ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்து வரும் 28-ம் தேதி அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

By Senthil

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின்போது ராயபுரம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் கள்ள ஓட்டு போட முயன்றதாக தி.மு.க. பிரமுகரை  தாக்கியது தொடர்பாக, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்பட 40 பேர் மீது தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. விசாரணைக்குப் பின் போலீசார் ஜெயக்குமாரை கைது செய்து வரும் மார்ச் 7-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைத்தனர்.

இதனைக் கண்டித்து, அதிமுக சார்பாக தமிழகம் முழுவதும் வரும் 28-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக ஓ.பன்னீர்செல்வமும்,எடப்பாடி பழனிசாமியும் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், கூறப்பட்டுள்ளதாவது:-

ஆளும் திமுகவின் கையாளாகாத் தனத்தையும், திமுக அமைச்சர்களின் அராஜகத்தையும், மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசின் செயல்பாடுகளையும் மக்களுக்கு தெளிவாக புரிகின்ற வகையில் விளக்கிக் கொண்டிருந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை கைது செய்து நீதிமன்றக் காவலில் வைத்திருப்பதைக் கண்டிக்கிறோம். 

பிணையில் வரமுடியாக அளவிற்கு தொடர் வழக்குகளை அவர் மீது பதிய முயற்சிக்கும் திமுக அரசைக் கண்டித்து அதிமுக சார்பில் வரும் 28-ம் தேதி காலை 10.30 மணியளவில் தமிழகம் முழுவதும் வருவாய் மாவட்டத் தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆப்பாட்டங்கள் நடைபெறும்.

இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தது.

.
மேலும்