வார்த்தை வலிமை - ஒரு குட்டிக்கதை

By News Room

ஒரு கிராமத்தின் வழியாக ஒரு நாள் ஒரு முனிவர் சென்று கொண்டிருக்கையில் ஒரு பெண் முனிவரிடம் வந்து தன் வீட்டின் அருகின் உடல் நலமில்லாத குழந்தை ஒன்று இருக்கிறது என்றும், அக் குழந்தையை குணமாக்கித் தரும்படியும் முனிவரிடம் மிகப் பணிவுடன் உதவி கேட்டாள். 

முனிவர் அப்பெண்ணிடம் உடல் நலமில்லாத அக் குழந்தையை அழைத்து வரும் படிக் கூறினார். 

அந்தப் பெண்ணும் உடல் நலமில்லா அந்தக் குழந்தையை கொண்டு வந்தாள். 

அந்த முனிவரும் அக் குழந்தையை ஆசிர்வதிப்பது போன்று பிரார்த்தனை செய்தார். 

அப்போது, "எத்தனையோ மருந்துகள் கொடுத்தும் குணமாகாத அந்தக் குழந்தை நீங்கள் பிரார்த்தனை செய்வதால் குணமாகி விடுமா என்ன?' என்று கூட்டத்தில் இருந்த ஒருவன் கூச்சலிட்டான்.

"உனக்கு அது குறித்து என்ன தெரியும்......??? 

நீ ஒரு அறிவில்லாத முட்டாள்" என முனிவர் அந்த மனிதனைப் பார்த்துக் கூறினார். 

முனிவர் சொன்ன வார்த்தையைக் கேட்டு அந்த மனிதனுக்கு மிகவும் கோபம் வந்தது. 

பலரின் முன்னிலையில் தான் அவமானப்படுத்தப்பட்டதாக நினைத்தான். 

அவனுடைய முகம் கோபத்தால் சிவந்தது. 

அந்த முனிவரைக் கடுஞ் சொற்களால் எப்படியாவது திட்டி அவர் மனதைக் காயப் படுத்தி விட வேண்டும் என்ற முடிவுக்கு வந்தான்.

அவன் மனநிலையை அறிந்து புன்முறுவலுடன் அவனருகில் வந்த முனிவர், 

"நான் சொன்ன வார்த்தைகளால் நீ கோபமடையவும், சூடாகவும் முடியுமென்றால், நான் கூறும் நல்ல வார்த்தைகள் ஏன் சிலரை குணப்படுத்த முடியாது என்று நினைக்கிறாய்......???" என்று கேட்டார். 

அவர் சொன்னதைக் கேட்ட பிறகு அந்த மனிதனுக்கு வார்த்தைகளின் வலிமை புரிந்தது.

நல்லதை நினைத்தால்... 
நல்லதைப் பேசமுடியும். 
நல்லதை பேசினால்... 
நிச்சயம் நல்லது நடக்கும். 

நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் வலிமை உண்டு.....! 
இந்த உலகில் வேறு எதையும் விட...!!!!

.
மேலும்