‘மருதிருவர் – A Dance Musical’ நிகழ்ச்சி அறிமுக விழா!

maruthiruvar-a-dance-musical-vizha
‘மருதிருவர் – A Dance Musical’ நிகழ்ச்சி அறிமுக விழா!

கலைமாமணி மதுரை R. முரளிதரன் வழங்கும் ‘மருதிருவர் – A Dance Musical’ மேடை நிகழ்ச்சி, இயல், இசை, நடனம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, மருது சகோதரர்களின் வாழ்வை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள ஒரு இசை–நாடக வடிவ மேடை நிகழ்ச்சியாகும். இதற்கான திரைக்கதை எழுதி, இசையுடன் கூடிய நாடக வடிவில் இந்த நிகழ்ச்சி, வரும் பிப்ரவரி 7, 2026 (சனி) அன்று சென்னை சர் முத்தா வெங்கட சுப்பா ராவ் கச்சேரி அரங்கில் நடைபெறுகிறது.

இந்த மேடை நிகழ்ச்சியை மக்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையில், பத்திரிகையாளர்கள் முன்னிலையில் இன்று ஒரு அறிமுக விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இயக்குநர் K. பாக்யராஜ், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற உறுப்பினர் மற்றும் செயலாளர் விஜயா தாயன்பன், பத்திரிகையாளர் ராம்ஜி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

கலைமாமணி மதுரை R. முரளிதரன் பேசியதாவது…

உலக வரலாற்றில் முதல் முறையாக மருது சகோதரர்களின் கதையை இயல்–இசை–நடன வடிவமாக மேடையேற்ற உள்ளேன். இதை அறிமுகப்படுத்த வந்துள்ள அனைவருக்கும் என் நன்றிகள். தமிழக மண்ணில் தோன்றிய இந்த இரு சகோதரர்கள் ஆங்கிலேய அரசையே அதிர வைத்தவர்கள். கொரில்லா போர்முறையை கையாண்டு ஆங்கிலேய படைகளை திணறடித்தனர். தமது வீரத்தால் 16 ஆண்டுகள் ஆங்கிலேய ஆட்சியாளர்களை நடுங்க வைத்த விடுதலை வீரர்கள் அவர்கள். கி.பி. 1801 ஆம் ஆண்டு ஜூலை 16 அன்று, “இந்த தேசத்தின் பிறவி எதிரிகள்” என அறிவிக்கப்பட்ட அவர்கள், மக்களிடம் அச்சம் விளைவிக்க இருவரும் தூக்கிலிடப்பட்டனர். ஆனால் அதற்குப் பதிலாக மக்களிடையே புரட்சி எழுந்தது. இந்த வரலாற்றை இயல், இசை, நாடக வடிவில் மேடையேற்ற உள்ளோம். இதில் 70 பேர் பங்கேற்க உள்ளனர். குதிரை, மாடு போன்றவை கூட மேடையேற உள்ளன. இந்த மேடை நாடகத்தை அனைவரும் கண்டு ஆதரவு அளிக்க வேண்டும்.
நன்றி.

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற உறுப்பினர் செயலாளர் விஜயா தாயன்பன் பேசியதாவது…
முரளிதரன் அவர்களின் மகள் காவ்யாவின் நடனத்திற்கு நான் பெரிய ரசிகை. ஒரு நாட்டிய நாடகத்திற்கான அறிமுக விழாவை பார்க்கும் முதல் அனுபவம் இது. முரளிதரன் எப்போதும் வித்தியாசமாக செயல்படுவார். நாட்டிய மேடையில் புலிகேசியாகவும், நாகநந்தியாகவும் ஒரே நேரத்தில் சந்திக்கும் வகையில் ஹாலோகிராம் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மேடையில் நிகழ்த்தியவர் அவர். அவரது திறமைக்கு என் வணக்கங்கள். அவரது அர்ப்பணிப்புக்கு என் வாழ்த்துக்கள். பல்வேறு மேடைகளில் அவர் கலை ஒளிவீசுவதை நான் பார்த்திருக்கிறேன். அவர் ஒரு மிகச் சிறந்த கலைஞர். ‘மருதிருவர்’ என்ற தலைப்பே அருமையாக உள்ளது. முரளிதரன் அவர்களின் முயற்சி வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

தாயன்பன் பேசியதாவது…

இன்று அறிஞர் அண்ணாவின் நினைவு நாள். “வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது” என்று அவர் கூறினார். ஏனெனில் மருது சகோதரர்கள், குயிலி உள்ளிட்ட பலரின் வரலாறு திட்டமிட்டு மறைக்கப்பட்டது. அந்த மறைக்கப்பட்ட வரலாற்றை இங்கு முரளிதரன் எடுத்துச் சொல்கிறார். இயல், இசை, நடனம், நாட்டியம், நாடகம் என அனைத்தையும் ஒருங்கிணைத்து, மொசார்ட் இசையையும் இணைத்து இந்த மேடை நாடகத்தை உருவாக்கியுள்ளார். எல்லாக் கலைஞர்களுக்கும் முன்னுதாரணமாக இருக்கும் முரளிதரன் அவர்களின் இந்த முயற்சி மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என்று ஒரு சக கலைஞனாக வாழ்த்துகிறேன்.
நன்றி.

மக்கள் குரல் ராம்ஜி பேசியதாவது…
இந்த மேடை நிகழ்ச்சி வெறும் ஒரு நிகழ்ச்சி மட்டுமல்ல, நடனம், இசை, நாடகம், சிந்தனை, சமூகப் பொறுப்பு ஆகிய அனைத்தையும் ஒன்றாக இணைத்த ஒரு முயற்சி. தமிழ் கலாச்சாரம், கலைஞர்கள், மருத்துவர்கள், சமூக சேவையாளர்கள் என பல தரப்பினரின் பங்களிப்பு இதில் உள்ளது. சிறுவயதிலிருந்தே கலைக்கு ஊக்கம் அளித்த பெற்றோர்கள், ஆசான்கள், நடனம், இசை, நாடகம் போன்ற துறைகளில் தங்களை அர்ப்பணித்தவர்களின் உழைப்பு இந்த மேடையில் வெளிப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி ஒருவருக்கானது அல்ல — அவரது குடும்பத்தார் நான்கு பேரின் உழைப்பு, பலரின் கனவு, அனைவரின் ஆதரவு. அதனால் இதன் வெற்றி அனைவருக்கும் உரியது. இவ்வளவு அர்த்தமுள்ள நிகழ்ச்சியை சிறப்பாக நடத்த உதவிய அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை என் நன்றிகள். இது அவரது குடும்பத்திற்கே உரித்தானது. அவர்களோடு தொடர்புடையவன் என்ற முறையில், இந்த மேடையில் நானும் இருப்பது எனக்கு பெருமகிழ்ச்சி. மருது சகோதரர்களின் வரலாற்றை சொல்லும் முரளிதரனின் இந்த புதிய முயற்சி வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

இயக்குநர் K. பாக்யராஜ் பேசியதாவது…
முரளிதரன் அவர்களைப் பற்றி இத்தனை நாளாகத் தெரியாமல் இருந்தது எனக்கு வருத்தமாக இருக்கிறது. எனக்கும் நடனத்திற்கும் அவ்வளவு பொருத்தம் இல்லை. ஆனால் முரளிதரன் இத்தனை சாதனைகள் செய்துள்ளார் என்பதே எனக்கு இன்றுதான் தெரிய வந்தது. அவர் செய்த சாதனைகள் அனைத்தையும் கேட்கும் போது பிரமிப்பாக உள்ளது. பிப்ரவரி 7 ஆம் தேதி நடைபெற உள்ள அவரது நிகழ்ச்சியை பார்க்க வேண்டும் என்ற பெரும் ஆவல் ஏற்பட்டுள்ளது. மேடையில் அவர் டூயல் ரோலை நிகழ்த்திய விதம் அபாரம். சினிமாவிலேயே டூயல் ரோல் எடுப்பது கடினம். ‘கைதியின் டைரி’ கதையை எழுதினேன். ஆனால் அதை அமிதாப் பச்சனை வைத்து இந்தியில் எடுக்கும்போது நான் மாட்டிக்கொண்டேன். டூயல் ரோல் ஷூட்டிங் எப்படி எடுக்க வேண்டும் என்று தெரியாமல் விழித்துக்கொண்டிருந்தேன். பின்னர் அமிதாப் சொன்னபடியே மாஸ்க் ஷாட்டை எடுத்தேன். அதை என் குரு பாரதிராஜா பாராட்டினார். எம்.ஜி.ஆர். அவர்களும் பாராட்டினார். அத்தனை சிரமமான விஷயத்தை முரளிதரன் மேடை நாடகத்தில் செய்திருக்கிறார் என்பதே ஆச்சரியம். இதில் இசையும் அவரே அமைத்துள்ளார். வசனம், பாடல், சண்டைக் காட்சிகள் என அனைத்தும் உள்ளதாகச் சொல்கிறார்கள். இத்தனையும் மேடையில் எப்படி நிகழப்போகிறது என்பதை காண ஆவலாக இருக்கிறது. மருது சகோதரர்களின் தெரியாத பல வரலாறுகளை இந்த நாடகம் வெளிக்கொண்டு வருகிறது. முரளிதரன் அவர்களின் இந்த புதிய முயற்சிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். இது மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும்.
நன்றி.

‘மருதிருவர் – A Dance Musical’ மேடை நிகழ்ச்சி, வரும் பிப்ரவரி 7, 2026 (சனி) அன்று சென்னை சர் முத்தா வெங்கட சுப்பா ராவ் கச்சேரி அரங்கில் நடைபெறுகிறது. மருது சகோதரர்களாக கலைமாமணி மதுரை R. முரளிதரன், சிவக்குமார் நடிக்கின்றனர். வீர வேலு நாச்சியாராக மதுரை R. முரளிதரன் அவர்களின் மகள் காவ்யா நடிக்கின்றார். கவிஞர் வைரமுத்து தலைமையில் நிகழ்ச்சி நடைபெறுகிறது.