திருவண்ணாமலை தீபத்திருவிழா...

By News Room

🪔 நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமாக விளங்குவது திருவண்ணாமலையாகும். பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் அண்ணாமலையார் கோயிலில், சிவனே மலையாக காட்சி தருவதாகவும், திருக்கார்த்திகை தீபத் திருநாளில் ஜோதி வடிவாக காட்சி தருவதாகவும் ஐதீகம். 

🪔 புகழ்மிக்க அண்ணாமலையார் திருக்கோயிலில் ஆண்டுதோறும் திருக்கார்த்திகை தீபத்திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அந்தவகையில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா வருகின்ற 27ஆம் தேதி (நாளை) கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ள நிலையில், திருவண்ணாமலை நகரின் காவல் தெய்வமாக விளங்கும் துர்க்கை அம்மன் உற்சவம் நவம்பர் 24ஆம் தேதி வெகு விமர்சையாக நடைபெற்றது.

🪔 கடந்த இரண்டு ஆண்டுகளாக திருக்கார்த்திகை தீபத்திருவிழா கோயிலின் பிரகாரத்தில் நடைபெற்றது. இந்த ஆண்டு திருக்கார்த்திகை தீபத்திருவிழா பொது வெளியில் நடைபெற உள்ளது.

🔥 திருக்கார்த்திகை தீபத்திருவிழா:

🪔 10 நாட்கள் கொண்டாடப்படும் திருக்கார்த்திகை தீபத்திருவிழாவில் நாளை (நவம்பர் 27) காலை 5.30 மணிக்கு மேல் 7 மணிக்குள், அண்ணாமலையார் சன்னதி எதிரில் அமைந்துள்ள தங்ககொடி மரத்தில் கொடியேற்றம் நடைபெறும். தொடர்ந்து, அன்று காலை பஞ்சமூர்த்திகள் கண்ணாடி விமானங்களில் பவனியும், இரவில் அதிகார நந்தி வாகனத்தில் சுவாமி பவனியும் நடைபெறும். 

🪔 டிசம்பர் 2ஆம் தேதி 6ம் நாள் விழாவில் காலை உற்வசத்தில் வெள்ளி யானை வாகனத்தில் சந்திரசேகரரும், இரவு உற்சவத்தில் வெள்ளித் தேரோட்டமும் நடைபெறும்.

🪔 டிசம்பர் 3ஆம் தேதி 7ம் நாள் உற்சவத்தில் மகா தேரோட்டம் நடைபெறும். அன்று மாட வீதியில் பஞ்ச ரதங்களும் பவனி வரும். 

🪔 டிசம்பர் 4ஆம் தேதி 8ம் நாள் காலை உற்சவத்தில் குதிரை வாகனத்தில் சந்திரசேகரரும், மாலை பிச்சாண்டவர் உற்சவமும், இரவு குதிரை வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் பவனியும் நடைபெறும். 

🪔 டிசம்பர் 5ஆம் தேதி 9ம் நாள் காலை உற்சவத்தில் புருஷாமுனி வாகனத்தில் சந்திரசேகரரும், இரவு உற்சவத்தில் கைலாச, காமதேனு வாகனங்களில் பஞ்சமூர்த்திகளும் பவனி வருகின்றனர்.

🪔 டிசம்பர் 6ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் கோயிலில் பரணி தீபமும், அன்று மாலை 6 மணிக்கு 2668 அடி உயரமுள்ள அண்ணாமலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படும்.

🔥 தீப திருவிழாவின் சிறப்பு:

🪔 கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு திருவண்ணாமலையில், பரணி தீபம், அண்ணாமலையார் தீபம் மகா தீபம், விஷ்ணு தீபம், நாட்டுக் கார்த்திகை தீபம், தோட்டக் கார்த்திகை தீபம் என ஐந்து நாட்கள் தீபங்கள் ஏற்றப்படும். 

🔥 பரணி தீபம்:

🪔 டிசம்பர் 6ஆம் தேதி அதிகாலையில் பரணி தீபம் அண்ணாமலையார் கருவறையில் ஏற்றப்பட்டு, பின்னர் அர்த்த மண்டபத்தில் ஐந்து தீபங்களாக இவை காட்டப்படும். கார்த்திகை மாத பரணி நட்சத்திரத்தில் இந்த தீபம் காட்டப்படுவதால் 'பரணி தீபம்' என்று பெயர் பெற்றது. 

🔥 அர்த்தநாரீஸ்வரர்:

🪔 2668 அடி உயர மலை உச்சியில் 5 அடி உயரம், 250 கிலோ எடை கொண்ட கொப்பரையில் 3500 லிட்டர் நெய் மற்றும் ஆயிரம் மீட்டர் காடா துணிகளும் மகாதீபம் ஏற்றுவதற்கு பயன்படுத்தப்படும். 

🪔 இந்த தீப கொப்பரை விஷ்ணு, சிவன் என்ற அடுக்குகளால் ஆனது என நம்பப்படுகிறது. சிவனும், சக்தியும் ஒன்று என்ற தத்துவதை விளக்கும் வகையில் டிசம்பர் 6ஆம் தேதி கோவில் வளாகத்தில் தீபதரிசன மண்டபம் எதிரில் சுமார் 6 மணி அளவில் அர்த்தநாரீஸ்வரர் எழுந்தருளி தாண்டவம் ஆடிய பின்னரே மலையின் உச்சியில் உள்ள கொப்பரையில் மகா தீபம் ஏற்றப்படும். 

🪔 அதைத்தொடர்ந்து, மலை உச்சியில் நிலை நிறுத்தப்படும் மகா தீப கொப்பரைக்கு பாரம்பரிய வழக்கப்படி சிறப்பு வழிபாடுகள் செய்யப்படும். 

👍 சிறப்பு ஏற்பாடுகள்:

🪔 தீப திருவிழாவிற்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகமும், இந்து சமய அறநிலையத்துறையும் செய்து வருகிறது. பக்தர்களின் அடிப்படை தேவைகளான குடிநீர், கழிப்பிடம், உணவு போன்றவற்றிக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. 

🪔 வருகை தரும் பல லட்சக்கணக்கான பக்தர்களின் வசதிக்காக தீபத்திருவிழாவை முன்னிட்டு 2700 சிறப்பு பேருந்துகள் இயக்க போக்குவரத்துத்துறை முடிவு செய்துள்ளது. மேலும், பக்தர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று தமிழக போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. 

🪔 அன்னதானம் செய்ய விரும்பும் நபர்கள் நவம்பர் 26ஆம் தேதிக்குள் (இன்று) foscos.fssai.gov.in என்ற இணையத்தளத்தில் பதிவு செய்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

🪔 எல்லோராலும் தீபத்திருநாளன்று இங்கு வர முடிவது இல்லை. அதனால் மகா தீபம் தொடர்ந்து ஏழு நாட்கள் எறியவிடப்படும். ஆகவே உங்களால் இந்த ஏழு நாட்களில் எப்போது முடிகிறதோ அப்போது வந்து சிவபெருமானின் ஆசி பெற்று செல்லலாம். 

🪔 மறக்காமல் தீபத்திருநாளன்று வீட்டில், அலுவலங்களில், கடைகளில் தீபம் ஏற்றி வழிபடுங்கள். 
எண்ணிய காரியம் கைகூடும்!
ஓம் நமசிவாய!

 கு பண்பரசு 

.
மேலும்