Breaking News :

Sunday, July 20
.

திருநாகைக்காரோணம் (நாகப்பட்டினம்) திருக்கோயில்


புராண பெயர்(கள்):
காயாரோகணம், ஆதிபுராணம், சிவராசதானி, பார்ப்பதீச்சரம், அரவநகரம்
பெயர்:
திருநாகைக்காரோணம் (நாகப்பட்டினம்) 
திருக்கோயில்
அமைவிடம்
ஊர்:
நாகப்பட்டிணம்
மாவட்டம்:
நாகப்பட்டினம்
மாநிலம்:
தமிழ்நாடு
நாடு:
இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:
காயாரோகணேஸ்வரர், ஆதிபுராணர்
தாயார்:
நீலாயதாட்சி, கருந்தடங்கண்ணி
தல விருட்சம்:
மாமரம்
தீர்த்தம்:
தேவ தீர்த்தம், புண்டரீக தீர்த்தம்
பாடல் வகை:
தேவாரம்
பாடியவர்கள்:
அப்பர், சம்பந்தர், சுந்தரர்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கல்வெட்டுகள்:
உண்டு

தல வரலாறு 

புண்ணியத் தலங்களும் தீர்த்தங்களும் நிறைந்த சோழ வளநாட்டில் தெய்வப்பொன்னி (காவிரி) நதியின் தென்கரையில் உள்ள தேவாரப் பாடல்பெற்ற சிவத்தலங்களுள் 82 வது தலமாக விளங்குவது திருநாகைக் காரோணம் எனும் இத்தலம்.
இது, மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றாலும் சிறப்புடையதாய் விளங்குகிறது.

பல ஊழிக்காலங்களுக்கும் அப்பாற்பட்டதால் இதனை ஆதி புராணம் என்றும் சுவாமியை ஆதி புராணேச்வரர் என்றும் தல புராணம் குறிப்பிடுகிறது.

ஆதி சேஷனால் பூஜிக்கப் பெற்றதால், நாகை என்றும், புண்டரீக முனிவரை இறைவன் தனது தேகத்தில் ஆரோகணம் செய்து கொண்டதால், காயாரோகணம் என்றும் பெயர். இது மருவி, காரோணம் என்றாயிற்று.

(காரோணம் என்று பெயருடைய திருக்கோயில்கள் தமிழ்நாட்டில் மூன்று உள்ளது; 1. நாகைக் காரோணம், 2. குடந்தைக் காரோணம், 3. கச்சிக்காரோணம் [காயாரோகணம்] - லிங்கபேசம் [காயாரோகணம்]ஆகும்.)
கிழக்கு நோக்கிய இச்சிவாலயத்தின் முகப்பிலுள்ள முற்றுப்பெறாத கோபுர வாசலைக் கடந்தால், நாகாபரண விநாயகர், சுதையாலான நந்தி, முக்தி மண்டபம்,ஆகியவை இத்தலத்தின் சிறப்பு.

ஐந்து நிலை கோபுர வாசலைக் கடந்து, உள்ளே சென்றால் தெற்கு நோக்கிய அம்பாள் சன்னதியும், அருகில் கொடிமரம் ஆகியனவும் அமைந்துள்ளன. சுவாமி பிரகாரத்தில், அருகாமையில் தியாகராஜமூர்த்தி சன்னதியும், எதிரில் சுந்தரரும் உள்ளனர். இத்தலத்தில், அறுபத்து மூவர், புண்டரீக முனிவர், சாலீசுக மன்னன், முருகன், கஜலக்ஷ்மி, தசரதன் ஸ்தாபித்த சநீச்வரன், காட்சி கொடுத்தவர், நடராஜர், பிக்ஷாடனர், அதிபத்தர் ஆகிய மூர்த்திகளையும் தரிசிக்கலாம். தியாகராஜர் சன்னதியில் சுந்தரவிடங்கரையும் தரிசிக்கலாம். மூலவரான காயாரோகண சுவாமிக்குப் பின்னால் சப்த ரிஷிகளுக்கும் காட்சி தந்த சோமாஸ்கந்தரையும் தரிசிக்கலாம். ஸ்தல விருக்ஷமான மாமரத்தின் அருகில் மாவடிப் பிள்ளையார் வீற்றிருக்கிறார்.
மூலவர் கருவறையின் கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, அடிமுடிகாணா அண்ணல், அர்த்தநாரீசுவர், துர்க்கை, பிட்சாடனர் ஆகியோர் உள்ளனர். அருகில் சண்டிகேஸ்வரர் சன்னதி உள்ளது.

சர்வ தீர்த்தம் என்னும் புண்டரீக தீர்த்தம் கோவிலின் மேற்கிலும், சிவகங்கை என்னும் தேவ தீர்த்தம் முக்தி மண்டபத்தருகிலும், தேவநதியாகிய உப்பாறு ஊருக்கு மேற்கிலும் உள்ளன. 

கடலும் சிறந்த தீர்த்தமாவதால், விசேஷ நாட்களில் இதில் நீராடுவது சிறப்புடையதாகக் கருதப்படுகிறது.
அகத்தியருக்கு இறைவன் திருமணக்காட்சி நல்கிய தலம்; சப்த ரிஷிகளுக்கும் இறைவன் மூல லிங்கத்திலிருந்து தோன்றி சோமாஸ்கந்தராய்க் காட்சி கொடுத்தத் தலம்.

சாலிசுக மன்னனுக்குத் திருமணக் கோலம் காட்டும் பஞ்சக்குரோச யாத்திரையாகிய சப்தஸ்தான விழா நடைபெறும் தலமாகவும் இத்தலம் விளங்குகின்றது.

சுந்தரருக்கு இறைவன் குதிரை, முத்துமாலை, நவமணிகள், பட்டு, சாந்தம், சுரிகை முதலானவை வழங்கிய தலம்; இறைவன் தனது குதிரை வாகனத்தை சுந்தரருக்கு அளித்ததால், அன்றுமுதல் இக்கோவிலில் குதிரைவாகன விழா, சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கே நடைபெறுவதாகப் புராணம் கூறும்.

தல சிறப்புகள்

நாகப்பட்டினம் - அதிபத்த நாயனார் அவதரித்து, வழிபட்டு முத்தி அடைந்தத் திருப்பதியாகும்.
அதிபத்த நாயனார் வழிபட்ட அமுதீசர் திருக்கோயில் நுளைபாடியில் (நம்பியார் நகர்) உள்ளது. 
அதிபத்த நாயனாரின் திருவுருவச் சிலை, நாகைக்காரோணம் திருக்கோயிலில் உள்ளது.

சேக்கிழார் பெருமான் குறிப்பிடும் நாகப்பட்டினத் திருநகர "நுளைபாடி" என்பது தற்போது "நம்பியார்நகர்" என்று வழங்கப்படுகின்றது. இது நாகப்பட்டின நகரின் ஒரு பதியாகும்.
ஏழு விடங்கத் தலங்களுள் ஒன்று. (தியாகராஜர் - சுந்தர விடங்கர், நடனம் - பாராவாரதரங்க நடனம்).
கயிலையையும், காசியையும் போல இத்தலம் முத்தி மண்டபத்தைக் கொண்டுள்ளது.
மூவர் பெருமக்களால் பாடல் பெற்றத் திருத்தலம்.

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் பாடல்களும் பெற்றத் தலம்.
இத்தல ரதம் கண்ணாடித் தேராகும்.
ஏழு கல்வெட்டுகள் படியெடுக்கப் பட்டுள்ளன.
 முதல் இராசராசன், குலோத்துங்கன் முதலியோர் காலத்துக் கல்வெட்டுக்கள் அவை.
சோழ மன்னர்களின் தலைநகரங்களுள் ஒன்றாகவும் இவ்வூர் விளங்கியுள்ளது.

நாகப்பட்டினத்துச் சோழன் பிலத்துவாரத்தால் நாகலோகம் சென்று நாககன்னியைக் கூடிப்பெற்ற புதல்வனே தொண்டை நாட்டை அரசாண்ட இளந்திரையன் எனப் பத்துப்பாட்டால் அறிகிறோம்.
குறுந்தொகைப் புலவர் ஒருவரின் பெயர் நன்நாகையார் எனக் கூறப்படுகிறது.

நகரின் மத்தியில் இக்கோயில் 180 மீட்டர் நீலம், 75 மீட்டர் அகலம் நிலப்பரப்பு கொண்டு, இரண்டு பிரகாரங்களுடன் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.

வைகாசியில் பிரமோற்சவமும், ஆனி ஆயில்யத்தில் புண்டரீக மகரிஷி ஐக்கியமும், ஆனி கிருஷ்ண பக்ஷ அஷ்டமியில் பஞ்சக் குரோச உற்சவமும் நடைபெறும். அப்போது, சாலீசுகனுக்குத் திருமணக்காட்சி அளித்த பின், பல்லக்கில் புறப்பட்டு, பஞ்சகுரோச யாத்திரையாக, பொய்யூர், பாப்பாகோவில், சிக்கல், பாலூர், வடகுடி, தெத்தி, நாகூர் ஆகிய தலங்களுக்குச் சென்று, மறுநாள் காலை, நாகை அடைந்து, கோபுர வாசல் தரிசனம் நடைபெறுகிறது. ஆவணியில் அதிபத்த நாயனார் விழாவும், ஆடி - தை அமாவாசை மற்றும் மாசி மக நாட்களில் சமுத்திர தீர்த்த வாரியும், தியாகராஜப் பெருமானுக்குப் பங்குனி உத்திர விழாவும் சிறப்பாக நடைபெறுகின்றன. 

கார்த்திகை சோமவாரங்களில் சங்காபிஷேகம் நடைபெறுகிறது.
நாகைக்காரோணப் புராணம் 61-படலங்களையும், 2506 பாடல்களையும் கொண்ட இந்நூல் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களால் இயற்றப் பெற்று 1860 அரங்கேற்றம் பெற்றது.

மகாவித்துவான் பிள்ளை அவர்களின் மாணாக்கரான டாக்டர் உ.வே. சுவாமிநாத ஐயர் அவர்கள், இப்புராணத்தின் அருமை பெருமைகளைப் பின்வருமாறு விளக்கியுள்ளார்கள்:

“இந்நூலில் பல நயங்கள் மிகுந்துவிளங்கும். சொல்லணி, பொருளணி, தொடைநயம், பொருட்சிறப்பு, சுவைநயம், நீதி, சிவபக்தி, சிவத்தலச்சிறப்பு, நாயன்மார் பெருமை முதலிய பலவும் நிரம்பியுள்ளன. 

சுவைப் பிழம்பாக விளங்கும் இக்காப்பியத்தைப் பெறுதற்குத் தமிழ்நாடு தவம் செய்திருக்க வேண்டும். 
பல புலவர்களின் வாக்குகளை ஒருங்கே பார்த்து மகிழ வேண்டுபவர் இந்நூலைப் படித்தால் போதும்.”
ஞானசம்பந்தர் அருளிய திருமுகப் பாசுரத்தின் ஒவ்வோரு பாடலுக்கும் சேக்கிழார் விரிவுரை செய்ததைப் போலப் பிள்ளை அவர்களும், சுந்தரர் இத்தலத்தின் மீது அருளிய பதிகத்தின் ஒவ்வொரு பாடலுக்கும் இப்புராணத்தில் விளக்கம் அளித்துள்ளது அறிந்து மகிழத்தக்கது.

2506 பாடல்களைக் கொண்ட இப்புராணத்தைத் திருவாவடுதுறை ஆதீனம், 1970 ம் ஆண்டு, குறிப்புரையுடன் வெளியிட்டுத் தமிழ் கூறு நல்லுலகிற்குத் தந்து பேருபகாரம் செய்தது, நன்றியுடன் இங்கு நினைவுகூரத் தக்கது.

கற்றார் பயில் கடல் நாகைக்காரோணம் என்பது திருஞானசம்பந்தர் திருவாக்கு. காளமேகப் புலவர் இவ்வூருக்கு வந்தபோது பசியால், வீதியில் பாக்கு விளையாடும் பாலகர்களை நோக்கிப் "சோறு எங்கு விக்கும்?" என்று கேட்டார். அச்சிறுவர்கள் தொண்டையில் விக்கும் என்று பதில் கூறினர். (விற்கும் என்பது பேச்சு வழக்கில் விக்கும் என வழங்குதலும் உண்டு.) புலவர் சிறுவர்கள் மீது கோபங்கொண்டு, அவர்கள் மீது வசைபாடும் பொருட்டு வரைசுவரொன்றில் "பாக்குத் தறித்து விளையாடும் பாலகர்க்கு..." என்று எழுதி நிறுத்தி விட்டு, பசிதீர்ந்து எஞ்சிய பகுதியைப் பாடி முடிப்போம் என்று சென்று, பசியாறி வந்து பார்க்கும்போது, அப்பாடலின் இரண்டாமடி "நாக்குத் தமிழுரைக்கும் நன்னாகை" என்று எழுதி இருப்பதைக் கண்டு, சிறுவர்களின் கல்வியறிவை மெச்சிச் சென்றார் என்பது தனிப்பாடல் திரட்டில் காணப்படும் வரலாறு.

அமைவிடம்
நாகப்பட்டிணம் இரயில் நிலையதிலிருந்து, இக்கோவில் 2-கி.மீ. தூரத்தில் உள்ளது. சென்னை, கும்பகோணம், தஞ்சாவூர், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, மயிலாடுதுறை முதலிய இடங்களிலிருந்து பேருந்து வசதி உள்ளது.

திருத்தலப் பாடல்கள்

இத்தலம் பற்றிய தேவாரப் பதிகங்கள் சிலவற்றைக் கீழே காணலாம்:
திருநாவுக்கரசர் பாடிய பதிகம்
மனைவிதாய் தந்தை மக்கள் மற்றுள சுற்ற மென்னும் 
வினையுளே விழுந்த ழுந்தி வேதனைக் கிடமா காதே 
கனையுமா கடல்சூழ் நாகை மன்னுகா ரோணத் தானை 
நினையுமா வல்லீ ராகில் உய்யலாம் நெஞ்சி னீரே. 
வையனை வைய முண்ட மாலங்கந் தோண்மேற் கொண்ட 
செய்யனைச் செய்ய போதிற் திசைமுகன் சிரமொன் றேந்துங் 
கையனைக் கடல்சூழ் நாகைக் காரோணங் கோயில் கொண்ட 
ஐயனை நினைந்த நெஞ்சே அம்மநாம் உய்ந்த வாறே..
திருஞானசம்பந்தர் பாடிய பதிகம்
புனையும் விரிகொன்றைக் கடவுள் புனல்பாய 
நனையுஞ் சடைமேலோர் நகுவெண் டலைசூடி 
வினையில் லடியார்கள் விதியால் வழிபட்டுக் 
கனையுங் கடல்நாகைக் காரோ ணத்தானே. 
பாரோர் தொழவிண்ணோர் பணியம் மதில்மூன்றும் 
ஆரார் அழலூட்டி அடியார்க் கருள்செய்தான் 
தேரார் விழவோவாச் செல்வன் திரைசூழ்ந்த 
காரார் கடல்நாகைக் காரோ ணத்தானே..
சுந்தரர் பாடிய பதிகம்
பத்தூர்புக் கிரந்துண்டு பலபதிகம் பாடிப் 
பாவையரைக் கிறிபேசிப் படிறாடித் திரிவீர் 
செத்தார்தம் எலும்பணிந்து சேவேறித் திரிவீர் 
செல்வத்தை மறைத்துவைத்தீர் எனக்கொருநா ளிரங்கீர் 
முத்தாரம் இலங்கிமிளிர் மணிவயிரக் கோவை 
அவைபூணத் தந்தருளி மெய்க்கினிதா நாறுங் 
கத்தூரி கமழ்சாந்து பணித்தருள வேண்டும் 
கடல்நாகைக் காரோணம் மேவியிருந் தீரே..

விழாக்கள்
வைகாசி விசாகத்தில் பெருந்திருவிழா நடைபெறுகிறது. வருடா வருடம் ஆனி மாதம் நடைபெறும் பஞ்சகுரோச விழாவில் பெருமான் சாலிசுக மன்னனுக்கு திருமணக் கோலத்துடன் காட்சி கொடுத்து முக்தி மண்டபத்திலிருந்து அதிகாலை புறப்பட்டு பஞ்சகுரோச யாத்திரைத்தலங்களாகிய பொய்கைநல்லூர், பாப்பாகோவில், சிக்கல், பாலூர், வடகுடி, தெத்தி, நாகூர் ஆகிய சப்த ஸ்தலங்களுக்கும் சென்று தீர்த்தம் கொடுத்து மறுநாள் காலையில் வந்து காரோணப் பெருமான் கோபுர வாசலில் சாலிசுக மன்னனுக்கும், பக்தர்களுக்கும் காட்சி கொடுப்பதை பஞ்ச குரோச விழாவாகக் கொண்டாடுகின்றனர். நீலாயதாட்சி அம்மனுக்கு ஆடி மாதம் பரணி நட்சத்திரம் கூடிய நாளில் தொடங்கி 10 நாள் விழா சிறப்பாக நடைபெறும்.

நகரிலுள்ள கோயில்கள்

நாகப்பட்டினம் நகரில் கீழ்க்கண்ட 12 சிவன் கோயில்கள் உள்ளன.
அமரநந்தீஸ்வரர் கோயில் (நீலா கீழ வீதி தேரடி அருகில்)
வீரபத்திரசுவாமி கோயில் (நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் அருகில்)
நடுவதீஸ்வரர் கோயில் (தேசீய மேல்நிலைப்பள்ளி பின்புறம்)
காயாரோகணசுவாமி கோயில் (நீலாயதாட்சி அம்மன் கோயில்)
மலையீஸ்வரர் கோயில் (நீலா தெற்கு மட வளாகம்)
அழகியநாதசுவாமி கோயில் (அழகர் சன்னதி)
கட்டியப்பர் கோயில் (குமரன் கோயிலுக்கு வடபுறம்)
நாகநாதசுவாமி கோயில் (நாகநாதர் சன்னதி)
சட்டையப்பர் கோயில் (எல்.ஐ.சி.கட்டடத்தின் எதிர் தெரு)
சொக்கநாதசுவாமி கோயில் (அக்கரைக்குளம் அருகில்)
அகஸ்தீஸ்வர சுவாமி கோயில் (வெளிப்பாளையம் சிவன் கோயில்)
காசி விஸ்வநாதர் கோயில் (நீலாயதாட்சி அம்மன் கோயில் தென்புறம்)
நீலாயதாக்ஷி அம்மன் கோவில் நாகப்பட்டினம் 
நீலாயதாட்சி அம்மன் கோவில், நாகப்பட்டினம்

பெயர்:
நீலாயதாக்ஷி அம்மன் கோவில்
அமைவிடம்
அமைவு:
நாகப்பட்டினம் , தமிழ்நாடு
மூலவர்:
நீலாயதாக்ஷி அம்மன்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டிடக்கலை வடிவமைப்பு:
கோவில்

நாகைக்காரோணம் என்கின்ற நாகப்பட்டினம் சப்தாவிடங்க தலங்களில் ஒன்றாகும். 
இங்குள்ள ஸ்ரீ நீலாயதாக்ஷி சமேத ஸ்ரீ காயாரோகணேஸ்வரர் திருக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற சிவஸ்தலம். 
இந்த கோவில் மதுரை மீனாக்ஷி அம்மன், காஞ்சி காமாக்ஷி அம்மன் மற்றும் காசி விசாலாக்ஷி அம்மன் கோவில்களை போல நீலாயதாக்ஷி அம்மன் கோவில் என்று தான் அழைக்கப்படுகிறது.  

மூலவர் – ஸ்ரீ காயாரோகணேஸ்வரர் ( ஆதிபுராணர் ), அம்பாள் –ஸ்ரீ நீலாயதாக்ஷி ( கருந்தடங்கண்ணி ), ஸ்ரீ தியாகராஜர் (சுந்தரவிடங்கர்),  நடனம் – தரங்க நடனம். சப்தவிடங்கத் தலங்களில் இரண்டாவது தலம். கடற்கரை வீசி நடனம் – பாராவாரதரங்க நடனம் ( கடலில் அலை ஆடுவது போல் ).

தலமரம் – மாமரம்,  தீர்த்தம் – புண்டரீக தீர்த்தம் ,தேவ தீர்த்தம்,  புராண பெயர் - நாகை காரோணம்
தற்போதைய பெயர் - நாகப்பட்டினம், மாவட்டம் - நாகப்பட்டினம், மாநிலம் - தமிழ்நாடு
பாடியவர்கள்

சம்பந்தர்.  தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 82வது தலம்.
. சோழ மன்னர்களின் தலைநகரங்களுள் ஒன்றாக விளங்கிய தலம் 
புண்டரீக முனிவரை இறைவன் தன் மேனியில் ஆரோகணம் செய்து கொண்ட தலம் 
சிறப்பு மூர்த்தியாக நாகாபரணப் பிள்ளையாரும் அருள்புரியும் தலம் 
இத்தலத்து விருட்சமான மாமரம், இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு என மூன்று சுவைகளுடன் இருக்கிறது. இம்மரம் கோயிலின் தென்கிழக்கு பிரகாரத்திலிருந்து பார்க்கும் போது, நந்தி வடிவில் தோற்றமளிக்கிறது

தல சிறப்பு
இக்கோயில் முகப்பிலுள்ள விநாயகர், உடலில் நாகத்தை ஆபரணமாக சூடி, தலைக்கு மேலே, மற்றொரு நாகம் குடை பிடித்தபடி இருக்க அதன் கீழே காட்சி தருகிறார். எனவே இவர், "நாகாபரண விநாயகர்' என்று அழைக்கப்படுகிறார். நாகதோஷம் உள்ளவர்கள் இவருக்கு, ராகு காலத்தில் பாலபிஷேகம் செய்வித்து வேண்டிக்கொள்கிறார்கள். ராகு, கேது பெயர்ச்சியின்போது இவருக்கு விசேஷ பூஜைகளும் நடக்கிறது.

கோயில்களில் நாய் வாகனத்துடன் காட்சி தரும் பைரவர், இங்கு சிம்ம வாகனத்துடன் காட்சி தருகிறார். புண்டரீக தீர்த்தக்கரையில் இவரது சன்னதி இருக்கிறது. புண்டரீகர், சிவனை வழிபட்டபோது, காசியின் கங்கை தீர்த்தம் இங்கு பாதாளத்திலிருந்து பொங்கியது. அப்போது, கங்கைக்கரையில் உள்ள பைரவரும், இங்கு எழுந்தருளினார். இவரே இங்கு, "காலசம்ஹார பைரவராக' அருளுகிறார். இவருக்கு பின்புறம் சிம்ம வாகனம் இருக்கிறது. 

காலனை (எமன்) சம்ஹாரம் செய்த சிவனே, இங்கு பைரவர் வடிவில் அருளுவதாக ஐதீகம்.
 இவர் எமனுக்குரிய தென்திசையை நோக்கியிருப்பதால், ஆயுள் பலம் கிடைக்க இவரிடம் வேண்டிக்கொள்ளலாம். இவர் உக்கிரமானவராக காட்சி தருவதால், சாந்தமாக்க எதிரில் இரண்டு விநாயகர்களை ஒரு சன்னதியில் பிரதிஷ்டை செய்துள்ளனர். 
பிரகாரத்தில் எட்டு கரங்களில் ஆயுதங்களுடன், "அஷ்டபுஜ பைரவர்', அஷ்டபுஜ காளிக்கும் சன்னதி இருக்கிறது.
எண்திசைகளுக்கு அதிபதிகளான அஷ்டதிக் பாலகர்கள், இங்கு சிலை வடிவில் காட்சி தருகின்றனர். 
நான்கு தந்தங்கள் கொண்ட, இரண்டு யானைகள் அபிஷேகம் செய்தபடி இருக்க, இரு கால்களையும் தொங்கவிட்டபடி உள்ள கஜலட்சுமியையும் இங்கு தரிசிக்கலாம். 

சுவாமி கோஷ்டத்தில் 8 சீடர்களுடன் தட்சிணாமூர்த்தி இருக்கிறார்.
சுவாமி சன்னதி முன்மண்டபத்தின் மேல் பகுதியில் 12 ராசி சக்கரம் உள்ளது. 
மாசி மகத்தன்று, சிவன் கடலுக்குச் சென்று, தீர்த்தமாடும் வைபவம் நடக்கும். 
இங்குள்ள ஆறுமுகர் சிலை, திருவாசியுடன் சேர்த்து 12 கரங்களில், ஆயுதங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. 
பிரகாரத்தில் அதிபத்த நாயனார் , வல்லப கணபதி , அகோர வீரபத்ரர் , ஆத்மலிங்கம் , பிள்ளையார் , பழநியாண்டவர் , இடும்பன் சந்நிதிகள் உள்ளன 

ராஜதானி மண்டபத்தில் விநாயகர் , வள்ளி-தெய்வயானையுடனான மயில் மீதமர்ந்த பெரிய மூர்த்தமான ஆறுமுகர் , காசி விஸ்வநாதர் , பைரவர் முதலானோரின் சந்நிதிகள் உள்ளன.

துவாரபாலகர்களின் அருகில் ஒருபுறம் விநாயகரும் , மற்றொருபுறம் அதிகார நந்தியும் உள்ளனர் 
உள்பிரகாரத்தில் சூரியன் , அறுபத்துமூவர் , மாவடிப்பிள்ளையார் , வெண்ணெய்ப்பிரான் , அருணாச்சலேஸ்வரர் , பைரவர் , கஜலக்ஷ்மி முதலானோரின் சந்நிதிகள் உள்ளன 

நவக்கிரகங்கள் அனைத்தும் ( மூன்று வரிசையாக ) சிவனாரை நோக்கியவாறு மேற்கு நோக்கியிருக்கிவாறு அமைந்துள்ளன. 
சண்டிகேஸ்வரர் சன்னதி, கோஷ்டத்தை ஒட்டி இல்லாமல் பிரகாரத்திலிருந்து விலகியுள்ளது.
சனைச்சரன் சந்நிதி 
நடராஜர் சபை 

பிட்சாடனர் , சிவகாமி அம்மையுடனான நடராஜர் , காட்சி நாயகர் முதலானோரின் உற்சவ மூர்த்தங்கள் 
மூலவர் பெரிய பாணத்துடன் கிழக்கு நோக்கியும் , அம்பாள் தெற்கு நோக்கியும் திருக்காட்சி தருகின்றனர் 
மூலவரின் பின்புறம் தனி மாடத்தில் சிவனார், அம்மை மற்றும் கந்தருடன் அமர்ந்த கோலமான சோமாஸ்கந்தர் திருவடிவம் உள்ளது 

அம்பிகை, இத்தலத்தில் திருமணப்பருவத்திற்கு முந்தைய கன்னியாக, 'யவ்வன பருவ' கோலத்தில் காட்சி தருகிறார். எனவே ஆடிப்பூர விழா இங்கு வெகு விமரிசையாக நடக்கிறது.

அம்பாள் எதிரிலுள்ள நந்தி தன் கழுத்தை முழுமையாக திருப்பி, சிவன் சன்னதியை பார்த்தபடி இருக்கிறது. நந்தியின் இடது கண் சிவனையும், வலக்கண் அம்பிகையையும் பார்த்தபடி அமைக்கப்பட்டிருப்பது சிறப்பான அமைப்பு. எனவே, இந்த நந்தியை "இரட்டைப் பார்வை நந்தி' என்று அழைக்கிறார்கள். கண் தொடர்பான நோய்கள் நீங்க, இந்த நந்தியிடம் வேண்டிக்கொள்ளலாம்.
மூலவர் சந்நிதிக்குப் பக்கத்தில் தியாகராஜர் சந்நிதி சிறப்புடன் அமைந்துள்ளது. இத்தலத்தில் வைகாசி விசாக விழாவின்போதும், மார்கழி திருவாதிரையன்றும் சுவாமியின் வலது கை மற்றும் பாதத்தை தரிசிக்கும்படியாக அலங்காரம் செய்கிறார்கள். இந்த இரண்டு நாட்கள் மட்டுமே தியாகராஜரின் இந்த கோலத்தை தரிசிக்க முடியும். விழாவின்போது இவர் அலைபோல முன்னும், பின்னுமாக வீசியவாறு நடனமாடி வருவார். 

கோஷ்ட மூர்த்தங்களாக தட்சிணாமூர்த்தி , லிங்கோத்பவர் , பிரம்மன் , துர்க்கை , அர்த்தநாரீஸ்வரர் , பிட்சாடனர் முதலியோர் திருக்காட்சி
வைகாசி விசாக திருவிழா மிகவும் பிரசித்தம்.

சிறப்பு
அதிபத்த நாயனாருக்கு சிவனார் அருள் செய்த விழா ஆவணி மாதத்தில் நடக்கிறது. அதிபத்த நாயனார் வாழ்ந்த இடம் – செம்படவர்சேரி – தற்போது நம்பியாங்குப்பம் என்று அழைக்கப்படுகிறது 
ஆதிசேஷன் வழிபட்ட தலம் 
சக்திபீடங்களில் ஒன்றான தலம் 

இது சிவன் கோவில் ஆனாலும், மக்கள் நீலாயதாக்ஷி அம்மன் கோயில் என்றே அழைக்கின்றனர் 
கயிலையும் , காசியும் போல இத்தலமும் முக்திமண்டபத்துடன் திகழ்கிறது 
சப்தரிஷிகளுக்கும் சிவனார் சோமாஸ்கந்தராய் காட்சியளித்த தலம் 
சாலிசுக மன்னனுக்கு கல்யாண கோலம் காட்டும் பஞ்சக்குரோச யாத்திரையாகிய சப்தஸ்தான விழா நடைபெறுகிறது 
தசரதன் சனீஸ்வரரை  பிரதிஷ்டை செய்து வழிபட்ட தலம் 

அம்பாள் , முருகன் , திருமால் , அகத்தியர் , வசிஷ்டர் , முசுகுந்தன் , அரசகேசரி , விசித்திரகவசன் , விரூரகன் , பத்திரசேனன் , பாற்கரன் , மித்திரன் , காளகண்டன் , சண்டதருமன் முதலியோர் வழிபாட்டு அருள்பெற்ற தலம் 
வைகாசியில் திருக்கல்யாண விழா, ஆடிப்பூரம், சிவராத்திரி, ஐப்பசியில் அன்னாபிஷேகம், திருக்கார்த்திகை முதலான உற்சவங்கள். 

கோயில்களில் திருவிழாவின் போது, சுவாமி மாடவீதிகளைச் சுற்றிவிட்டு கோயிலுக்குத் திரும்பிவிடுவார். ஆனால், இக்கோயிலில் இங்கிருந்து கிளம்பும் சுவாமி, நாகையைச் சுற்றியுள்ள பொய்கைநல்லூர், பொறவாச்சேரி, சிக்கல், பாலூர், வடகுடி, தெத்தி, நாகூர் என ஏழு ஊர்களுக்குச் சென்றுவிட்டு கோயிலுக்குத் திரும்புகிறார். சாலிச மகாராஜா இந்த ஏழு தலங்களில் சிவபூஜை செய்தபின்பு, சிவன் இங்கு திருமணக்கோலத்தில் காட்சி தந்தார். இதன் அடிப்படையில், சுவாமி 7 ஊர்களைச் சுற்றி வருகிறார்.

செய்த பாவத்திற்கு மன்னிப்பும், முக்தியும் கிடைக்க வழிபடவேண்டிய தலம் 
சிவன் கோயில்களில் பிரதோஷத்தின்போது, சிவன் ரிஷப வாகனத்தில் செல்வது வழக்கம். ஆனால் இக்கோயிலில் மோகினி வடிவில் பெருமாளும் புறப்பாடாகிறார். பிரதோஷ வேளைக்கு முன்பாக, பெருமாளின் மோகினி அவதாரம் நிகழ்ந்ததால், பிரதோஷத்தன்று மோகினி வடிவில் பெருமாள் புறப்பாடாகிறார். இவரை பிரதோஷத்தின்போது மட்டுமே தரிசிக்க முடியும். மற்ற நாட்களில் சிவனாரின் மூலஸ்தானத்திற்குள் வைத்துவிடுகின்றனர்.

அழுகுணி சித்தர்
அழுகுணி சித்தரின் ஜீவசமாதி இக்கோயிலில் உள்ளது. வைகாசி விசாகத்தன்று இவருக்கு யாகம் மற்றும் விசேஷ பூஜைகள் நடத்தப்படுகிறது. பவுர்ணமிதோறும் பாயச நைவேத்யம் படைத்து, விசேஷ பூஜை செய்து வழிபடுகின்றனர்.
* இத்தலத்தில் திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட சௌந்தரராஜப் பெருமாள் கோயில், நாகநாதர் கோயில் , அழகியநாதர் கோயில் , அமரநந்தீசர் கோயில் , கைலாசநாதர் கோயில் , விஸ்வநாதர் கோயில் , மேலைக்காயாரோகணர் கோயில்,மிகவும் சிறப்பு வாய்ந்த ஸ்ரீ நெல்லுக்கடை மாரியம்மன் கோவில், காளியம்மன் கோவில், முதலான ஆலயங்களும் இத்தலத்தில் உள்ளன.

திருநாகை திருக்காயாரோகண சுவாமி திருக்கோயிலில் 
நீலாயதாக்ஷி அம்மனுக்கு ஆடிப்பூரம் (பூரம் கழித்தல்)

நீலாயதாக்ஷி அம்மனுக்குஆடிப்பூரம் கொடி ஏற்றுவதிலிருந்தே களை கட்ட ஆரம்பிக்கும்.விழா ஆரம்பநாள் முதல் காலையிலும், இரவிலும் அம்மன் வித விதமான அலங்காரத்துடனும், வித விதமான வாகனங்களுடனும், பரிவாரத்துடன் நகரில் ஊர்வலம் வரும் காட்சி அற்புதமாக இருக்கும்.அம்மன் முன்னும் பின்னும் நாதஸ்வர கலைஞ்ர்களும்,ஓதுவார்களும் வாசித்தபடி ,ஓதியபடி வருவர்.நான்கு வீதிகளிலும் மேடை அமைத்து கச்சேரி நடக்கும்.இரவில் கச்சேரி நடந்து ஸ்வாமி கோவிலை திரும்ப அடைய விடிகாலை ஆகி விடும்.கச்சேரியை கேட்க பக்கத்து ஊர்களிலிருந்தெல்லாம் ஜனங்கள் வந்து விடிய விடிய கேட்டு செல்வார்கள்.அவரவர் வீட்டு கல்யாணம் போல காலை,மாலை என்னேரமும் கோவிலில் திரளாக கூட்டம்! மக்கள் தங்கள், தங்கள் வீட்டு வாசல் முன் நீர் தெளித்து கோலமிட்டு விமரிசையாக வரவேற்பர்..ஆடிப்பூரம் அன்று காலை அம்மன் அலங்காரமாக கோவில் பிரகாரத்தில் வரும்போது AKC நடராஜன் க்ளாரினெட் வாசிப்பார். அம்மன் வசந்த மண்டபத்தில் ஊஞ்சலில் அமர்ந்து காட்ஷி தருவாள் நீலாயதாக்ஷி அம்மனின் பின்னலங்காரம் மிக விசேஷமாக இருக்கும்.அதை காணும் விதத்தில் சுற்றீவர கண்ணாடிகள் வைக்கப்படும். ஆடிப்பூரம் கழிப்பு காலை 1 மணிக்குள் முடியும்.

இரவில் வான வேடிக்கைகள் நடக்கும்.
ஆடிப்பூரத்தன்று இரவு ஸ்ரீ நீலாயதக்ஷி அம்மன் வெண்மைநிற ஜரிகை புடைவையை அணிந்து, பின்னால் அழகிய ஜாடை தரித்து ஜெகஜோதியாய் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பீங்கான் ரதத்தில் ஊர்வலம் வருவார். பார்க்க பார்க்க அலுக்காத ஸ்வரூபம்

ஓம் நமசிவாய தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவருக்கும் இறைவா போற்றி போற்றி 
காவாய் கனக திரளே போற்றி கயிலை மலையானே போற்றி

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.