கொடியேற்றத்துடன் தொடங்கியது மதுரை சித்திரை திருவிழா 

By Senthil

கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக மதுரை சித்திரை திருவிழா கோவில் வளாகத்திலேயே பக்தர்கள் இன்றி நடத்தப்பட்டது. இதில் பக்தர்கள் இன்றி கோயில் நிர்வாகள் மட்டுமே கலந்துகொண்டனர். இதனால், பக்தர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். 

ஆனால், தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டு சித்திரை திருவிழாவில் பக்தர்கள் அனைவரும் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது. இது பக்தர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் இந்த மதுரை சித்திரை திருவிழா இன்று (செவ்வாய்கிழமை) கொடியேற்றத்துடன் துவங்கியது. காலை 10.35 மணிக்கு மேல் 10.54 மணிக்குள் மிதுன லக்கனத்தில் சுவாமி சன்னதியில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்படுகிறது.

இன்று முதல்  மீனாட்சி சுந்தரேசுவரர் சுவாமிகள் காலை, இரவு என இருவேளையும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வருவார்கள். இவ்விழாவில் வருகிற 12-ந் தேதி முக்கிய நிகழ்ச்சியாக மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், 13-ந் தேதி திக்கு விஜயமும் நடைபெறுகிறது.

இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணத்தை காண வரும் பக்தர்களின் வசதிக்காக ரூ.200, ரூ.500 கட்டண சீட்டுகளும், தெற்கு கோபுரம் வழியாக பக்தர்கள் கட்டணமில்லா தரிசன முறையில் முதலில் வருபவர்களுக்கு முதலில் அனுமதி என்ற முறையிலும் சுமார் 12 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.

இவ்விழாவிற்கு ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே, கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு, அடிப்படை வசதிகளை கோயில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்துள்ளது. 

.
மேலும்