உலகிலேய மோசமான டிரைவர்கள் இருபது இந்தியாவில்தான் என்கிறது ஒரு ஆய்வு. அதேபோல் உலகிலே அதிக வாகன விபத்துக்கள் நடப்பதும் இந்தியாவில்தான் என்று மேலும் அந்த ஆய்வு கூறுகிறது.
இதற்கு காரணமாக அவர்கள் சொல்வது குடிபோதையில் மிதக்கும் டிரைவர்கள், அதற்கடுத்த காரணம் முறையான ஓட்டுனர் பயிற்சி இல்லாமை. மூன்றாவது டிரைவிங் லைசென்ஸ் வழங்குவதில் உள்ள குளறுபடிகள்.
உலகிலேயே அதிக சாலைக் கொலைகள் இந்தியாவில்தான் நடைபெறுகின்றன. சாலை கொலையாளிகள் அதிகம் இருக்கும் நாடு இந்தியா என்கிறது அந்த ஆய்வு.
இந்தியாவில் இருக்கும் வாகனங்களின் எண்ணிக்கை வெறும் 1.30 கோடி தான். இவை வருடத்துக்கு ஒரு லட்சத்து 15 ஆயிரம் மரணங்களை ஏற்படுத்துகின்றன. ஆனால், 25 கோடிக்கும் மேற்பட்ட வாகனங்கள் இருக்கும் அமெரிக்காவில் வருடத்துக்கு 41 ஆயிரம் மரணங்களே நிகழ்கின்றன. இந்தியாவில் 100 கார்களுக்கு ஒரு சாலை மரணம் ஏற்படுகிறது. அமெரிக்காவில் 5 ஆயிரம் கார்களுக்கு ஒரு மரணமே ஏற்படுகிறது.
ஏன் இந்த வித்தியாசம்? அமெரிக்கர்கள் குடிப்பதில்லையா? அவர்கள் வேகமாக கார் ஓட்டுவதில்லையா? என்ற கேள்வி நமக்கு தோன்றத்தான் செய்கிறது. வளரும் நாடுகளில் வாகனங்களின் சராசரி வேக வரம்பே இந்தியாவைவிட அதிகம். அமெரிக்கா போன்ற நாடுகளில் 300 கி.மீ.க்கு மேல் வேகமாக செல்லக்கூடிய வாகனங்களும் சாலைகளும் உள்ளன.
ஆனால், அவர்கள் எப்படி தொடர்ந்து விபத்துக்களை கட்டுக்குள் வைத்துக் கொள்கிறார்கள்?
அமெரிக்காவில் சாதாரண டிரைவிங் லைசென்ஸ் பெறுவதற்கே கடுமையான விதிமுறைகளும், வழிகாட்டுதல்களும் உள்ளன.
இளைஞர்கள் உரிமம் பெற்ற முதல் ஆண்டு வாகன ஒட்டுதலில்தான் நிறைய விபத்துக்களை சந்திக்கிறார்கள். இதை தெளிவாக கணித்த வளர்ந்த நாடுகள், அந்த காலக்கட்டத்தில் அவர்கள் மட்டும் தனியாக வாகனங்களை ஓட்டுவதற்கு தடை விதித்து சட்டங்களை இயற்றி உள்ளன. அனுபவம் வாய்ந்த டிரைவர்களை கூடவே வைத்துக் கொள்ள வேண்டும்.
அதேபோல் பைக் என்றால் 125 சிசி-க்கு மேல் ஓட்டுவதற்கு லைசென்ஸ் கொடுப்பதில்லை. சாலை மரணங்களை குறைப்பதற்கு பல நாடுகள் கோடிக்கணக்கில் செலவழிக்கின்றன. ஆல்கஹால் சென்சார் கருவிகள், சீட் பெல்ட், அலாரங்கள், ஆட்டோமேடிக் ஸ்பீடு கண்ட்ரோல் போன்றவற்றை கண்டுபிடித்து வருகின்றன.
பத்து ஆண்டுகளில் சாலை மரணங்களை 20 சதவீதமாக குறைக்க வேண்டும் என்று அமேரிக்கா முடிவு செய்திருக்கிறது. இங்கிலாந்து 40 சதவீதத்தை இலக்காக வைத்திருக்கிறது. மலேசியா போன்ற நாடுகள் கூட 10 ஆயிரம் வாகனங்களுக்கு 3 விபத்துக்களாக குறைப்பதில் உறுதியுடன் உள்ளன.
ஸ்வீடன் போன்ற நாடுகளில் சாலை மரணம் 1997-ல் இருந்து பூஜ்ஜியமாக வைத்திருக்கிறது. அங்கு விபத்தால் ஒரு மரணம் கூட நிகழவில்லை. இதன் மூலம் சாலைவிபத்து முற்றிலும் தடுக்கக் கூடியதே என்று இந்த நாடு உலகத்துக்கே நிரூபித்து காட்டியுள்ளது.
குடிபோதை இல்லாமல், சிறந்த திறமைமிக்க டிரைவர்கள் தங்கள் வாகனத்தை வேகக்கட்டுப்பாட்டில் வைத்திருந்தால், தற்கொலை செய்ய விரும்பி வாகனம் முன்விழும் நபரைக் கூட காப்பாற்ற முடியும். உலகின் மோசமான டிரைவர்கள் என்ற பெயரை இந்திய டிரைவர்கள் உடைக்கவும் முடியும். சாலை விபத்துக்களில் உலகில் முன்னணி நாடாக இருக்கும் இந்தியாவை பின்னுக்கு தள்ளவும் முடியும்.