பெருமாள் மகிமை

By News Room

ஒரு கிராமத்தில், 

ஒரு பெருமாள் கோவில் இருந்தது. 

அதன் வாசலில், ஒரு நாய் படுத்துக் கொண்டிருப்பது வழக்கம். 

தினமும் பெருமாளுக்கு நிவேதனம் செய்யும் பிரசாதத்தை, பக்தர்களுக்கு வழங்குவர். 

அந்த பிரசாதத்தை சாப்பிட்டபடி, பெருமாளை சுற்றி வருவர் பக்தர்கள். 

அப்படி வரும்போது, 

அந்த பிரசாதம் கோவில் பிரகாரத்தில் சிந்தி விடும். 

பிரசாதத்தை பொறுக்கி சாப்பிட்டபடி, 

பிரகாரத்தை சுற்றி வரும் அந்த நாய். 

இப்படியே பல நாட்கள் பிரசாதத்தையும் சாப்பிட்டு, 

பெருமாளையும் சுற்றி வந்தது. 

ஒரு நாள், 

அது மரணமடைந்தது. 

அந்த ஜீவனை, தர்மராஜன் முன் நிறுத்தினர் எமதூதர்கள்.

கணக்கை பார்த்துவிட்டு, 

"இந்த நாய், பெருமாள் பிரசாதத்தை சாப்பிட்டுவிட்டு, பெருமாளையும் பிரதட்சணம் செய்துள்ளதால், இது, வைகுந்தம் போக வேண்டும்...' என்றான் சித்ரகுப்தன். 

பூலோகத்தில், சாட்சி தேவதைகள் என்று சில தேவதைகள் சுற்றி வருவதுண்டு. 

யார், யார் என்ன புண்ணியம், பாவம் செய்துள்ளனர் என்று தெரிந்து, தர்மராஜன் சபைக்குப் போகும். சித்ரகுப்தன் ஒவ்வொரு ஜீவனும் செய்த பாவ புண்ணியங்களை, தர்மராஜனிடம் தெரிவிப்பான். 

சாட்சி தேவதைகளைப் பார்த்து, 

"இது நிஜமா!' என்று கேட்டான் தர்மராஜன். 

சாட்சி தேவதைகளும், "ஆமாம்!' என்றனர். 

அதன்பின் அந்த நாயின் ஆத்மா, வைகுந்தம் போகலாம் என்று தீர்ப்பு வழங்கினான் தர்மராஜன். 

உடன் விஷ்ணு தூதர்கள் வந்து, அந்த ஜீவனை வைகுந்தம் அழைத்துப் போயினர். 

எந்த ஜீவனாக இருந்தாலும், பெருமாள் பிரசாதத்தை உண்டு, 
பெருமாளை சுற்றி வந்தால் போதும், வைகுந்த பதவி கிடைக்கும்

.
மேலும்