மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள உலக புகழ்பெற்ற திருநாங்கூர் திவ்யதேசத்தில் 11 தங்க கருட உற்சவம் விமரிசையாக நடைபெற்றது. ஏராளமானோர் பங்கேற்றது சுவாமி தரிசனம் செய்தனர்.
திருநாங்கூரைச் சுற்றி 11 திவ்ய தேசங்கள் அமைந்துள்ளன. இந்தத் திருத்தலத்தில் ஆண்டுதோறும் தை அமாவாசையைத் முன்னிட்டு கருடசேவை உற்சவம் நடைபெறுவது வழக்கம். ஒரே நாளில் 11 திவ்ய தேசத்துப் பெருமாள்களும் எழுந்தருளி சேவை சாதிப்பதே இதன் சிறப்பாகும்.
திருநாங்கூரைச் சுற்றியுள்ள 11 திருக்கோயில்களிலிருந்து 11 பெருமாள் உற்சவமூர்த்திகள் திருநாங்கூரில் எழுந்தருள்வர்.
1. ஸ்ரீநாராயண பெருமாள் (மணிமாடக் கோயில்),
2. ஸ்ரீகுடமாடு கூத்தர் (அரியமேய விண்ணகரம்),
3. ஸ்ரீசெம்பொன்னரங்கர் (செம்பொன்செய் கோயில்),
4. ஸ்ரீபள்ளிகொண்ட பெருமாள் (திருத்தெற்றியம்பலம்),
5. ஸ்ரீஅண்ணன் பெருமாள் (திருவெள்ளக்குளம்),
6. ஸ்ரீபுருஷோத்தமப் பெருமாள் (வண் புருஷோத்தமம்),
7. ஸ்ரீவரதராஜன் (திருமணிக்கூடம்),
8. ஸ்ரீவைகுந்த பெருமாள் (வைகுந்த விண்ணகரம்),
9. ஸ்ரீமாதவ பெருமாள் (திருத்தேவனார் தொகை),
10. ஸ்ரீபார்த்தசாரதி (திருபார்த்தன்பள்ளி),
11. ஸ்ரீகோபாலன் (திருக்காவளம்பாடி)
ஆகிய பதினொரு திவ்ய தேசங்களைச் சேர்ந்த பெருமாளும் மணிமாடக் கோயில் உள்ள பந்தலில் எழுந்தருள்வர்.
பிறகு, திருமங்கையாழ்வார் தனது தேவியான குமுதவல்லி நாச்சியாருடன் பந்தலில் எழுந்தருளி ஒவ்வொரு பெருமாளிடம் சென்று மங்களா சாசனம் செய்வார்
இந்த வைபவத்தில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு, மறுபிறவி கிடையாது என்று சொல்லப்படுகிறது. அதே நேரம் இந்த வைபவத்தில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு 11 திவ்ய தேச பெருமாள்களை சேவித்த பேறும் கிடைத்துவிடுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்தத் திருத்தலத்தில் 11 தங்க கருட உற்சவம் விமரிசையாக நேற்று நடைபெற்றது. இதில், தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து ஏராளமா பக்தர்கள் பங்கேற்றது சுவாமி தரிசனம் செய்தனர்.