழ்க்கையை வாழலாம்.
ஆண்டு தோறும் பல லட்சம் பேர் பக்கவாதம் ஏற்பட்டு உயிரிழக்கின்றனர். சுமார் 5 கோடி மக்கள் பக்கவாதத்தால் ஏற்பட்ட குறைபாடுகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களால் சகஜமான நிலையில் வாழ்க்கையை நடத்த முடியாது. எனவே பக்கவாதத்தை பொறுத்த வரை வரும் முன் காத்துக்கொள்வதே சிறந்தது.
பக்கவாதம் என்பது மூளைக்கு போகும் ரத்தம் தடைபட்டு, மூளை இயங்குவதற்கு தேவையான சக்தி இல்லாமல், மூளையின் செல் தசைகள் பாதிப்படையும். மூளையின் எந்த பகுதி பாதிக்கப்பட்டுள்ளதோ, அதைப் பொறுத்து நமது உடலின் பாகங்களில் குறைபாடுகள் ஏற்படும்.
பக்கவாதம் ஏற்பட்டால் உடல் சமநிலையை இழக்கும். ஒன்று அல்லது இரண்டு கண்களிலும் பார்வை இழப்பு, முகம் ஒரு புறமாக இழுப்பது, ஒருபக்க கை, கால் செயல்பட இயலாதது, பேச்சில் குளறுதல், இவற்றை உணர்ந்தால் உடனடியாக அருகே இருக்கும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கோ, பெரிய மருத்துவமனைக்கோ சென்று விட வேண்டும். சில மணி நேரங்களுக்குள் சென்றால் மூளையை செயல்பட வைக்கும் ஊசி செலுத்தி உடல் குறைபாடுகளின்றி தப்பிக்கலாம். இங்கு காலம் பொன்னானது ஆகும்.
கொடுமையான பக்கவாதத்திலிருந்து மீண்டு வருவதைக் காட்டிலும் வருமுன் காப்பதே சிறந்தது. உங்கள் பரம்பரையில் யாருக்கவாது பக்கவாதம் இருக்கிறதா, உங்களுக்கு உயர் ரத்த அழுத்தம் உள்ளதா? இதய நோய் உள்ளதா? உயர் கொழுப்பு சத்து உள்ளதா? இவை பக்கவாதத்தை எப்போது வேண்டுமானாலும் ஏற்படுத்தும்.
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பக்கவாதம் வருவதற்கான வாய்ப்பு 30 சதவீதம் கூடுதல் உள்ளது.
அதே போல் புகைப்பிடித்தல், ரத்த நாளங்களில் கொழுப்பு படிவதை அதிகப்படுத்தும், ரத்தம் உறையும் தன்மையை அதிகரிக்கும், ரத்தத்தின் திரவத் தன்மையை அதிகரிக்கும். எனவே புகைப்பிடிப்பதை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து நிறுத்திவிடுங்கள்.