சிவனை வழிபட்டால் சிக்கல் வருகிறதே ஏன்??

By News Room

சிவனை வழிபடு எல்லாம் சரி ஆகி விடும் என்று அறிவுரை கூறினால் அட போய்யா. அவரை வழிபட்டு தான் சாதாரணமா இருந்த பிரச்சனை பெரிதாகிடுச்சு என்று அலுத்து கொள்ளும் சிலரை பார்த்திருப்போம்.

சரி நமக்கே சில நேரங்களில் தோன்றும் ஐயப்பாடு இது.சிவனை வணங்கினால் சிக்கல் வருகிறதே.ஏன் அவர் உடனடியாக பக்தனின் குரலுக்கு செவி சாய்ப்பதில்லை ??

முதலில் சிவன் யார் என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும். சிவனை பூவுலகில் வாழும் அனைத்து ஜீவன்களின் தந்தையாகவே பார்க்கப்படுகிறார்.அவனின்றி அணுவும் அசையாது.அவன் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே.

தந்தையானவர் பல குழந்தைகளின் கண்களுக்கு தவறானவராகவே தென்படுவார்.ஏனெனில் நாம் தவறு செய்யும் போது கண்டிப்பார்.கேட்கும் பொருட்களை சரியா தவறா என்று ஆய்வு செய்த பிறகு தான் வாங்கி கொடுப்பார்.பணத்தை கொடுத்து விட்டு அறிவுரை கூறி சலிப்பை ஏற்படுத்துவார்.தந்தை இவ்வாறு செய்வதனால் அது நமக்கு பிடிக்காமல் போகிறது. 

ஆனால் ஒரு குறிப்பிட்ட வயதை அடைந்த பிறகு தான் நமக்கு புரியும் அவர் செய்தது அனைத்தும் நம் நன்மைக்காக என்று.வாழ்வில் அனைத்து விஷயங்களும் எளிதில் கிடைத்து விட்டால் அதன் அருமையை ஒரு போதும் உணர மாட்டோம்.எனவே சில படிப்பினைகளை கற்ற பிறகு அது கிடைக்கும் போது அதில் கிடைக்கும் மகிழ்ச்சியே தனி ரகம்.

சிவனும் அப்படி தான்.தன் பக்தன் படிக்க வேண்டிய பாடங்களை அவரே கற்று கொடுத்து அதன் பிறகு அவனுக்கு தர வேண்டிய நற்பலன்களை அள்ளி தருவார்.பொறுமை கடலினும் பெரிது என்பதை உணர்த்துவார்.எல்லாமே எளிது அல்ல என்பதை அடிக்கடி உணர்த்துவார்.

இன்பம் துன்பம் அனைத்தும் சமமானதே என்பதை உணர்ந்து தான் தவ கோலத்திலும் உருவமற்ற அருவமற்ற அருவுருவ லிங்கனாய் நமக்கு காட்சி தருகிறார். அவரை சிந்தித்தாலும் நிந்தித்தாலும் அமைதியுடன் தான் இருப்பார். அனைத்தும் அறிந்தவர்.அதனால் தான் அத்துணை துன்பம் தந்தாலும் அவரை நோக்கி சிவனடியார்கள் சிவ பக்தர்கள் அனைவரும் அவரை சரணாகதி அடைகிறார்கள்.

துன்பம் அளித்தாலும் சரி இன்பம் கொடுத்தாலும் சரி என் அப்பன் சிவனை என்றென்றும் போற்றி வணங்குவதே நான் பெற்ற பாக்கியம் என்பதை மனதில் நிறுத்தும் போது அவர் திருவடியை அடைய முடியும்.
அதனால் தான் நம் கர்ம வினைகள் தீர சோதித்து அருள் புரிகிறார் ஈசன்.

தென்னாடுடைய சிவனே போற்றி. ஈசனருள் எல்லாருக்கும் கிட்டட்டும்.

.
மேலும்