Breaking News :

Friday, February 14
.

வாழ்க்கை எதிலே ஓடிக்கொண்டிருக்கிறது?


ஆசையிலும் நம்பிக்கையிலுமே ஓடிக்கொண்டிருக்கிறது.

சராசரி மனிதனை ஆசைதான் இழுத்துச் செல்கிறது.

அவன் தவறுக்கெல்லாம் அதுவே காரணமாகிறது.

வேண்டும் என்கிற உள்ளம் விரிவடைந்து கொண்டே போகிறது!

போதும் என்ற மனம் சாகும் வரை வருவதில்லை.

50 காசு நாணயம் பூமியில் கிடந்து ஒருவன் கைக்கு அது கிடைத்துவிட்டால் வழிநெடுக நாணயம் கிடைக்கும் என்று தேடிக் கொண்டே போகிறான்.

ஒரு விஷயம் கைக்கு கிடைத்து விட்டால் 100 விஷயங்களை மனது வளர்த்துக் கொள்கிறது.

ஆசை எந்தக் கட்டத்தில் நின்று விடுகிறதோ அந்தக் கட்டத்தில் சுய தரிசனம் ஆரம்பமாகிறது.

சுயதரிசனம் பூர்த்தியானவுடன் ஆண்டவன் தரிசனம் கண்ணுக்குத் தெரிகிறது.

ஆனால் எல்லோராலும் அது முடிகிறதா?
லட்சத்தில் ஒருவருக்கே ஆசையை அடக்கும் அல்லது ஒழிக்கும் மனப்பக்குவம் இருக்கிறது.

ஆசை எப்படி வளர்ந்தது என்று எனக்கே நன்றாக தெரிகிறது.

சிறுவயதில் வேலை என்று அலைந்த போது மாதம் 20 ரூபாயாவது கிடைக்கக்கூடிய வேலை கிடைக்காதா? என்று ஏங்கினேன்.

கொஞ்ச நாளில்  மாதம் 25 ரூபாய் சம்பளத்தில் ஒரு பத்திரிகையில் வேலை கிடைத்தது.

ஆறு மாதம்தான் அந்த நிம்மதி மாதம் 50 ரூபாய் கிடைக்காதா? என்று மனம் ஏங்கியது.

அதுவும் கிடைத்தது வேறொரு பத்திரிகையில்...

பிறகு மாதம் நூறு ரூபாயை மனம் அவாவிற்று அதுவும் கிடைத்தது.
மனது  500க்கு ஆசைப்பட்டது.

அது ஆயிரமாக வளர்ந்தது. ஈராயிரமாக பெருகி யாவும் கிடைத்தன.

இப்பொழுது நோட்டடிக்கும் உரிமையை மனம் கேட்கும் போலிருக்கிறது.
எந்தக் கட்டத்திலும் ஆசை பூர்த்தி அடையவில்லை.

இவ்வளவு போதும் என்று எண்ணுகிற நெஞ்சு அவ்வளவு கிடைத்ததும் அடுத்த கட்டத்திற்கு தாண்டுகிறது!
 
ஏன்?

அதுதான் இறைவன் லீலை! ஆசைகளற்ற இடத்தில் குற்றங்கள் அற்றுப் போகின்றன.
 
குற்றங்களும் பாவங்களும் அற்றுப்போய்விட்டால் மனிதனுக்கு அனுபவங்கள் இல்லாமல் போய் விடுகின்றன.

அனுபவங்கள் இல்லை என்றால் நன்மை தீமைகளை கண்டுபிடிக்க முடியாது.
ஆகவே தவறுகளின் மூலமே மனிதன் உண்மையை உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இறைவன் ஆசையை தூண்டி விடுகிறான்.

ஆசையை மூன்று விதமாக இந்துமதம் சொல்கிறது.

மண்ணாசை!
பொன்னாசை!
பெண்ணாசை!

மண்ணாசை வளர்ந்து விட்டால் கொலை விழுகிறது.

பொன்னாசை வளர்ந்துவிட்டால் களவு நடக்கிறது.

பெண்ணாசை வளர்ந்து விட்டால் பாவம் நிகழ்கிறது.

இந்த மூன்றில் ஓர் ஆசை கூட இல்லாத மனிதர்கள் மிகவும் குறைவு.

ஆகவே தான் பற்றற்ற வாழ்க்கையை இந்து மதம் போதித்தது.

பற்றற்று வாழ்வது என்றால் எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஓடிப்போய் சன்னியாசி ஆவது அல்ல.

இருப்பது போதும்!
வருவது வரட்டும்!
போவது போகட்டும்!
மிஞ்சுவது மிஞ்சட்டும்!

என்று சலனங்களுக்கு ஆட்படாமல் இருப்பதே பற்றற்ற வாழ்க்கையாகும்.
ஆசை தீமைக்கு அடிப்படையாக இல்லாதவரை அந்த ஆசை வாழ்வில் இருக்கலாம் என்கிறது இந்து மதம்!

நான் சிறைச்சாலையில் இருந்தபோது கவனித்தேன்.... அங்கு இருந்த குற்றவாளிகளில் பெரும்பாலானோர் ஆசை குற்றவாளிகளே!

மூன்று ஆசைகளில் ஒன்று அவனை குற்றவாளி ஆக்கி இருக்கிறது!

சிறைச்சாலையில் இருந்து கொண்டு அவன் முருகா முருகா என்று கதறுகிறான்.
 
அவன் அனுபவம் அவனுக்கு உண்மையை உணர்த்துகிறது அதனால் தான் பரம்பொருள் மீது பற்றுவை.

நிலையற்ற பொருட்களின் மீது ஆசை வராது என்கிறது இந்து மதம்.

"பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றை பற்றுக பற்று விடற்கு" என்பது திருக்குறள்.
ஆசைகளை அறவே ஒழிக்க வேண்டியது இல்லை.

அப்படி ஒழித்து விட்டால் வாழ்க்கையில் என்ன சுகம்? அதனால்தான் தாமரை இலை தண்ணீர் போல் என்று போதித்தது இந்து மதம்.

நேரிய வழியில் ஆசைகள் வளரலாம். அதில் லாபமும் குறைவு... பாவமும் குறையும்.

ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என்று எதிர்பார்த்து ஐநூறு ரூபாய் மட்டுமே கிடைத்தால் அந்த ஐநூறு உனக்கு பணமாக தெரியாது.

இருநூறு எதிர்பார்த்து உனக்கு ஐநூறு கிடைத்தால் நிம்மதி வந்துவிடுகிறது.
எதிர்பார்ப்பதை குறைத்துக் கொள்!

வருவது மனதை நிறைய வைக்கிறது என்பதே இந்துக்கள் தத்துவம்!

எவ்வளவு அழகான மனைவியைப் பெற்றவனும் இன்னொரு பெண்ணை ஆசையோடு பார்க்கிறானே!

ஏன்?

லட்சக்கணக்கான ரூபாய் சொத்துக்களை பெற்றவன் மேலும் ஓர் ஆயிரம் ரூபாய் கிடைக்கிறது என்றால் ஓடுகிறானே!

ஏன்?

அது ஆசை போட்ட சாலை!

அவன் பயணம் அவன் கையில் இல்லை!

ஆசையின் கையில் இருக்கிறது!

போகின்ற வேகத்தில் அடி விழுந்தால் நின்று யோசிக்கிறான்! அப்போது அவனுக்கு தெய்வ ஞாபகம் வருகிறது.

அனுபவங்கள் இல்லாமல் அறிவின் மூலமே தெய்வத்தை கண்டு கொள்ளும்படி போதிப்பதுதான் இந்துமத தத்துவம்.

பொறாமை , கோபம் எல்லாமே ஆசை பெற்றெடுத்த குழந்தைகள்தான்!

துயரங்களுக்கெல்லாம் மூல காரணம் எதுவென்று தேடிப் பார்த்து , அந்த துயரத்தில் இருந்து உன்னை விடுபடச் செய்ய அந்த காரணங்களை சுட்டிக்காட்டி உனது பயணத்தை ஒழுங்குபடுத்தும் வேலையை இந்து மதம் மேற்கொண்டிருக்கிறது.

இந்து மதம் என்றும் சன்னியாசிகளின் பாத்திரம் அல்ல!

அது வாழ விரும்புபவர்கள் வாழ வேண்டியவர்களுக்கு வழிகாட்டி!

வள்ளுவர் சொல்லும் வாழ்க்கை நீதிகளை போல இந்து மதமும் நீதிகளையே போதிக்கிறது.

அந்த நீதிகள் உன்னை வாழ வைப்பதற்கு அல்லாமல் தன்னை வளர்த்துக் கொள்வதற்காக அல்ல!

உலகத்தில் எங்கும் நிர்ப்பந்தமாக திணிக்கப்படாத மதம் இந்து மதம்!

உன்னுள்ளம் நிர்மலமாக, வெண்மையாக, தூய்மையாக, இருக்கிறது என்பதற்கு அடையாளமாகவே அது திருநீறு பூச சொல்கிறது.

உன் உடம்பு நோய் நொடியின்றி ரத்தம் சுத்தமாக இருக்கிறது என்பதற்காகவே குங்குமம் வைக்க சொல்கிறது.

இவள் திருமணமானவள் என்று கண்டு கொண்டு அவளை நீ ஆசையோடு பார்க்காமல் இருக்க பெண்ணுக்கு அது மாங்கல்யம் சூட்டுகிறது.

தன் கண்களால் ஆடவனுடைய ஆசையை ஒரு பெண் கிளறி விடக் கூடாது என்பதற்காகவே அவளை தலைகுனிந்து நடக்கச் சொல்கிறது.

யாராவது ஆடவன் தன்னை உற்று நோக்குகிறான் என்பதை கண்டால் இந்து பெண்கள் மார்பகத்தில் ஆடையை இழுத்து மூடி கொள்கிறார்களே!

ஏன்?

எந்த ஒரு கவர்ச்சியும் ஆடவனுடைய ஆசையை தூண்டி விடக் கூடாது என்பதால்தான்.

ஆம்! ஆடவன் மனது சலனங்களுக்கும் சபலங்களுக்கும் ஆட்பட்டது.

கோவிலிலே தெய்வ தரிசனம் செய்யும் போது கூட கண் கோதையில் பால் சாய்கிறது.

அதை மீட்க முடியாத பலவீனனுக்கு அவள் சிரித்து விட்டால் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போல் ஆகிறது.

பொம்பள சிரிச்சா போச்சு புகையிலை விரிச்சா போச்சு என்பது இந்துக்கள் பழமொழி!

கூடுமானவரை மனிதனைக் குற்றங்களிலிருந்து மீட்பதற்கு தார்மீக வேலி போட்டு வளைக்கிறது இந்து மதம்.
 
அந்த குற்றங்களில் இருந்து விடுபட்டவனுக்கே நிம்மதி கிடைக்கிறது.
 
அந்த நிம்மதியை உனக்கு அளிக்கவே இந்து மத தத்துவங்கள் தோன்றின.

இன்றைய இளைஞனுக்கு சேக்ஸ்பியரை தெரியும். செல்லியை தெரியும்.

ஜேம்ஸ் பாண்ட் தெரியும். கெட்டுப்போன பின்பு தான் அவனுக்கு பட்டினத்தாரை புரியும்.

ஓய்வு நேரத்தில் அவன் இராமகிருஷ்ண பரமஹம்சரின் உபதேசங்களை படிப்பானானால் இந்து மதம் என்பது வெறும் சாமியார் மடம் என்ற எண்ணம் விலகிவிடும்.

நியாயமான நிம்மதியான வாழ்க்கையை நீ மேற்கொள்ள உன் தாய் வடிவில் துணை வருவது இந்துமதம்.

ஆசைகளைப் பற்றி பரமஹம்சர்  " ஆழமுள்ள கிணற்றின் விளிம்பில் நிற்பவன் அதனுள் விழுந்து விடாமல் எப்போதும் ஜாக்கிரதையாக இருப்பதைப் போல் உலக வாழ்க்கை மேற்கொண்டவன் ஆசாபாசங்களில் அமிழ்ந்து விடாமல் இருக்க வேண்டும்" என்கிறார்.

அவிழ்த்து விடப்பட்ட யானை மரங்களையும் செடி கொடிகளையும் வேரோடு பிடுங்கி போடுகிறது. ஆனால் அதன் பாகன் அங்குசத்தால் அதன் தலையில் குத்தியதும் அது சாந்தமாகி விடுகிறது.

அது போல அடக்கி ஆளாத மனம் வீண் எண்ணங்களில் ஓடுகிறது. விவேகம் என்னும் அங்குசத்தால் அது வீழ்த்தப்பட்டதும் சாந்தமாகி விடுகிறது.
 
அடக்கி ஆள்வதன் வைராக்கியம்!
நீ சுத்த வைராக்கியனாக இரு! ஆசை வளராது!

உன்னை குற்றவாளியாக்காது! உன் நிம்மதியை கெடுக்காது!

அர்த்தமுள்ள இந்து மதத்தில் இருந்து கண்ணதாசன்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.